Recent Comments

    முகாபே: ஓர் கறுப்புக் ஹிட்லரின் மரணம்

    க.கலாமோகன்

    சில தினங்களின் முன்பு ரொபேர்ட் முகாபே தனது 95 வயதில் மரணமாகியுள்ளார். நிச்சயமாகத் தனது நாட்டில் இல்லை. ஆசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில். சிம்பாபவேயில் (zimbabwe), இவரது நோயைக் கவனிக்க மருத்துவ நிலையங்கள் இல்லாது இருப்பதை இந்த மரணம் காட்டுகின்றது. ஆம்! ஆபிரிக்கத் தலைவர்கள் முதலாளித்துவ நாடுகளில் மருத்துவ உதவிகளைப் பெரும் வேளையில், இந்தக் கண்டத்தின் ஏழை  மக்கள் பணம் இல்லாதுவிடின் இறக்கும் நிலையிலேயே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    முகாபே 37 வருடங்கள் கொடூரமான ஆட்சியை நடத்தியவர். தொடக்கத்தில் மார்க்சிஸம், பின்பு ஹிட்லரிசம்தான் இவரது அரசியலாக இருந்தது. காலனித்துவ அரசியலுக்குக்கு எதிரான போராளியாக இவர் இருந்தார் என்பதை மறுக்கமுடியாது, பின்பு ஜனநாயக எதிர்ப்பின் கொடூரமான தலைவராக இருந்தார் என்பதையும், இனவெறி அரசியலைத் தனது நாட்டினார் என்பதையும் மறுக்க முடியுமா? இவர் ஹிட்லர் மீசையுடன்தான் இறந்தார் என்பது கவனிக்கப்படவேண்டியது.

    சில ஆண்டுகளின் முன்பு இவர் தனது பதவியில் இருந்து விரட்டப்பட்டார். இவரது பதவியைப் பிடித்தவர்  “முதளை” என அழைக்கப்படும் Emmerson Mnangagwa. இவர் நிச்சயமாக அரசியல் செய்ய வந்தவர் அல்ல, பதவி வெறியர். ஆபிரிக்காவில் நடக்கும் அனைத்து அரசியல்களும் ஜனநாயகத்தினைக்  கொலை செய்து நடத்தப்படுவனவே. சிம்பாபவேயில் புதிய பதவியைப் பிடித்தவர் இப்போது சித்திரவதை அரசியலை நடத்தத் தொடங்கியுள்ளார் என்பதைப் புதிய செய்திகள் காட்டுகின்றன.

    ஆபிரிக்காவில் ஓர் அரசர் விரட்டப்பட்டால் வேறு ஓர் அரசர் வருவார் என்பது திண்ணம். இந்த வேறு அரசர் நிச்சயமாக விரட்டப்பட்ட அரசரின் பிரதிநிதிதான்  என்பதை ஆபிரிக்க வரலாறுகள் காட்டுகின்றன. ஆபிரிக்காவின் முதலாளித்துவம் எப்போதுமே ஓர் அடிமைத்துவக் கொள்கையின் கட்டிலிலேயே வாழ்கின்றது என்பதை அங்கிருந்துவரும்  செய்திகள் காட்டவில்லையா? ஆம், நவ காலனித்துவத்தை எதிர்க்கும் போர்கள் இந்தக் கறுப்புக் கண்டத்தில் எரிக்கப்படுகின்றன.

    முகாபேயின் பிந்திய  அரசியல் இனவெறியிலும், பணவெறியிலும், பதவி வெறியிலும் இல்லாது இருப்பின், இவரால் ஆபிரிக்க நாடுகள்  பலவற்றில் ஜனநாயக விழிப்புகளை ஊட்டியிருக்கலாம். மார்க்சிஸக் கொள்கையில் அரசியல் தொடக்கி, சர்வாதியாரியாகவே இவர் இறந்திருக்கின்றார்.

    2017 இல், “தாயகம்” இதழில் “ரோபர்ட் முகாபே : ஒரு கறுப்பு கிட்லரா?” எனும்  தலைப்பில் இவர் மீதான கட்டுரையை எழுதியிருந்தேன். இவரை நினைத்து, இந்தக் கணத்தில் அந்தக் கட்டுரை உங்களது மீள் வாசிப்புக்காக….

