Recent Comments

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் -10

    T .சௌந்தர்

    கூவும் இசைக்குயில்கள்

    தமிழ் திரை இசையில் தவிர்க்க முடியாத குரலுக்கு சொந்தக்காரர் டி.எம்.சௌந்தரராஜன்.தமிழ் பாடல் மரபில் வந்த தலைமுறையின் இறுதி பரம்பரையை சார்ந்தவர். கிட்டப்பா ,தியாகராஜ பாகவதர் , டி.ஆர் .மகாலிங்கம் , சிதம்பரம் ஜெயராமன் ,திருச்சி லோகநாதன்,சீர்காழி கோவிந்தராஜன் என்ற வரிசையில் வருபவர்.

    இங்கே குறிப்பிடப்பட்ட பலரும் நாடக உலகிலிருந்து வந்தவர்கள் என்பது கவனத்திற்கு உரியது.ஆனால் இவர் மட்டும் அந்த பாடல் முறையை பின்பற்றி பாட வந்த கலைஞர். தியாகராஜ பாகவதரை முன்மாதிரியாகக் கொண்டு பாடி வந்தவர் என்ற ரீதியில் இவருடைய குரல் வளமும் ,பாடும் சுருதியும் தியாகராஜ பகவதரைப் போலவே உயர்ந்த சுருதியில் அமைந்திருக்கும்.

    ஒவ்வொரு காலகட்டத்திலும் புகழ் பெற்ற சிலரை பற்றி ஒப்பிட்டு பேசும் வழமை தொடர்ந்து வந்திருக்கிறது.பொதுவாக தீவிர இசைரசிகர்கள் மத்தியில் இவ்வகையான ஒப்பீடுகளை நான் கேட்டிருக்கின்றேன்.ஒவ்வொரு தலைமுறையும் அவ்வக்காலங்களில் இருந்த பாடக,பாடகியரை ஒப்பிட்டு தர்க்கிப்பதும் நிகழ்ந்திருக்கிறது.

    எங்கள் ஊரில் ,குறிப்பாக எனது சுற்றாடலில் நான் சிறுவனாக இருந்த போது இவ்விதமான தர்க்கங்களைக் கேட்டிருக்கின்றேன்.சினிமாப் பாடகர்கள் மட்டுமல்ல கர்னாடக இசையுலகில் புகழபெற்ற பாடகர்கள் பற்றிய பிரஸ்தாபிப்பும் நிகழ்ந்திருக்கின்றன. சினிமா பாடகர்கள் பற்றிய ஒப்பீட்டில் அதிகம் நான் அறிந்த ஒப்பீட்டை வரிசைப்படுத்தினால் கீழ் கண்டவாறு அமைந்திருக்கும்.

    01   எம்.கே .தியாகராஜபாகவதர் - பி.யு.சின்னப்பா

    02   டி.ஆர். மகாலிங்கம் - சீர்காழி கோவிந்தராஜன்

    03   சீர்காழி கோவிந்தராஜன் - டி.எம்.சௌந்தரராஜன்

    இந்த ஒப்பீடுகளில் ஒருவருடைய குரலின் நீட்சி, ஆழம், பிருக்கா ,பாடும் பாங்கு, சுருதி சுத்தம் ,இசைக்கார்வைகள், அதன் இனிமை , அவர்கள் குரலில் காட்டும் பிருக்காக்கள் பற்றிய வாதங்கள், விமர்சனங்கள் இருக்கும். இவ்விதமான உரையாடல்களில் கலந்து கொண்டவர்கள் மிகப்பெரிய இசை ரசிகர்கள் மட்டுமே. யாரும் இசை படித்தவர்கள் கிடையாது.இந்த வகையான கருத்தாடல்கள் எங்கள் ஊரில் சர்வசாதாரணமாக எல்லோரிடமும் இருப்பது தான் எனினும் ஒரு சில "இசைப்பித்தர்கள் " தான் இது பற்றி வெளியில் பேசிக் கொள்வார்கள்.

    குறிப்பாக இரு பாடகர்கள் இணைந்து பாடும் போது, அதில் வரும் சங்கதிகளை,பிருக்காக்களை யார் சிறப்பாகப்பாடினார்கள் என்ற வாதப்பிரதிவாதங்களும் நடைபெறும்.குறிப்பிட்ட இடத்தில் இன்ன பாடகர் அருமையாகப்பாடினார் ; மற்றவர் நன்றாகக் பாடவில்லை என்று விவாதங்க நீளும்.பிருக்காவை,சங்கதியை எங்கள் ஊர் பாஷையில் உருட்டல் , சுருள் என்று ஒருவித நகைச்சுவைப் பாங்கில் சொல்வார்கள்.குறிப்பாக கிட்டப்பாவின் பாணியைப் பின்பற்றிய டி.ஆர்.மஹாலிங்கம் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் இதில் முக்கியமானவர்கள்.

    இதில் ஒவ்வொரு பாடகர்களின் ரசிகர்கள் தங்கள் அபிமானப் பாடகரரை விடாமல் பாராட்டிக்கொண்டு விவாதம் நடத்துவர்.பால்ய ,பத்து வயதுகளில் என்னைப்பொறுத்தவரை எம்.ஜி.ஆர் பாடல்களை பாடும் சௌந்தர்ராஜனை தான் சிறந்த பாடகர் ; அதில் ஏதும் சந்தேகம் அப்போது இருக்கவில்லை.பின்னர் நான் டீனேஜ் ஆக வளர்ந்த நேரத்தில், முன்னையவர்களின் விவாதத்தை மனதில் கொண்டு ரசித்துக் கேட்ட சில பாடல்களை இங்கே தருகிறேன்.

    01 இசையாய் தமிழாய் இருப்பவனே - அகத்தியர் [ ] - டி.ஆர்.மகாலிங்கம் + சீர்காழி - இசை:குன்னக்குடி வைத்தியநாதன்.

    02 நமசிவாயம் என சொல்வோமே - அகத்தியர் [ ] - டி.ஆர்.மகாலிங்கம் + சீர்காழி - இசை:குன்னக்குடி வைத்தியநாதன்.

    03 வென்றிடுவேன் நாதத்தால் - அகத்தியர் [ ] - TMS + சீர்காழி - இசை:குன்னக்குடி வைத்தியநாதன்.

    இசையாய் தமிழாய் இருப்பவனே ,நமசிவாயம் என சொல்வோமே என்ற இருபாடல்களையும் இப்போது கேட்கும் போது மிரட்ச்சியாகவே இருக்கிறது.சீர்காழியும்,மகாலிங்கமும் இணையற்று பாடிய பாடல்கள் இவை.எப்பேர்ப்பட்ட பாடகர்கள் என்ற ஆச்சர்யமமிகுகிறது.எப்படியெல்லாம் ரசனை மாறிவிட்டது என்ற ஆச்சர்யமும் எழுகிறது.

    இது ஒருபுறமிருக்க ஏ.எம்.ராஜா , பி.பி.ஸ்ரீனிவாஸ் ,கண்டசாலா, “ இவர்கள் தான் பாடுபவர்கள் ; மற்றவர்கள் எல்லாம் " கத்துபவர்கள் " என்று ரகசியமாக நமக்கு சொல்லும் மென்குரல்களின் மீதான   தீராக்காதலர்கள் ஒரு சிலரும் இருந்தனர்.

    இது போன்ற தர்க்கங்கள் எனக்கு இரண்டு , மூன்று தலைமுறையினரை சார்ந்ததாயினும் , நமது தலைமுறையில் அதிகமாகப் பாடிக்கொண்டிருந்த ஜேசுதாஸ் - பாலசுப்ரமணியம் பற்றிய பிரஸ்தாபிப்புகள் நமக்குள் நிகழ்ந்ததுண்டு.

    இது போன்ற ஒப்பீடுகள் எனது குக்கிராமத்திலேயே இருந்தது என்றால் இந்தியாவிலும் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதை உண்மை என நிரூபிப்பது போல " எனது நாடக வாழ்க்கை " என்ற நூலில் நாடக மேதை டி.கே.சண்முகம் , " எஸ்.என் .ராமையா பாட்டுக்கு முன் கிட்டப்பா பாட்டு செல்லாது " என்றெல்லாம் அக்கால ரசிகர்கள் பேசிக்கொள்வார்கள்." என ஒரு முக்கிய குறிப்பைத் தருகிறார்.[ மேற்படி நூல் பக்கம்..136 ]

    கிட்டப்பா , எம்.கே .தியாகராஜபாகவதர் , டி.ஆர். மகாலிங்கம் ,சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன் ,எம்.எம்.மாரியப்பன் போன்றவர்கள் மட்டுமல்ல பின்னாளில் வந்த எஸ்.சி.கிருஷ்ணன் போன்றோரும் மிக உயர்ந்த சுருதியில் பாடும் ஆற்றமிக்கவர்களாகவே இருந்தனர்.

