Recent Comments

    வீட்டுக்காரிக்கு ஒரு வைப்பு

    வீடு வாங்கித் தர, உங்கள் தரகர் வார இறுதிகளில் உங்களை குடும்ப சமேதரராய் வீடு வீடாய் ஏற்றிப் பறிக்க, ஒருவாறாக உங்கள் கற்பனையில் வடிவெடுத்த மாளிகையைத் தேடிப் பிடித்திருப்பீர்கள். தேடிப் பிடித்தால் மட்டும் போதுமா? வீட்டில் மாமி, மாமா, மைத்துனர்கள் என்று எல்லோருக்கும் பிடிக்க வேண்டுமே (திருமணம் முடித்த பின்னால், விளக்கேற்ற வந்த மகாலட்சுமிகளால் அம்மா, அப்பா, சகோதரர்கள் மெதுவாகக் கழற்றப்பட்டிருப்பார்கள்!) என்று, அவர்களையும் அழைத்துச் சென்று காட்டி, அவர்களும் தங்களுக்கான அறைகள் விசாலமாய், கட்டிலில் படுத்திருந்தபடியே விஜய் டி.வி பார்க்கும் வசதிகள் எல்லாம் உண்டா என்று செக் பண்ணி ஓகே தருவதற்குள், காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போன மாதிரி, வேறு யாராவது வீட்டைக் கொண்டு போய்ச் சேர்த்திருப்பார்கள். வீட்டை உங்களுக்கு மட்டும் தான் விற்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்கு, வீட்டுக்காரிக்கு அச்சவாரம் கொடுக்க வேண்டும். அட, அந்த வடிவேலன் மனசு வைச்சுக் கொடுக்கிற அச்சாரம் இல்லை! வைப்புத் தொகை. அட, இதென்ன தலையிடி, தமிழில் சொற் பஞ்சம். வைப்பு என்றால் கருத்து வேறு என்கிறார்கள். ஓகே. வீட்டுக்காரிக்கு டிப்போசிட்! இந்த வைப்புத் தொகை அச்சாரமாக ஏற்றுக் கொள்ளப்பட்டால் தான் வீடு உங்களுக்கு விற்கப்படலாம். இல்லாவிடில், வீட்டுக்காரி, காத்திருந்த வேறு யாருக்காவது வைப்பு...! இதென்ன வம்பு?! ஒன்ராறியோவில் வீடு வாங்கும் ஒப்பந்தப்படி, வீடு வாங்கப் போவதாக நீங்கள் எழுதிக் கொடுக்கும்போது, (டீககநச) நீங்கள் வைப்புத்தொகையைச் செலுத்தலாம். அல்லது வீட்டுக்காரி உங்களது டீககநச ஐ ஏற்றுக் கொண்ட 24 மணி நேரத்திற்குள் செலுத்தலாம். அந்த வீட்டை வாங்க பலர் போட்டி போட்டுக் கொண்டிருந்தால், உடனடியாகவே வைப்புத் தொகையைச் செலுத்தும்படி வீட்டுக்காரி கேட்கலாம். (அதென்ன, வீட்டுக்காரி என்ற கேள்வி எழலாம். 1.சமத்துவம் கோரும் பெண் ணிய, புத்தி ஜீவிகளுக்காக... 2.வீட்டு மகாலட்சுமிகள் தானே பெரும்பாலான முடிவுகளை எடுக்கிறார்கள்! வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பது முதல் யாருக்கு வீடு விற்கப்படும் என்பது வரைக்கும்!) உங்கள் டிககநச ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னால், ஏதாவது காரணங்களுக்காக, (மாமிக்கு மாடிப்படி ஏறி இறங்க முடியாது போன்ற) மனதை மாற்றி, வைப்புத் தொகையை செலுத்த மறுத்து தப்பித்துக் கொள்ள முடியாது. வீட்டுக்காரி வீட்டை பின்னர் வேறு யாருக்காவது மலிவாக விற்க நேரிட்டால், ஏற்பட்ட நட்டம், சட்டச் செலவுகள் போன்றவற்றை