    “ரோபர்ட் முகாபே : ஒரு கறுப்பு கிட்லரா?”

    35 வருடங்கள் ரோபர்ட் முகாபே ஆட்சியில் இருக்கின்றார். இந்த ஆட்சி நிச்சயமாக ஜனநாயக ஆட்சியாக இருக்கும் எனச் சொல்லமுடியாது.  ஜனநாயகம் என்பது பல நாடுகளில் விக்கி விக்கித்தான் வாழ்கின்றது. ஆபிரிக்காக் கண்டத்தில் இந்த அரசியல் கொள்கையைக் காணுவது கடினம். கறுப்புக் கண்டத்தின் நாடுகளது  ஜனாதிபதிகள் சாகும்வரை தங்கள் பதவியைப் பிடிக்கும் போக்கு உள்ளது.

    கமேருன் ஜனாதிபதி Paul  Biya 30 வருடங்களுக்கு மேல். அவர் தனது நாட்டை நடத்துவது வெளிநாடுகளில் இருந்துதான். சில ஜனாதிபதிகள் சாகும் வயதுக்கு வந்தாலும் ஜனநாயகம் பிறத்தல் பொய். அவர்களது பிள்ளைகளே பதவியைப் பிடித்துக் கொள்வார்கள்.

    இது ஆபிரிக்காவின் தலைவிதி. இந்தக் கண்டத்தில் புதிய எழுச்சிகளை, பதவிகளில் இருப்போர் அழித்து வருகின்றனர். முகபேயும் சாகும் வரை தனது பதவியில் இருப்பது முடிவு, அவருக்குப் பின் அவரது மனைவி…  Equatorial கினியா ஆவின் ஜனாதிபதியான Teodororo Obiang Nguema Mbasogo 38 வருடங்கள் மக்களினதும், மாற்றுக் கட்சிகளினதும் உரிமைகளை நசுக்கிக் கொண்டிருக்கின்றார். Gabon இல் Omar Bongo 30 வருடங்களைத் தாண்டியவர், காலமாகிவிட்டார், அவர் மகன் பதவியில். Omar  Bongo பிரான்சின் “அரசியலையும்” நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம், தனது லாபங்களுக்காக மிகப் பெரிய பிரான்ஸ் அரசியல்வாதிகளை ஆட்டிப் படைத்தவர்.

    Congo விலும் Gabon  நிலையே. இந்த நாட்டில் நிறைய மனிதக் கொலைகளும் நடக்கின்றது,  மிருகக் கொலைகளும் நடக்கின்றன.

    ஆபிரிக்க உலகின் நீள் பதவி வெறிகள் மனிதக்  கலாசாரத்தை மிகவும் வெ ருட்டிக்கொண்டுள்ளன, இந்தக்  கண்டத்தின் பொருளாதாரப் பெறுமானங்களை சாக் கிடங்கில் தள்ளுகின்றன. இந்த நீள் ஆட்சிகளால் ஆபிரிக்கர்கள் மீளவும் அடிமைகளாக  வருகின்றனர், அகதிகளாக வந்து கடல்களிலும் நிறையப்பேர் சாகின்றனர்.

    ரோபர்ட் முகாபே, காலனித்துவ ஆட்சியை எதித்தவர். தனது அரசியல் “மார்க்சிஸம்” என்று சொல்லி தன்னை “மார்க்ஸிட், லெனினிஸ்ட், மாஒஇஸ்ட்” என்று பிரகடனப்படுத்தியவர். நான் மார்க்சிசத்தை நிறைய விரும்புகின்றவன். ஆனால் இவர்  தனது நாட்டில் பிறந்த வெள்ளையர்களை எதித்துள்ளார். இது இவரது இனவாதம். இவர் கறுப்பு மக்களையும் வறுமையில் வாட்டுகின்றார். இந்த வாதத்தை வைத்துக்கொண்டு மார்க்சிஸ்ட் ஆக முடியாது.

    இன்று மீண்டும் ரோபர்ட் முகாபேயின் படத்தைப்  பார்த்தேன். அவர் கறுப்பு ஹிட்லராகவே தெரிகின்றார்.

    Postad



    You must be logged in to post a comment Login