    **எஸ்.ஜி.கிட்டப்பா அந்தக்காலத்து நாடக மேடைப்பாடகர்.மிக உயர்ந்த சுருதியில் எளிதாகப் பாடும் ஆற்றல் மிக்கவர்.நாடக மேடைக்கு அது அக்காலத்தில் அவசியமானதுமாகும்.அவர் 4 , 5 , 6 கட்டைகளில் அனாயாசமாகப் பாடும் குரல் வளம் மிக்கவர்.

    குரல் வளம் என்பது ஒருவருக்கு இயல்பாய் அமைவது.தொழில் நுட்பம் வளராத அக்காலங்களில் நாடக பார்வையாளர்களை கவர்வதற்கு உயர்ந்த சுருதியில் பாடுவதே வழமையாக இருந்தது.உச்ச சுருதியில் நாடக மேடையில் பாடி புகழபெற்ற கிட்டப்பாவும் .தியாகராஜபாகவதரும் சமகாலத்தவர்கள் என்ற போதும் ஒருவரை ஒருவர் தங்கள் வாழ்நாளில் ஓரிரு தடைவைகளே சந்தித்தார்கள்..

    எஸ்.ஜி.கிட்டப்பா 1933 இல் மறைகிறார்.அடுத்த ஆண்டில் [1934 ] தியாகராஜபாகவதர் தனது முதல் படமான பவளக்கொடி மூலம் பிரமாண்டமான வெற்றி பெற்று புகழின் உச்சிக்கு போகிறார். தியாகராஜபாகவதர் வருகை தமிழ் திரையை பாடல்களால் நிறைத்தது.

    கிட்டப்பாவின் மறைவுக்குப் சற்று முன்பே பேசும் திரைப்படம் வெளிவந்ததால் ,அவரைத் திரையில் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைக்கவில்லை. திரையில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அதிஷ்டவசமாக அவர் பாடி வெளிவந்த இசைத்தட்டுக்கள் மூலம் அவரது ஆற்றல் காலம் கடந்தும் நிலைத்து நிற்கிறது.

    கிட்டப்பாவின் மரணத்தையடுத்து பாகவதர் திரையில் அரங்கேறி புகழின் உச்சிக்கு போனது போலவே பாகவதரின் மறைவுக்கு [1959] பின் வந்த காலங்களில் சௌந்தரராஜன் பின்னணி பாடுவதில் உச்சம் பெறுகிறார். 1960 களில் முன்னணியில் நின்ற பின்னணிப்பாடகர் என்ற நிலைக்கு உயர்கிறார்.

    டி.ஆர்.மகாலிங்கம் பாடிய பாடல்களைக் கேட்பவர்கள் அவர் எவ்வளவு தூரம் கிட்டப்பாவின் பாடல்களால் பாதிக்கப்பட்டார் என்பதை கிட்டப்பாவின் சில பாடல்களைக் கேட்டாலே கண்டு கொள்ளலாம்.உதாரணமாக எஸ்.ஜி.கிட்டப்பா பாடிய சில பாடல்களை பிற்காலத்தில் , மீண்டும் டி.ஆர்.மகாலிங்கம் பாடிய பாங்கு வியப்பளிக்கும். டி.ஆர்.மகாலிங்கம் பாடியது முற்று முழுதாக கிட்டப்பாவின்பாணி தான்.

    ஆரம்ப காலத்தில் நாடக மேடைகளில் கிட்டப்பா பாடி புகழ் பெற்ற பாடல்களை திரையில் டி.ஆர்.மகாலிங்கம் பாடி நடித்த போது அதை நம்ப முடியாத ரசிகர்கள் கிட்டப்பாவின் பாடலுக்கு மகாலிங்கம் வாய் அசைத்தார் என பேசியதும் வரலாறாகும். சீர்காழியார் டி.ஆர்.மகாலிங்கத்தையும் முன்மாதிரியாகக் கொண்டு பாடினார்.

    கிட்டப்பா பாடிய சில பாடல்கள் மீண்டும் மீண்டும் தமிழ் திரையில் அவ்வப்போது தேவை கருதி வெவ்வேறு பாடகர்களால் பாடப்பட்டு வந்துள்ளன. இந்தப்பாடல்கள் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக மேடைகளில் ஒலித்த பாடல்களாகும்.

    01   காயாத கானகத்தே

    02   ஆண்டவன் தரிசனமே

    03   கோடையில் இளைப்பாற்றி

    காயாத கானகத்தே , ஆண்டவன் தரிசனமே போன்ற பாடல்களை பின்னாளில் ஸ்ரீவள்ளி [1948], அகத்தியர் [1972]போன்ற படங்களில் மகாலிங்கமும் , கோடையில் இளைப்பாறி என்ற பாடலை மாற்றி "மாலையிலே மனசாந்தி தந்து " என கோகிலவாணி [1955] படத்தில் சீர்காழி கோவிந்தராஜனும் பாடினார்கள்.இது வரன்முறையாக மகாலிங்கம் ,சீர்காழி போன்றோர் கிட்டப்பாவை பின்பற்றி பாட விளைந்ததென்பதாலேயே சாத்தியமானது.

    கிட்டப்பா பாடிப் புகழ்பெற்ற " காயாத கானகத்தே " என்ற பாடலை டி.எம்.சௌந்தரராஜன் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ராஜபார்ட் ரங்கதுரை [1974] படத்தில் பாடியுள்ளதை நாம் கேட்கிறோம்.

    டி.எம்.சௌந்தரராஜன் தியாகராஜபாகவதரைப் பின்பற்றி பாடியதால் தான் பிற்காலத்தில் பாகவதர் பாடிய " ராதே உனக்கு கோபம் ஆகாதடி " போன்ற சில பாடல்களை பாட நேர்ந்தது.பாகவதரின் சாயலை டி.எம்.எஸ் குரலில் கேட்டு ரசித்தார்கள் என்றே எண்ணுகிறேன்.

    எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில் முதன் முதலில் 1950 இல் “ராதே என்னை விட்டு போகாதேடி" , "நாணம் ஏனோ ராதே " போன்ற பாடல்களை டி.எம்.எஸ் பாடினார். இந்தப்பாடல்கள் தான் டி.எம்.எஸ் பாடிய முதல் பாடல்கள். நாணம் ஏனோ ராதே என்ற பாடல் சிந்துபைரவி ராகத்தில் அமைந்த இனிய பாடலாயினும் ,அது ஒருவகை நகைச்சுவை என்ற அமைப்புக்குள் தான் அடங்குகிறது.

    "ராதே என்னை விட்டு போகாதேடி " என்ற பாடல் பாகவதர் பாடிய ராதே உனக்கு கோபம் ஆகாதடி என்ற பாடல் மெட்டிலமைந்த நகைச்சுவைப் பாடலாகும்.

    கிட்டப்பா, தியாகராஜபாகவதர் ,டி.ஆர்.மகாலிங்கம் ,சீர்காழி கோவிந்தராஜன் போன்றோர் சுருதி சுத்தமும் தெள்ளிய நீரோடை போன்ற சலனமற்று பாயும் குரல் வளத்தை இயற்கையாய் பெற்றவர்கள். உயர்ந்தசுருதியிலும் அனாயசமாக நின்று ஜாலம் காட்டும் குரல்கள் தான் இவை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இவர்களின் குரல்களில் ஓர் மெல்லிய தன்மை , பெண்மையின் மெல்லிய சாயலும் மேலோங்கியிருப்பதையும் நாம் காணலாம்.