உங்களிடம் கோரி வழக்குத் தொடரலாம். சில நேரங்களில் வைப்புத் தொகை கட்டத் தாமதமானால், உங்களுக்கு வீட்டை விற்க வீட்டுக்காரி மறுக்கலாம். வேறு யாராவது அதிக விலை கொடுக்கக் காத்திருந்தால் இது சாத்தியம். வைப்புத் தொகையைத் திரட்ட கால அவகாசம் தேவைப்பட்டால், Offer இல் அதைத் தெரிவியுங்கள். ரொறன்ரோ பகுதியில் ஐந்து வீதம், பிராம்ப்டன் பகுதியில் இரண்டு வீதம், ஒன்ராறியோவில் சில இடங்களில் சில நூறு டொலர்களையும் என அச்சாரமாகக் கொடுக்கலாம். இதெல்லாம் வீட்டுக்காரியுடன் ஒப்பந்தத்தின் போது முடிவு செய்யலாம். நீங்கள் கொடுக்கும் பணம், விற்பனை முகவரிடம் தான் நம்பிக்கைக் கணக்கில் வைப்பாக வைக்கப்படுகிறது. காரணம் நீங்கள் கொடுக்கும் பணத்துடன் வீட்டுக்காரர் தலைமறைவாகலாம். வங்குரோத்தாகலாம். வாங்கும் உங்களுக்குப் பாதுகாப்புக் கிடையாது. விற்பனை முகவரின் நிறுவனம் வங்குரோத்தானாலும், நீங்கள் பணத்தைப் பெறக் கூடியதாக காப்புறுதிப் பாதுகாப்புகள் உண்டு. சில நேரம் வீட்டுப் பரிசோதனையின் பின்னால், வீடு உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் வீட்டுக்காரி உங்கள் வைப்புப் பணத்தைத் தர மறுக்கலாம். வீட்டுச் சோதனயைச் சாட்டாக வைத்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறீர்கள் என்று வாதிடலாம். நீங்களும் வீட்டுக்காரியும் ஓருமித்த முடிவுக்கு வந்தால் வைப்புப் பணம் சுலபமாகக் கிடைக்கும். இல்லாவிட்டால், வீட்டுக்காரி இழுத்தடிக்க, நீதிமன்றம் ஏறி வழக்காட நேரிட்டு, நீதிபதியின் முடிவின் பின்னால் தான் பணம் உங்கள் கைக்கு கிடைக்கலாம். அல்லது பறிபோகலாம். இதற்கு சில நேரம் சில வருடங்களும் எடுக்கலாம். அதுவரைக்கும் அந்தப் பணம் முகவரின் நிறுவனத்தின் நம்பிக்கைக் கணக்கில் இருக்கும். (Trust Account) புத்திசாலித்தனமாக இரண்டு வைப்புகளை நீங்கள் வைத்து... சே... டிப்போசிட்டுகளை நீங்கள் கட்ட சம்மதிக்கலாம். முதலில் offer ஏற்றுக் கொள்ளப்படும்போது, ஒரு வீதமும் பின்னர் வீடு பரிசோனை போன்ற நிபந்தனைகள் திருப்தி பெறும்போது மீதித் தொகையையும் கட்டலாம். இதையெல்லாம் ஒப்பந்தம் கொடுக்கும்போதே செய்து கொள்ளுங்கள். பின்னால் மனதை மாற்றப் போய் ஆபத்தில் மாட்டிக் கொள்ளாதீர்கள். அதுசரி, இந்தத் தலையிடிகள் நீங்கி, பொங்கி வீடு குடி புகும்போது, உங்கள் பெற்றோரையும் சகோதரர்களையும் அழையுங்கள். பெற்றவர்கள் மனம் நிறைந்து தரும் ஆசீர்வாதத்திற்கு இணை ஏதுமில்லை. சில நேரம், அவர்களை பாதாள அறையில் குடிபுகுத்தி வாடகை வாங்க மகாலட்சுமிகள் வளையம் போடக் கூடும். மாமியோடு மருமகள் கொஞ்சிக் குலாவும் போது இடையில் நீங்கள் எதற்கு?

    Postad



    You must be logged in to post a comment Login