Recent Comments

    வத்தாளைக் கிழங்கு

    வத்தாளைக் கிழங்கு பசி போக்குவதில் பெரும் பங்கு வகிக்கக் கூடியது. உருளைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு போல, மாப்பொருளை வழங்குவதற்குரிய முக்கிய உணவுப் பொருளாக இதை வளர்க்கலாம்.

    கொடியாக வளரும் இதன் கொடிகளின் கணுக்களை மண்ணில் புதைக்க, அவையும் வேரூன்றிக் கிழங்குகளாகும். இவற்றின் குருத்துக்களை பிலிப்பைன் நண்பர்கள் என்னிடம் வாங்கிக் கொள்வர். அவர்கள் இந்தக் குருத்துப் பகுதிகளைச் சமைத்து உண்பர். இதன் இலைகள் மனிதர்களுக்கு மாத்திரம் அல்ல பன்றி கோழி முயல்களுக்கும் முக்கிய உணவு.

    Sweet Potato எனப்படும் இது பல்வேறு வகைகளில் உண்டு. கொரியா நாட்டு வகை ஒன்று இராச வள்ளிக் கிழங்கு போல ஊதா நிறம் நிறைந்தது. நான் அடிக்கடி நடுவது இது தான். இதை விட, மஞ்சள், வெள்ளை சதை உடையனவாகவும், மஞ்சள், ஊதா தோல் உடையனவவாகவும் இருக்கும்.

    வட அமெரிக்காவில் இந்த வத்தாளைக் கிழங்கில், குருத்துப் பச்சை, மற்றும் கருஊதா நிற இலைகளைக் கொண்ட வகைகள் பெரும்பாலும் அலங்காரப் பூக்கன்றுகளாக இங்கே நடுவார்கள். பெரும்பாலும் பொதுக்கட்டடங்கள், வீதிகளில் பூக்கன்றுகளால் அலங்காரம் செய்யப்படும் இடங்களில் இவற்றைக் காணலாம். தொங்க விடும் பூஞ்சட்டிகளிலும் இவை விற்பனை செய்யப்படுகின்றன.

    இவற்றிலிருந்தும் கிழங்குகள் கிடைத்த போதிலும், பெரும்பாலும் எவருமே அதைப் பற்றி அக்கறை கொள்வதில்லை. இங்கு கொட்டும் பனிக்குள் அவை அழுகிப் போய் விடும்.

    படத்தில் இருப்பது இவ்வாறான வத்தாளையை வாங்கி நட்டு விளைந்தவையே.

    வத்தாளையை நடுவது பற்றிய விபரம் தெரியாமல் நானும் கிழங்கொன்றை வாங்கி முதன் முதலாக நட்டேன். அது முளைத்து வர கோடையும் முடிந்து விட்டது.

    வத்தாளை நடுவது கிழங்குகளிலிருந்து அல்ல என்பதைப் பிறகு தான் தெரிந்து கொள்ள முடிந்தது.

    வத்தாளைத் தண்டுகளை வெட்டி, நீரில் வைத்தால் தானாக வேர் வரும். அதை நடலாம்.

    கனடா போன்ற குறைந்த கோடை காலம் உள்ள குளிர் வலய நாடுகளில், இந்தக் கிழங்கை கிளாஸ் போன்ற பாத்திரம் ஒன்றில் அரைவாசி நீரில் உள்ளே இருக்கக்கூடியதாக மாசி மாதம் அளவில் வைக்க வேண்டும்.

    அல்லது சட்டி ஒன்றுக்குள் மண் நிரப்பி அதில் அரைப் பகுதியை மண்ணால் மூடி ஈரப்படுத்தி ஜன்னல் ஓரமாக வைக்க வேண்டும்.

    கிழங்கிலிருந்து உருளைக்கிழங்கில் வருவது போல, முளைகள் வரும். அந்த முளைகளை முறித்து நட்டுத் தான் வத்தாளைக் கிழங்குகள் பயிரிடப்படுகின்றன.

    இவை வெப்ப வலயப் பகுதிக்குரியனவாதலால், குளிர் முடிந்த பின்னர் நட வேண்டும்.

    தோட்டங்களில் இது பெரும் இடத்தைப் பிடிக்கக் கூடியது. எனவே ஒரு கன்றே பரவிப் பரவிச் செல்லும் போது, அதன் கணுக்களை மண்ணுக்குள் புதைப்பதன் மூலம் நிறைய கிழங்குகளைப் பெறலாம்.

    இதை நடுவதற்கான மண், கிழக்கு வைக்கக் கூடியதாக ஆழமாகவும் சத்துள்ளதாகவும் இருக்க வேண்டும். உழுது பண்படுத்தப்பட்ட மென்மையான மண்ணாக இருக்க வேண்டும். களித்தன்மையுடைய மண் பெரும் விளைச்சலைத் தராது!

    கடைகளில் விற்கும் இந்தக் கிழங்குகளை விதைக்கு பயன்படுத்துவதாயின், முனைகள் வெட்டப்பட்டு காயப்படாத கிழங்குகளாக வாங்குங்கள். காயம் பட்ட கிழங்குகள் தண்ணீரிலும் ஈர மண்ணிலும் அழுகி விடும்.

    முக்கியமாக கடைகளில் விற்பனையாகும் கிழங்குகளில் கரிபியன் வாசிகளால் விரும்பி உண்ணப்படும் Yam எனப்படும் கிழங்கும் தோற்றத்தில் வத்தாளை போன்றதே. எனவே வாங்கும் போது, சரியான வத்தாளையை வாங்கிக் கொள்ளுங்கள்.

    பஞ்ச காலத்தில் பசி போக்குவது என்பதைத் தாண்டி உருளைக்கிழங்கை பல வகைகளில் replace பண்ணக்கூடியது. potato wedges, hash brown மிக சிறப்பு. மற்றையது கோழி இறைச்சிக் கறிக்கு தூக்கலாக இருக்கும். அதிகம் அவிய விடக்கூடாது.

    வத்தாளைக் கிழங்கின் உடல் ஆரோக்கிய பயன்கள் கருதி அதற்கான demand அதிகரிக்கிறது. Anti Inflammation குணம்கொண்ட உணவுகளின் பட்டியலில் உச்சத்தில் வரக்கூடிய ஒன்று. கான்சர் போன்ற நோய்களை தடுக்குமாம்.

    (ரூபசங்கரி வீரசிங்கம் ஞானசங்கரி வழங்கிய தகவல்களுடன்)

    Postad



    You must be logged in to post a comment Login