    கிட்டப்பா, தியாகராஜபாகவதர் ,டி.ஆர்.மகாலிங்கம் ,சீர்காழி கோவிந்தராஜன் போன்றோரைப் போல உயர் சுருதியில் பாடும் ஆற்றல்மிக்க டி.எம்.சௌந்தர்ராஜனின் குரலில் அவர்களை விட ஒரு கனதியும் ,ஆழமும் இருந்தது. பாகவதர் குரலின் தன்மை,அதன் நாதம் , ரீங்காரம் ,இனிமை இருந்தாலும் அவரைவிட கனதியான குரலாக டி.எம்.எஸ் குரல் இருந்தது.

    புகழபெற்ற அந்த மரபிலும், இயல்பாயும் உயர்ந்த சுருதியில் பாடும் ஆற்றல்மிக்க டி.எம்.சௌந்தரராஜன் இத்தனை பாடகர் மத்தியிலும் தான் அறிமுகமானார்.

    அவர் முதன்முதலில் பாடிய கிருஷ்ண விஜயம் படப்பாடல்களும் பின்னர் பின்னர் ஜி.ராமநாதன் இசையில் மந்திரிகுமாரி படத்தில் வழிப்போக்கன் ஒருவர் பாடுவதாக அமைந்த பாடலிலும்  நாட்டுப்புற பாடலுக்கே பொருத்தமானவர் என்று கணிக்கப்பட்டு " அன்னமிட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே " என்ற பாடலைப் பாடுகிறார்.மந்திரிகுமாரி படத்தின் இரண்டு இனிய காதல் பாடல்களை பாடியவர் அக்காலத்தில் புகழின் உச்சியில் இருந்த திருச்சி லோகநாதன். நாட்டுப்புறத்திற்குரிய குரல் என்ற வகையிலேயே சிவாஜிக்கு அவர் பாடிய " ஏறாத மலை தனிலே " என்ற பாடலும் அமைந்தது.

    இசையமைப்பாளர் எஸ்.தட்க்ஷிணாமூர்த்தி இசையில் வளையாபதி [1953 ] படத்தில் இரண்டு ஜோடிப்பாடலை [ கே.ஜமுனாராணியுடன்] பாடும் வாய்ப்பைப்பெற்றார் டி .எம்.எஸ்! " குலுங்கிடும் பூவிலெல்லாம் ", குளிர் தாமரை மலர் பொய்கை கண்டேன் " என அந்த இரண்டு பாடல்களிலும் அவரின் குரல் போலல்லாது கண்டசாலா பாடுவது போன்ற சாயலில் பாடியிருப்பார்.

    அக்காலத்திலேயே மிகப்பெரிய புகழோடு விளங்கிய கண்டசாலாவின் குரல் போல தனது குரலை மாற்றி அடக்கி வாசிக்க வேண்டிய நிலைமையும் அவருக்கு இருந்ததோ என்று சந்தேகிக்கும் வகையில் வளையாபதி [1953] படத்தில் அவர் பாடிய இரு காதல் பாடல்கள் அமைந்திருந்தன.பின்னாளில் அவர் குரலின் தன்மையை அறிந்தவர்கள் இந்த இருபாடல்களையும் அவர் தான் பாடினாரா என்று எண்ணத் தோன்றும் வகையில் அமைந்திருப்பதைக் காணலாம்.

    இருப்பினும் டி.எம்.எஸ். தூக்கு தூக்கி படத்திற்கு பின் சிவாஜியின் குரலாக பரிமளிக்கத் தொடங்கிய பின் அதிக பாடல்களை பாட ஆரம்பித்தார். குறிப்பாக ஜி.ராமநாதன் அதிகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.அதிக புகழ் கொண்ட தியாகராஜ பாகவதரின் குரல் சாயலும் கொண்டிருந்ததும், பாகவதரின் குரலைக் கேட்டு பழகியதாலும் அவரின் குரல் பலருக்கும் பிடித்த காரணத்தா லும், அவர் குரலின் சாயல் கொண்ட டி.எம்.எஸ் பல வாய்ப்புகளை பெற்றார்.

    அந்தக் காலமோ நாடக பாணியில் அதிகமான திரைப்படங்கள் வெளிவந்ததும் ,ஒரு சில சமூகப்படங்களும் தலை காட்டிய காலமாகும். மொட்டாகி மலர்ந்து கொண்டிருந்த மெல்லிசை மன்னர்கள் தாம் இசையமைத்த, 1955 இல் வெளிவந்த “குலேபகாவலி “என்ற எம்ஜிஆர் படத்தில் " அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்" என்ற பாடலை பாடும் வாய்ப்பை டி.எம்.சௌந்தர்ராஜனுக்கு வழங்கினர். அவரின் ஓங்கி குரல் எடுத்து பாடும் தன்மைக்கு ஏற்ப அந்தப்பாடல் பொருத்தமாகவே இருந்தது. மெல்லிசைமன்னர்கள் இசையில் டி .எம்.எஸ் பாடிய முதல் பாடல் இதுவே.!

    அக்காலத்தில் உயர்ந்த சுருதியில் பாடுவது பொதுவான அம்சமாக இருந்தது என்பதை அதே படத்தில் எஸ்.சி.கிருஷ்ணன் பாடிய " ஜெயமே பெருகவே " என்ற பாடலும் நிரூபணம் செய்யும்.

    பொதுவாக நாடகபாணியின் புகழ் ஓங்கியிருந்த அக்காலத்தில் பாடகர்களையும்,அவர்களின் குரல்களில் வெளிப்படும் கடினமான சங்கதிகளையும் பிருக்காக்களையும் தவிர்த்து பார்க்க முடியாத காலமாக இருந்தது.டி.ஆர்.மகாலிங்கம் , சீர்காழி கோவிந்தராஜன் போன்றோர் குரல்கள் சிறந்த உதாரணங்களாகும்.

    கூவும் முறை :

    தமிழ் இசை நாடக மேடைகளில் முழங்கிய இசையில் ஒரு விதமான கூவும் முறை பயன்பாட்டில் இருந்தது என்பதை அக்காலத்தில் S.G.கிட்டப்பாவின் இசைத்தட்டுப் பாடல்களில் கேட்கலாம்.பின்னாளில் S.G.கிட்டப்பாவின் பாடல்முறைகளைப் பின்பற்றி பாடிய டி.ஆர். மகாலிங்கம் ,சீர்காழி கோவிந்தராஜன் போன்றவர்கள் கூட கூவும்குயில்கள் தான்.அந்த வழியில் வந்தவர் தான் எஸ்.சி.கிருஷ்ணனும்.

    எஸ்.சி.கிருஷ்ணன் , பெரும்பாலும் நடிகர் தங்கவேலு , ஏ.கருணாநிதி போன்ற நகைச்சுவை நடிகர்களுக்கு பின்னணி பாடியவர்.நாடக மரபிலிருந்து சினிமாவுக்கு வந்தவர்.

    கூவும்முறையை பயன்படுத்திய அற்புதமான பாடகர்.அனாயசமாக பிருக்காக்கள் சங்கதிகளை குரலில் காண்பிக்கும் ஆற்றல் மிக்கவர்.

    டி.எம்.சௌந்தர்ராராஜனின் குரல் இவர்கள் அளவுக்கு பிருக்கா பேசும் குரலல்ல எனினும் உயர்ந்த சுருதியில் பாடும் ஆற்றல் கொண்டதே. அது குறித்து அவரே ஒரு பேட்டியில் பின்வருமாறு கூறுகிறார்.

    “ //… குங்குமம் [1963] படத்தில் " சின்னஞ் சிறிய வண்ண பறவை " என்றொரு போட்டிப் பாடல், என்னை அழைத்தார்கள் .படே குலாம் அலிகான்   ஸ்டைலில் கடுமையான சங்கதிகள் எல்லாம்போட்டு கே.வி.மகாதேவன் இசையமைத்தார்.ஆர்மோனியத்தில் அவற்றை எனக்கு வாசித்துக் காண்பித்தார்கள்.நான் சொன்னேன் " எனக்கு பிருக்கா எல்லாம் வராது, நல்ல கார்வை கொடுத்துப்பாடுவேன்.வராததை வருவது போல சோபை காட்ட மாட்டேன்.முடியாது என்றால் முடியாது தான்! சீர்காழி கோவிந்தராஜன் நல்ல பிருக்கா சாரீரம் ,அதற்கென்றே பிறந்த சாரீரம் அவரைப் பயன்படுத்துங்கள் என்றேன்.

