Recent Comments

    உடல் நலம் பெற நன்றாகத் தண்ணி அடியுங்கள்!

    ??????????????????????????????அட... தலையங்கத்திலும் எழுத்துப்பிழை!? உடல் நலம் பெற நன்றாகத் தண்ணீர் குடியுங்கள். தமிழ் மொழியின் வறுமை காரணமாயோ, பிழாவில் கள் குடித்த குடிகாரர்கள் கிளாசில் கசிப்பு குடிப்பதற்கு வசதியாகவோ, தண்ணீர் என்பதற்கு பல கருத்துக்கள் தமிழில் உள்ளன. நிறமே இல்லாத நீருக்கு பச்சை நிறம் சேர்த்தது தமிழ். உயிர் வாழ்வுக்கு தண்ணீர் அவசியம் என்று சொன்னால், குடிகாரர்களும் தங்கள் குடிவெறியை நியாயப்படுத்த ஆரம்பிப்பார்கள். பூமிக்கிரகத்தில் தண்ணீர் இருப்பதால் தான் உயிரினங்கள் தோன்ற ஏதுவாக இருந்தது. உடலில் அறுபது வீத நிறை நீராகும். உங்கள் உடலின் செயற்பாடு ஒவ்வொன்றுக்கும் நீர் அவசியம். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டு செல்வது முதல், உடலின் கழிவுகளை அகற்றுவது வரைக்கும், காது, மூக்கு, தொண்டையை ஈரலிப்பாக வைத்திருப்பது வரைக்கும் நீர் அவசியமானது. அப்பேர்ப்பட்ட பெருமை கொண்ட தண்ணீர் குடிகாரர்கள் கையில் அகப்பட்டு தண்ணியாகி.... அதிருக்கட்டும். ஒரு நாளைக்கு ஒருவர் எவ்வளவு நீர் குடிக்க வேண்டும் என்ற கேள்விக்கு பல விடைகள் கிடைக்கும். (தண்ணிச்சாமிகளிடம் கேட்டால் போத்தல் கணக்கில் பதில் கிடைக்கும்!) ஆனால் மேற்குலகில் ஒருவர் ஒருநாளைக்கு எட்டு அவுன்ஸ் நீர் நிறைந்த எட்டு கிளாஸ் குடிக்க வேண்டும் என்று விதிமுறையாய் நம்பிக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் தேவையான அளவு நீர் என்பது பல்வேறு காரணிகளில் தங்கியுள்ளது. உங்கள் ஆரோக்கியம் முதல் நீங்கள் வாழும் இடம் வரையுமான பல்வேறு காரணிகளில் நீங்கள் குடிக்க வேண்டிய நீரின் அளவு உள்ளது. உடலில் நீரின் அளவு குறைந்தால் உங்கள் உடல் சக்தி குறைந்து களைப்படையும். சாதாரணமாக சுவாசம், வியர்வை, சிறுநீர், மலம் என்பவற்றூடாக நீர் உடலிலிருந்து வெளியேறுகிறது. அந்த நீரின் அளவை நீர் மூலமாயும், நீர் கொண்ட உணவுகள் மூலமாயும் நிவர்த்தி செய்ய வேண்டும். சராசரியாக, வயதான ஆண்களுக்கு நாளாந்தம் மூன்று லீட்டர் நீரும், பெண்களுக்கு 2.2 லீட்டர் நீரும் அவசியம். நீரை அதிகமாய் அருந்துவதற்கான காரணிகள் எவை? உடற்பயிற்சி - கடுமையான உடற்பயிற்சி செய்வோர் வியர்வையில் வெளியேறும் சோடியத்தை நிவர்த்தி செய்ய சிறிதளவு உப்புப் போட்டு தண்ணீர் குடிக்கலாம். சுற்றாடல் - சூடான காலநிலையால் வியர்வை மூலமாய் நீர் வெளியேறலாம். குளிர்காலத்தில் வீட்டின் உள்ளே உள்ள சூடான காற்று உங்கள் தோலில் உள்ள நீர்த்தன்மையை வெளியேற்றலாம். எட்டாயிரம் அடிக்கு மேற்பட்ட உயரத்தில் இருக்கும்போது அடிக்கடி சிறுநீர் கழிப்பதாலும், அதிகளவு சுவாசத்தாலும் நீர் வெளியேறலாம். உடல் நலமின்மை - வயிற்றுப் போக்கு, வாந்தி காரணமாக நீர் வெளியேறலாம். சிறுநீர்ப்பைத் தொற்று, சிறுநீரில் கல் போன்றவற்றால் நீங்கள் அதிகளவு நீர் குடிக்க வேண்டி ஏற்படலாம். ஆனால், இருதயம், சிறுநீரகம், ஈரல் போன்றவற்றில் நோய் இருந்தால் உங்கள் உடலானது நீரை உறுஞ்சும் திறனை இழப்பதால், நீர் குடிப்பதை குறைக்க வேண்டியும் ஏற்படலாம். கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மாரும் அதிகளவு நீர் குடிக்க வேண்டும். கர்ப்பிணிகள் 2.3 லீட்டரும் பாலூட்டும் தாய்மார் 3.1 லீட்டரும் என சராசரி நீர் குடிக்க வேண்டும். ஆனால் உடலுக்குத் தேவையான நீர் திரவ வடிவத்தில் தான் இருக்க வேண்டும் என்றில்லை. வழமையில் உணவுகளில் இருபது வீதம் நீர். அதிலும் பழங்கள், மரக்கறிகளில் அதிகளவு நீர் உள்ளது. பால், ரசங்கள் என்பவற்றிலும் நீர் உள்ளது. குடிவகைகள், கோப்பி, தேநீர் போன்றவற்றில் நீர் அதிகளவு இருந்தாலும் அவற்றை அதிகளவு குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். நீர் தவிர்ந்த மற்றவற்றில் அதிகளவு கலோரிகள் உள்ளதால், அவற்றைத் தவிர்த்து நீரை அதிகளவு அருந்துததல் நன்று. நீரிழப்பைத் தவிர்க்கவும், உடலுக்கு தேவையான அளவு நீரைப் பெறவும், சாப்பாட்டின் போதும், உடற்பயிற்சிக்கு முன், பின்னாலும் நீர் அருந்துங்கள். ஆனாலும் நீரை அளவுக்கு அதிகமாக அருந்தக் கூடாது. சமீபத்தில் ஐரோப்பிய நாடொன்றில், பழைய மாணவர்களால் மிரட்டப்பட்ட புதிய மாணவன் ஒருவன் அதிகளவு நீர் குடித்து இறக்க நேரிட்டது. உங்கள் சிறுநீரகம் மேலதிக நீரை வெளியேற்ற முடியாவிட்டால், இரத்தத்தில் உள்ள உயிர்ச்சத்துக்களின் செறிவு குறைகிறது. இதனால் இரத்தத்தில் சோடியத்தின் அளவு குறைகிறது. சோடியம் தான் கலங்களின் உள்ளேயும் வெளியேயும் உள்ள நீரின் அளவைக் கட்டுப்படுத்துவதால், உடற் கலங்கள் வீங்க ஆரம்பிக்கின்றன. இதனால் உயிர் ஆபத்தும் ஏற்படலாம். எனவே குடிகாரர்களின் தண்ணியைப் போல, தண்ணீராலும் ஆபத்து நேரிடலாம். எனவே தாகத்துக்கு தண்ணியடிக்கப் போய், ஆபத்தில மாட்டிக்கிடாதீங்க!

    Postad



    You must be logged in to post a comment Login