    பின் அவரைப் பாட வைச்சாங்க.கச்சிதமா அமைஞ்சுது. சும்மா சொல்லக்கூடாது பிருக்கா கொடுத்து பாடுவதில் கோவிந்தராஜனுக்கு நிகர் அவர்தான்.அவரைப்போல சங்கீதத்தில் மிக நுணுக்கமான பிடிகள் பாடுவதென்றால் மிக,மிகக் கடினம். ராஜரத்தினம்பிள்ளையின் நாதஸ்வரத்தில் விழுகிற சங்கதிகள் மாதிரி இவரது குரலில் விழும்.அப்பேர்ப்பட்ட திறமைசாலி.இரண்டே இரண்டு ராஜன்கள் தான் தமிழ்நாட்டில் அழுத்தம் ,திருத்தமாகப் பாடினார்கள்.ஒன்று சௌந்தரராஜன், மற்றது கோவிந்தராஜன்!

    ஆனால் பாடலைக் கேட்ட சிவாஜி “கோவிந்தராஜனின் பிருக்கக்கள் எல்லாம் சரிதான் எனது குரலுக்கு ஏற்ற கனதியில்லையே என்றும் டி.எம்.எஸ் ஆல் எவ்வளவு பாட முடியுமோ அதற்கேற்ப பாட வையுங்கள் “ என்று சொல்லிவிட்டார்.அதற்குத் தகுந்தாற் போல இவ்வளவு பாட முடியும் என்று அந்த சங்கதிகளை நானே இவ்வளவு வரும் ; இவ்வளவு பாட முடியும் என்று அஜஸ்ட் பாணி பாடினேன்.அதைத்தான் நீங்கள் இப்போது கேட்கிறீர்கள். அதையே ஓகோன்னு இருக்கு என்று சொன்னாங்க.!பிருக்காவிலே இறங்கீட்டோம் என்று சொன்னா அந்த சுகம் போய்விடும்.சுருதி சுத்தம் சேராது.// “

    தூக்குத் தூக்கி படத்தில் சிவாஜிக்கு அவர் பாடிய பாடல்கள் புகழ் பெற்றதோடு அவருக்கான பின்னணிக்குரல் இவர் தான் என்ற ஒருவிதமான போலி சினிமா ஐதீக நிலையில் டி.எம்.எஸ் நிலைத்தார் என்று சொல்ல வேண்டும். தூக்குத் தூக்கி படத்தில் நிலைத்த இந்த பெயர் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் நாடகப்பாணி படங்களின் மூலமும் நிலைபெற்றது.அதுமட்டுமல்ல இவரது குரல் எம்.ஜி.யாரையும் கவர்ந்ததால் அவருக்கும் சரிசமமாகப் பாடும் வாய்ப்பை பெற்றார்.

    தங்கள் முன்னோர்களை போலவே நாடக பாணியில் மெல்லிசைமன்னர்களும் இசையமைக்க வேண்டிய நிர்பந்த காலத்திலிருந்ததால் அவர்களும் சௌந்தர்ராஜனின் குரலை அவ்விதமே பயன்படுத்தி வந்தனர்.

    தூக்குத் தூக்கி யைத் தொடர்ந்து 1956, 1957 களில் அம்பிகாபதி , வணங்காமுடி , காத்தவராயன் ,மதுரைவீரன் ,உத்தமபுத்திரன் என பல படங்களில் உயர்ந்த சுருதியில் ,நாடக பாணியில் , செவ்வியலிசை சார்ந்து ஜி.ராமநாதன் போன்றோர் இசையில் மட்டுமல்ல மெல்லிசைமன்னர்களின் இசையிலும் பாடினார்.

    மெல்லிசைமன்னர்களின் ஆரம்பகாலப் படங்களான

    தெனாலி ராமன் [1956],பக்த மார்க்கண்டேயன் [1957] ,புதையல்[1957] ,மகாதேவி [1957] போன்ற படங்களில் அதே பழைய பாணியில் சௌந்தரராஜனை பாட வைத்தார்கள் என்பதை கீழ்கண்டபாடல்களை சான்றாகக் காட்டலாம்.

    01 நல்ல காலம் வருது நல்ல காலம் வருகுது - புதையல் [1956]- இணைந்து பாடியவர் பி.சுசீலா

    02 கோட்டையிலே ஒரு காலத்திலேயே நம்ம கொடி பறந்தது - தெனாலி ராமன் [956] - இணைந்து பாடியவர் வி.நாகைய்யா

    03 ஏரு பூட்டுவோம் நாளை சோறு ஓட்டுவோம் - மகாதேவி [1957]   இணைந்து பாடியவர்கள் - எல்.ஆர்.ஈஸ்வரி+ கே.ஜமுனாராணி குழுவினர்

    04 அம்பிகையே முத்துமாரியம்மா - பதிபக்தி [1958]   இணைந்து பாடியவர்கள் - பி.லீலா + ரத்னமாலா குழுவினர்

    05 பிள்ளையார் கோவிலுக்கு கொலுவிருக்க - பாகப்பிரிவினை   [1958]   இணைந்து பாடியவர்கள் - பி.லீலா + ரத்னமாலா குழுவினர்

    இவை மட்டுமல்ல செவ்வியல் இசை சார்ந்த பாடல்களிலும் சோபிக்கும் சௌந்தர்ராஜனின் குரலை எல்லா இசையமைப்பாளர்களும் மிக சிறப்பாகக் கையாண்டனர்.

    இசையமைப்பாளர்களின் பெயர்களை சொல்லாவிட்டால் யார் எந்தப்பாடலுக்கு இசையமைத்தார் என்பதை இனம் காணமுடியாத வகையில் பாடல்கள் அமைந்திருந்ததை சில பாடல்கள் மூலம் நிறுவலாம்.பெரும்பாலும் செவ்வியலிசை சார்ந்ததாக இருந்ததும் இதற்கான காரணமாகும்.

    01   கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு - மரகதம் 1958 - இசை: எஸ்.எம்.சுப்பையா நாயுடு

    02   ஆடாத மனமும் உண்டோ - மன்னாதிமன்னன்   1960 - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

    03   தென்றல் உறங்கிடக் கூடுமடி   - சங்கிலித்தேவன் 1960 - இசை: டி.ஜி.லிங்கப்பா

    04   நாடகம் எல்லாம் கண்டேன் - மதுரை வீரன் 1956 - இசை: ஜி.ராமநாதன்

    05   முல்லைமலர் மேலே - உத்தமபுத்திரன் 1958 - இசை: ஜி.ராமநாதன்

    06   மோகன புன்னகை பெய்திடும் நிலவே - வணங்காமுடி 1957 - இசை: ஜி.ராமநாதன்

    07   இன்று நமதுள்ளமே - தங்கப்பதுமை 1957 - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

    08   முகத்தில் முகம் பார்க்கலாம் - தங்கப்பதுமை 1957 - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

    09   மோகன புன்னகை ஏனோ - பத்தினி தெய்வம் 1957 - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

    10   கசக்குமா இல்லை ருசிக்குமா - பத்தினி தெய்வம் 1957 - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

    1950 களின் நடுப்பகுதியிலேயே நாட்டுப்புறப்பாங்கு , மென்மையான மெல்லிசை , செவ்வியல் இசை சார்ந்தவை என பலவிதமான சுவைகள் மிகுந்த பாடல்களை அந்தந்த உணர்வுகளுக்கேற்ப தனது இனிய கனத்த சாரீரத்தின் கார்வைகளால் இனிமை சேர்த்தார்.அந்தக்குரலில் பெண்மை சிறிதுமில்லை.

    மெல்லிசைப்பாங்கான பாடல்கள் :

    01 என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே - எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1956 - இசை: டி.ஜி.லிங்கப்பா

    02 சித்திரம் பேசுதடி - சபாஷ் மீனா   1956 - இசை: டி.சலபதிராவ்

    03 பருவம் பார்த்துஅருகில் வைத்து வெட்கமா - மருதநாட்டு வீரன் 1960 - இசை: எஸ்.வி.வெங்கடராமன்

    04 பதினாறும் நிறையா பருவமங்கை - யானைப்பாகன் - இசை: டி.ஜி.லிங்கப்பா

    05 என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே - எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1956 - இசை: டி.ஜி.லிங்கப்பா

    நாட்டுப்பாங்கான பாடல்கள் :

    01 சும்மா கிடந்த நிலத்தை கொத்தி - நாடோடிமன்னன் 1958 - இசை: எஸ்.எம்.சுப்பைய்யாநாயுடு

    02 மணற்பாறை மாடுகட்டி   - மக்களை பெற்ற மகராசி   1957 - இசை: கே.வி.மஹாதேவன்

    03 மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு   - வீரபாண்டிய கட்டபொம்மன் 1958 - இசை: ஜி.ராமநாதன்

    04 ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமேயில்லை - பிள்ளைக்கனியமுது 1957 - இசை: கே.வி.மஹாதேவன்

    05 தாய் பிறந்த வழி பிறக்கும் தங்கமே தங்கம்   - கல்யாணிக்கு கல்யாணம் 1958 - இசை: ஜி.ராமநாதன்

    06 கல கலவென்றே சாலையில் ஓடும்   - நல்லதங்காய்   1956 - இசை: ஜி.ராமநாதன்

    செவ்வியலிசைப் பாங்கான பாடல்கள் :

    01 சிந்தனை செய் மனமே   - அம்பிகாபதி 1958 - இசை: ஜி.ராமநாதன்

    02 வசந்தமுல்லை போலெ வந்து   - சாரங்கதாரா   1957 - இசை: ஜி.ராமநாதன்

    03 வடிவேலும் மயிலும் துணை   - அம்பிகாபதி 1958 - இசை: ஜி.ராமநாதன்

    04 ஆடாத மனமும் உண்டோ   - மன்னாதிமன்னன்   1959 - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

    05 ஓங்காரமாய் விளங்கும் நாதம் - வணங்காமுடி 1957 - இசை: ஜி.ராமநாதன்

    06   தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்   - விக்கிரமாதித்தன் 1959 - இசை: எஸ்.ராஜேஸ்வரராவ்

    1950 களிலிலேயே ஹிந்தி இசையின் பாதிப்பால் மெல்லிசையின் தன்மை தமிழ் சினிமாவில் புகுந்தது. அவன் ,கடன்வாங்கி கல்யாணம் ,அனார்கலி, தேவதாஸ், குணசுந்தரி , கல்யாணப்பரிசு போன்ற பல படங்களில் மெல்லிசை அற்புதங்களும், மரபுகளை மீறிய சில போக்குகளும் புகுந்தன.

    ஹிந்தி திரையின் இனிய இசை , பாடகர்கள் முகம்மது ராபி ,முகேஷ் போன்றோரின் பாடும்முறை இந்திய திரை வானை முழுதாக ஆக்கிரமித்த வேளையில் ,அதே பாணியில் பாடும் புது நாகரீகம் தென் இந்தியாவிலும் பரவியது வியப்பில்லை. கண்டசாலா ,ஏ.எம்.ராஜா ,பி.பி.ஸ்ரீனிவாஸ், டி.ஏ.மோதி ,பானுக்கிரகி ,எம்,சத்யன் போன்றோர் அந்த முறையில் பாடி புகழ் பெற்றிருந்தனர்.

    அந்தவகையில் பாடுவதற்கமைந்த அதாவது கீழ் சுருதியில் பாடும் குரல் பாங்கு கொண்டவரல்ல சௌந்தரராஜன் என்பது முக்கியமானதாகும்.நவீன தொழில்நுடபங்கள் வளரத் தலைப்பட்ட இக்காலத்தில் ஓங்கி குரல் எடுத்து பாடும் நாடகப்பாணி மெதுவாக மறையத் தொடங்கியது.

    பாடும் முறைகளும் , குரல் வளமும் ஒவ்வொறுவருக்கும் வித்தியாசமாக இருப்பது இயல்பு தான்.ஒரு காலத்தில் புகழபெற்றிருந்த பாணி மறைவதும் புதிதாக ஒன்று வருவதும் இயல்பானதே.இதில் டி.எம்.எஸ். எப்படி நிலைத்தார் என்பது நமது அவதானத்திற்குரியது.

    பவணந்தி முனி கூறிய " பழையன கழிதலும் ,புதியன புகுதலும் நழுவல் கால வகையினானே " என்பதற்கேற்ப மெதுவாக புதியபாங்கு மெல்லிசைமன்னர்களினூடே வளர்ந்து வந்த புதிய போக்கால் பழைய பாணி மெதுவாக மறையவும் தொடங்கியது.முன்னையோர்களிடமிருந்து பெற்றவையும் ,கற்றவையும் உடனடியாக மறைந்து விடுவதில்லை என்ற வகையில் இவை சமாந்திரமாகவே பயணித்தன.

    ஓங்கிக்குரல் எடுத்து பாடும் பாடகரை மெல்லிசையில் எப்படி பயன்படுத்துவது?!

    மெல்லிசைமன்னர்களின் இசையைப் பொறுத்தவரையில் முன்னையவர்களிடம் கற்று கொண்ட உயர்ந்த சுருதியில் பாடும் பாங்கை புதியபாணி இசையோடு இணைக்கும் ஒரு யுக்தியாக , இசைந்து கொடுப்பதும்,ஈடுகொடுப்பதுமான ஒரு அணுகு முறையைக் கைக்கொண்டார்கள்.

    உயர்ந்த சுருதியில் இயல்பாகப் பாடும் ஆற்றல்மிக்க டி.எம்.சௌந்தர்ராஜனை கச்சிதமாக அவரின் குரல் தன்மையறிந்து பாட வைத்தார்கள்.

    எம்.ஜி.ஆர் “புரட்சிநடிகராக” வளர்ந்துகொண்டிருந்த காலத்தில் கொள்கைப் பாடல்களை எழுச்சியுடன் பாடும் ஆற்றல்மிக்க ஒரு ஆண்மைமிக்க குரலாய் டி.எம்.எஸ். வாய்த்தார்.அதற்கு அச்சாரமாய் அமைந்தது “அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்” என்ற மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த பாடல் ஒரு நிரந்தர தளம் அமைத்துக் கொடுத்தது.

    ஏற்கனவே எம்ஜியாருக்கு மலைக்கள்ளன் [1954] படத்திலேயே " எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் " என்ற கொள்கை விளக்கப்பாடல் ஒன்றை எம்.ஜி.ஆர் சிபார்சிலேயே எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில் பாடும் வாய்ப்பையும் பெற்றார்.

    கமகம ,பிருக்கா போன்றவற்றை அதிகமாக வைப்பதும், ஒரு ராகத்தை நீண்ட நேரம் ஆலாபனை செய்வதும்  ஹிந்துஸ்தானி மரபு ஆகும்,அதனால் தான் அங்கே பிருக்காக்களுக்கு முக்கியத்துவமும் கொடுக்கப்படுகிறது.

    பொதுவாக பாடுபவர்கள்  கீழ்ஸ்தாயி , மத்தியஸ்தாயி , மேல்ஸ்தாயி  அதாவது மெலிவு, சமன், வலிவு [மந்த்ரஸ்தாயி, மத்யஸ்தாயி, தாரஸ்தாயி ] என்ற அளவுகளில் தான் பாட முடியும்.கிட்டப்பா ,தியாகராஜ பாகவதர் ,மகாலிங்கம், சீர்காழி கோவிந்தராஜன் போன்றோரின் குரல்கள் மூன்றாவது வகையில் பாடினால் தான் சோபிக்கும் ஆற்றல் கொண்டது.

    அந்த வகையில் மேல் சுருதியில் பாடுவது என்பதும் இலகுவான ஒன்றல்ல.வெகு சிலருக்கே அந்த வகையில் குரலமைந்திருப்பதும் அதன் சிறப்புக்கு ஒரு காரணமாகும்.அதனால் தான் அது வியப்புக்குரியதாகவும் , பேராற்றலாகவும் போற்றப்பட்டது.

    ஆனாலும் மேல் சொன்ன அத்தனை பாடகர்களும் கீழ் சுருதியில் பாடினால் சோபிக்காது என்பது மட்டுமல்ல அவர்களது இயல்பாயும் இருக்காது.டி.எம்.சௌந்தர்ராஜனின் குரலும் உயர்ந்த சுருதியில் பாடும் ஆற்றல் உண்டெனினும்  மற்றைய சுருதிகளில்  பாடினாலும் சோபிக்கும் ஆற்றல் கொண்டது என்பதே அவரின் தனித்தன்மையாகும்.

    பிருக்காக்கள் கொடுத்து அசத்தும் பாணியும் ,உயர்ந்த குரலில் பாடுவதும் மாறிக்கொண்டிருந்த காலத்தில் , உயர்ந்த சுருதியில் பாடும் டி.எம் .எஸ் குரலை மெல்லிசைமன்னர்கள் பயன்படுத்தி ,அவரது  குரலுக்குப் புதுப்பரிமாணம் கொடுத்தார்கள்.

    சௌந்தர்ராஜனின் குரலை ஜி.ராமநாதன் தனது இசையில் மிக நேர்த்தியாகப் பயன்படுத்தி செவ்வியலிசையின் ஓங்காரத்திற்கு வழிகாட்டினார் என்றால் , மெல்லிசைமன்னர்கள் மெல்லிசையின் பக்கம் வைத்து அவரது குரலில் புதுமை ஒளியைக் காட்டினார்கள்.

    செவ்வியிலிசை பண்பும் ,உணர்ச்சி வேகமும் நிறைந்த நாட்டுப்புறப்பாங்கான பாடல்களை பாடி தேர்ந்த குரலாக மாறியிருந்த ,பல்வகைப்பாடல்களையும் பாடும் ஆற்றல்மிக்க , செவ்வியலிசை சார்ந்த ஒருவகையான மெல்லிசைப் பாடல்களையும் ஆற்றல்பெற்று வளர்ந்த  குரலை முழுமையான மெல்லிசைப்பக்கம் திருப்பி மெல்லிசையில் ஒரு கருவியாக பயன்படுத்தி புதுமை செய்தார்கள்.

    பெரும்பாலும் மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் பாடும் முறையை அவதானிப்பவர்கள் ,அவர்  , தனது மெட்டுக்களை பாடகர்களுக்கு சொல்லி கொடுக்கும் போதும் ,அவரே  பாடும் போதும் உயர்ந்த சுருதியில் அமைந்திருப்பதை  அவதானிக்கலாம்.அவரது பெரும்பாலான பாடல்களும் உயர் ஸ்ருதியிலமைந்திருப்பது தற்செயலானதுமல்ல.ஏனென்றால்   அவரும்  நாடக மரபிலிருந்தே சினிமாவுக்கு வந்தவர்.

    தன்னெழுச்சியாக அவர் போடும் உயரசுருதியிலமைந்த மெட்டுக்களை இலகுவாகப் பாட டி.எம்.எஸ் வாய்த்தார் என்று எண்ணத்தோன்றுகிறது.உயர் சுருதியின்   அடையாளம் சௌந்தரராஜன் என்றால் , குறைந்த சுருதியில் பாடி வசீகரிக்கும் ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீனிவாஸ் போன்றோருரின் குரல்களின் தன்மையையும் உள்வாங்கி அவர்களுக்கும்  ஏதுவாக மெட்டுக்களை அமைத்து  தனது பாடல்களை வெற்றிபெற வைத்தார்.

    ஒரு கருத்தைப் பிரகடனப்படுத்துவதற்கு இசைந்த குரலாக பயன்படுத்த ஆரம்பித்து பின் பல்வகைப்பாடலகையும் பாட வைத்தார்.

    சௌந்தர்ராஜனின் குரலை மிக நுட்பமாக பயன்படுத்திய பாடல்களுக்கு உதாரணமாக அமைந்த சில பாடல்கள்.

    அச்சம் என்பது மடமையடா - மன்னாதி மன்னன்

    விறுவிறுப்பும் எழுச்சியும் கரைபுரண்டோடும் பாடல்.அக்காலத்தில் வெளிவந்த பாடல்களில் தனித்துவம் மிக்கதாக இசையமைப்பு.குறிப்பாக பாடல் அமைந்த மோகன ராகம் ,பொதுவாக காதற் பாடல்களிலேயே அதிகம் சோபிக்கக்கூடிய மோகன ராகத்தை , அதன் பன்முக இயல்புகளில் ஒன்றான வீர உணர்வை வெளிப்படுத்தும் தன்மையை உணர்ந்து மனவெழுச்சி தரும் வகையில்,பாடல் முடியும் வரை அதன் எழுச்சி குன்றாமல் இசையமைக்கப்பட்ட பாடல்.இந்த அணுகுமுறை அக்காலத்தில் மிக அரிதான முயற்சி என்று சொல்லலாம்.

    தமிழ் மரபில் உயர்ந்து ,ஓங்கி குரல் எடுத்துப்பாடும் குரல் ஒரு புறம் , மேலைத்தேய வணிக , லத்தீன் அமெரிக்க சாயல்மிக்க இசையின் நவீன பார்வை ஒரு புறம் , இரண்டின் இணைவும் ஒன்றை ஒன்று கலக்க வேண்டும். இதனை அற்புதமாகக் கலந்தார்கள் மெல்லிசைமன்னர்கள்.அதற்காகக் அவர்கள் எடுத்தாண்ட வாத்தியங்கள் அதன் பிரயோகங்கள் ,அதன் துடிப்புக்கள், ஒத்திசைவின் இனிமை இசைஒவியங்களாக மலர்ந்தன.

    மற்றவர்களிலிருந்து தம்மை வேறுபடுத்திக்காட்ட மெல்லிசைமன்னர்கள் லத்தீன் அமெரிக்க தாள வாத்தியக்கருவியான பொங்கஸ் [ Bongos ] வாத்தியக்கருவியை பிரதானமாக கையாண்டு புதுமை செய்தார்கள்.குறிப்பாக தி.மு.க வின் முக்கிய பங்காளியான எம்.ஜி.ஆர் தனது அரசியல் கொள்கையை படங்களில் பிரதானப்படுத்திய நிலையில் அதற்கிசைந்த எழுச்சிமிக்க இசையை மெல்லிசைமன்னர்கள் கொடுத்தார்கள். மக்களை ஈர்க்கும் உயர்ந்த சுருதியில் பாடும் சௌந்தரராஜன் குரலுக்கிசைவாக மெல்லிசைமன்னர்களின் இசைந்த இசையமைப்பும் புதுவகைப் பொலிவைக் கொடுத்தது.அதுவே பல பாடல்களிலும் தொடர்ந்தது.மெல்லிசைமன்னர்களின் சமகாலத்து இசையமைப்பாளர்கள் பலரையும் இம்மாதிரியான இசை பாதிப்புக்குளாக்கியது.அதன் எதிரொலியாக பொங்கஸ் தாள வாத்தியக்கருவி தமிழ் திரை இசையை ஆக்கிரமித்துக் கொண்டது என்று சொன்னாலே மிகையில்லை.

    பொங்கஸ் தாள ஒலியைக் கேட்டாலே மெல்லிசைமன்னர்கள் கண்முன்னால் தெரிவார்கள் என்று எண்ண வைக்குமளவுக்கு அதன் தாக்கம் இருந்ததெனினும் ஏனைய தாள வாத்தியங்களை அவற்றிற்கு ஒத்திசைவாக பல பாடல்களில் தந்தார்கள்.எம்.ஜி.ஆர் படங்களில் மட்டுமல்ல சிவாஜி மற்றும் பலரின் படங்களிலும் பொங்கஸ்   வாத்தியத்தை மிக அற்புதமாகப் பயன்படுத்தினார்கள்.

    மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் லத்தீன் அமெரிக்க இசையால் இவ்வளவு கவரப்பட்டிருக்கிறார் என்பதை எண்ணி வியப்பும் மேலிடுவதுண்டு.

    உயர்ந்த குரலில் மட்டுமல்ல சமநிலை சுருதியிலும் சௌந்தர்ராஜனை பாட வைத்து பாடலின் உணர்வை மெருகேற்றும் வகையில் அமைந்த இந்தப்பாடலைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இதுபோல பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போக முடியும். வீர உணர்வு ,காதல் பாடல் மட்டுமல்ல , மகிழ்ச்சி, சோகம் ,விரகம் என எல்லாவகையான பாடல்களிலும் பொங்கஸ் தாள வாத்தியத்தை மற்ற இசைக்கருவிகளுடன் இணைத்து தந்த பாடல்கள் ஏராளம்.

    பாலும் பழமும் கைகளில் ஏந்தி - பாலும் பழமும் [1961] -  TMS  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    மென்மையான கிட்டார் மீட்டல், அதை கைபிடித்து தாங்குவது போல பொங்கஸ் தாங்கி வர,  தாளம் இதயம் வருடும் ஹம்மிங் , அதைத்தொடரும்  இழை தனித்தொலிக்கும்  ஒற்றை வயலின் ,அதை இதமாக அணைத்து வரும் குழல் ...ஆகா இத்தனை இனிமைகளும் இருபது செக்கனிலேயே நிகழ்கிறது. என்ன ஒரு அருமையான ஆரம்பம்!

    பாடல் முழுவதும் உணச்சியின் தீவிரத்தை ஆசுவாசப்படுத்தும் பாங்கில் தாவித் தாவி , பின்னிப்பிணைந்து பின் தொடரும் குழலிசையின்  அற்புதத்தைக் கேட்டு பிரமிக்க முடியும்.

    மனைவியின் தீரா நோயை தீர்க்கும் வைத்தியரான கணவன் மென்மையாக அவளை தேற்றுவதாகவும் ,தனது கவலையை மென்மையாக வெளிப்படுத்துவதுடன் அது அவளையே வருத்தக்க்கூடாது என்னும் பாங்கில்  துயரத்தில்  அதை மறைக்கும் அற்புதத்தையும் இந்த இனிய இசைமெட்டில் அமைத்த நுட்பத்தையும் காண்கிறோம்.

    அதுமட்டுமல்ல இத்தனை நுட்பத்தையும் தங்கிச் செல்லும் தகுதியும்,வளமும் கொண்ட பண்பட்ட  நடபைரவி ராகத்தையும் ,அதன் கவலை தரும் சோகச்சாயலை சினிமாவில் ஒரு பயிராக விதைத்த பெருமையையும் காண்கிறோம்.மெல்லிசைமன்னர்களுக்கு முன்னர் இந்த ராகத்தை வேறு யாரும் தமிழ் சினிமாவில் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை.

    மெல்லிசையின் இனிமைக்கு கண்ணதாஸனின்  எளிமைமிக்க பாடல் வரிகள் உயிர் கொடுக்கிறது. 1960 கள் என்றாலே கண்ணதாசன் - விஸ்வநாதன் ராமமூர்த்தி இணை வெற்றியின் கூட்டணி என்று சொல்லிவிடலாம்.இசையை நெருடாத பாடல் வரிகளுடன் இணைந்த தேனமுதங்கள்.

    இது போல ஒவ்வொரு பாடலையும் விளக்கி எழுத முடியும்.

    மரபாகப் பாடி வந்த சௌந்தர்ராஜனை புதியபாங்கில் பாட வைத்து , பொங்கஸ் இசையையம் இணைத்துத் தந்த பாடல்களுக்கு சில உதாரணங்கள்:

    01 ஹல்லோ மிஸ் ஹல்லோ மிஸ்  - என் கடமை  [1964] -  TMS  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    02 போனால் போகட்டும் போடா  - பாலும் பழமும் [1961] -  TMS  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    03 வந்த நாள் முதல்  - பாவமன்னிப்பு  [1961] -  TMS  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    04 அண்ணன் காட்டிய வழியம்மா  - படித்தால் மட்டும் போதுமா  [1961] -  TMS  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    05 மெல்ல நட மெல்ல நட   - புதிய பறவை   [1964] -  TMS  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    06 சத்தியம் இது சத்தியம்  - இது சத்தியம்  [1961] -  TMS  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    07    ஒரு பெண்ணை பார்த்து   -  தெய்வத்தாய்  [1961] -  TMS  -  இசை : விஸ்வநாதன் ராமூர்த்தி

    08 மூன்றேழுத்தில் என் மூச்சிருக்கும்   - என் கடமை   [1961] -  TMS  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.

    09  என்னதான் நடக்கும் நடக்கட்டும்  - பணத்தோட்டம்  [1961] -  TMS  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    10 நான் ஆணையிட்டால்  - எங்கவீட்டுப் பிள்ளை  [196] -  TMS  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    11 உலகம் இறந்தது எனக்காக  - பாசம்  [1962] -  TMS  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    12 உள்ளம் என்பது ஆமை - பார்த்தால் பசிதீரும்  [1962] -  TMS  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    13 கேள்வி பிறந்தது அன்று  - பச்சை விளக்கு   [1961] -  TMS  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    15 எங்கே நிம்மதி   - புதிய பறவை   [1964]  -  TMS  -  இசை : விஸ்வநாதன் ராமூர்த்தி

    16 மலர்களை போல தங்கை  - பாசமலர் [1961] -  TMS  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    17 ஓகோகோ மனிதர்களே  -  படித்தால் மட்டும் போதுமா [1961] -  TMS  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    18   நான் கவிஞனுமில்லை  -  படித்தால் மட்டும் போதுமா [1961] -  TMS  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    20    நான் என்ன சொல்லி விட்டேன் - பலே பாண்டியா  [1961] -  TMS  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    21    கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி   [1964] -  TMS  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    22    நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை  - படகோட்டி   [1964]-  TMS  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    23    தரை மேல் பிறக்க வைத்தான்   - படகோட்டி   [1964] -  TMS  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    24    ஏன் என்ற கேள்வி என்ற   -  ஆயிரத்தில் ஒருவன்   [1965] -  TMS  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    25    ஓடும் மேகங்களே    -  ஆயிரத்தில் ஒருவன்   [1965]-  TMS  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    26    அதோ அந்தப் பறவை போல   -  ஆயிரத்தில் ஒருவன்   [1965] -  TMS  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    27    கண் போன போக்கிலே   - பணம் படைத்தவன்    [1965]-  TMS  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    28    எனக்கொரு மகன் பிறப்பான்    - பணம் படைத்தவன்    [1965] -  TMS  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    29   அவளுக்கும் தமிழ் என்று பேர்    -  பஞ்ச வர்ணக்கிளி    [1965] -  TMS  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    30    அண்ணன் என்னடா தம்பி என்னடா    -  பழனி   [1965]-  TMS  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    31    அதோ அந்தப் பறவை போல   -  ஆயிரத்தில் ஒருவன்   [1965] -  TMS  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    32   பாவாடை தாவணியில்   - நிச்சயதாம்பூலம்   [1962] - TMS - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    1950 களில் அறிமுகமாகி 1960 களில் இணையற்ற ஜோடிகளாக துலங்கியபவர்கள் டி.எம்.சௌந்தரராஜன் - பி.சுசீலா இணை.இரு குரல்களும் தமிழ் திரையிசையை ஆக்கிரமித்த குரல்களாயின.எல்லோரையும்கவரக்கூடிய இரு குரல்களை மிகவும் நுட்ப்பமாகவும் எழுச்சியுடனும் மெல்லிசைமன்னர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.

    பி.சுசீலாவின் குரலில் பெண்மை இருக்கிறதென்றால் சௌந்தர்ராஜனின் குரலில் இணையற்ற ஆண்மை துலங்கிற்று. பெண்மையின் சிறிய சாயல் கூட அவரது குரலில் கிடையாது.ஆண்மையும் ,பெண்மையும் கலந்து தானே மனித இனம். பெரும்பாலானவர்களிடம் உருவத்தில் கூட ஆண்மை ,பெண்மை ஓங்கிருந்தாலும் ,ஆங்காங்கே மெல்லிய ஆண்மையும் ,பெண்மையும் கலந்திருப்பதை உருவங்களில் காணமுடியும். பெரும்பாலும் ஆண் சினிமாப்பாடகர்களில் பெரும்பான்மையினரிடம் இந்த பெண் தன்மை குரலில் இருப்பதை நாம் கேட்டிருக்கின்றோம்.தியாகராஜ பாகவதர்,சீர்காழி, டி.ஆர்.மகாலிங்கம், எஸ்.சி.கிருஷ்ணன்,எஸ்.பி.பாலசுப்ரமணியம் ,எம்.எல்.ஸ்ரீகாந்த் போன்ற பாடகர்கள் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

    ஆனால் பெண்மை நிறைந்த தியாகராஜ பாகவதர் குரலின் சாயம் கொண்ட டி.எம்.சௌந்தராஜனின் குரலில் ஒரு துளிகூட பெண்மைத்தன்மை கிடையவே கிடையாது.அது இயற்கையாக அவருக்கு கிடைத்த கொடையாகும்.சுசீலாவின் குரலில் அசல் பெண்மை நிறைந்துள்ளது. தேனும் பாலுமாய் இணைந்த இந்த இரு குரல்களிலும் வெளிவந்த பாடல்களில் மெல்லிசையின் புன்முறுவல், இழையோடும் சோகம்,காதலின் ஜீவ ஓட்டம் ,கதாபாத்திரங்களின் முதிர்ச்சி,கனிவு ,விரக்தி என பல்வகை உணர்வுகளை மெல்லிசைமன்னர்கள் பரீட்சித்துப் பார்த்தார்கள்.

    மரபின் வேர்களை பற்றிப்பிடித்துக் கொண்டு மெல்லிசையின் உயிர்ப்புகளில் தங்கள் கைவரிசையைக்காட்டினார்.

    இருவரின் குரல்களிலும் 1960 களில் வெளிவந்த சில பாடல்கள்

    01 நான் பேச நினைப்பதெல்லாம் - பாலும் பழமும் [1961] -  TMS + பி.சுசீலா  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    02 இரவும் நிலவும் மலரட்டும்     - கர்ணன்   [1964] -  TMS + பி.சுசீலா  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    03 நீரோடும் வகையிலே  - பார் மகளே பார்  [1963] -  TMS + பி.சுசீலா  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    04 வாழ நினைத்தால் வாழலாம்   - பலே பாண்டியா  [1961] -  TMS + பி.சுசீலா  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    05 அத்திக்காய் காய் காய்  - பலே பாண்டியா  [1962] -  TMS + பி.சுசீலா  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    06 பொய்யிலே பிறந்து  - ஆனந்த ஜோதி  [1962] -  TMS + பி.சுசீலா  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    07 பனியில்லாத  மார்கழியா  - ஆனந்த ஜோதி  [1962] -  TMS + பி.சுசீலா  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    08 மலர்ந்தும் மலராத  - பாசமலர் [1961] -  TMS + பி.சுசீலா  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    09 வண்ணக்கிளி சொன்ன மொழி  - தெய்வத் தாய் [1963] -  TMS + பி.சுசீலா  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    10 இந்தப் புன்னகை என்ன விலை  -  தெய்வத் தாய் [1963]  -  TMS + பி.சுசீலா  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    11    இதுவரை நீங்கள் பார்த்த பார்வை   - பணக்கார  குடும்பம்   [1963] -  TMS + பி.சுசீலா  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    12   அன்று வந்ததும் இதே நிலா  - பணக்கார  குடும்பம்   [1963] -  TMS + பி.சுசீலா  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    13    துள்ளி ஓடும்  கால்கள் எங்கே   - பெரிய இடத்துப் பெண்  [1962] -  TMS + பி.சுசீலா  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    14    வண்ணக்கிளி சொன்ன மொழி  - தெய்வத் தாய் [1964] -  TMS + பி.சுசீலா  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    15    பேசுவது கிளியா   -  பணத்தோட்டம்  [1962]  -  TMS + பி.சுசீலா  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    16    ஜவ்வாது மேடையிட்டு   - பணத்தோட்டம்   [1962] -  TMS + பி.சுசீலா  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    17    நான் உயர உயர போகிறேன்    - பணத்தோட்டம்   [1961] -  TMS + பி.சுசீலா  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    18    பெண் போனால் இந்த பெண் போனால்   - எங்க வீட்டு பிள்ளை    [1963] -  TMS + பி.சுசீலா  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    19    குமரிப்பெண்ணின் உள்ளத்திலே  - எங்க வீட்டு பிள்ளை   [1963] -  TMS + பி.சுசீலா  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    20    அமைதியான நதியினிலே ஓடம்   - ஆண்டவன் கட்டளை    [1961] -  TMS + பி.சுசீலா  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    21    மனம் கனிவான அந்த   - இது சத்தியம்   [1963] -  TMS + பி.சுசீலா  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    22    கொடி அசைந்ததும் காற்று  வந்ததா   - பார்த்தால் பசி தீரும் [1962] -  TMS + பி.சுசீலா  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    23    இரவும் நிலவும் மலரட்டும்     - கர்ணன்   [1964] -  TMS + பி.சுசீலா  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    24    மகா ராஜன் லாக்கை     - கர்ணன்   [1964] -  TMS + பி.சுசீலா  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    25    கனிய கனிய மழலை பேசும்   - மன்னாதி மன்னன்  [1961] -  TMS + பி.சுசீலா  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    26    எங்களுக்கும் காலம் வரும் - பாலும் பழமும் [1961] -  TMS + பி.சுசீலா  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    27    பந்தல் இருந்தால் கொடி படரும்     - பந்தபாசம்  [1962] -  TMS + எஸ்.ஜானகி   -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    28    பாட்டுக்கு பாட்டெடுத்து     - படகோட்டி    [1964] -  TMS + பி.சுசீலா  -  இசை :      விஸ்வநாதன் ராமமூர்த்தி

    29    நான் பேச நினைப்பதெல்லாம் - பாலும் பழமும் [1961] -  TMS + பி.சுசீலா  -  இசை : விஸ்வநாதன் ராமூர்த்தி

    30    என்னை யார் என்று எண்ணி  - பாலும் பழமும் [1961] -  TMS + பி.சுசீலா  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    31    வாராதிருப்பானோ வண்ண மலர்    - பச்சை விளக்கு   [1961] -  TMS + பி.சுசீலா  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    TMS + எல்.ஆர்.ஈஸ்வரி:

    மெல்லிசைமன்னர்களின் இசை ,ஏன் பொதுவாக அந்தக்காலத்து பாடல்களை யார் பாடினாலும் நன்றாகவே இருந்திருக்கும் என்பதை நாம் இசைநிகழ்ச்சிகளில் புதிதாக பாடும் சிறுவர்,சிறுமியர், மற்றும் இளைஞர்கள் , வயதுவந்தவர்கள் என யார் பாடினாலும் இனிமையாக இருப்பதை அறிவோம்.இக்கருத்தை ஒத்துக் கொள்வது போல பி.சுசீலா அவர்கள் இசை நிகழ்சசி ஒன்றில் அவரை புகழந்து பேசிய பொது , மிக அடக்கமாக "அந்தக்காலத்து பாடல்களை நான் மட்டுமல்ல ,யார் பாடினாலும் நன்றாக இருக்கும் " என்று அடக்கமாக கூறினார்.

    இனிமையான குரல்வளம் கொண்ட சுசீலா ஒருபுறம் என்றால் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல் தனிரகம் கொண்டது.டி.எம்.சௌந்தரராஜனுடன் இணைந்து அவர் பாடிய பாடல்களும் தனித்துவ அழகு வாய்ந்தது.குறிப்பாக அவரது குரலை ஹம்மிங்கில் அனாயாசமாகப் பயன்படுத்தி மிக இனிமைவாய்ந்த பாடல்களைத் தந்துள்ளார்கள்.எழுச்சியாக பாடக்கூடிய எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலை அதற்கேற்றவகையில் பயன்படுத்தியும் வெற்றி கண்டுள்ளனர்.

    01    அவளுக்கென்ன அழகிய முகம்    - இது சத்தியம்   [1961] -  TMS + எல்.ஆர்.ஈஸ்வரி   -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    02    ஒன்று எங்கள் ஜாதியே    - ஆனந்த ஜோதி    [1961] -  TMS + எல்.ஆர்.ஈஸ்வரி   -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    03    கல்லெல்லாம் மாணிக்க    - ஆலயமணி    [1961] -  TMS + TMS + எல்.ஆர்.ஈஸ்வரி   -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    04    நான் மாந்தோப்பில்    - எங்க வீட்டுப் பிள்ளை   [1961] -  TMS + TMS + எல்.ஆர்.ஈஸ்வரி   -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    05    ஒருவர் வாழும் ஆலயம்    - நெஞ்சில் ஓர் ஆலயம்    [1961] - TMS + எல்.ஆர்.ஈஸ்வரி  -  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    06   பவளக்கொடியிலே     - பணம் படைத்தவன்     [1963] - TMS + எல்.ஆர்.ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    07   இது வேறுலகம் தனிஉலகம்   - நிச்சய தாம்பூலம் [1961] - TMS + எல்.ஆர்.ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    05   அத்திக்காய் காய்     - பலேபாண்டியா [1961] - TMS + பி.பி.ஸ்ரீனிவாஸ் + சுசீலா + ஜமுனாராணி   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    சௌந்தர்ராஜனை பிற ஆண் பின்னணிப்பாடகர்களுடன் இணைத்து பல இனிய பாடல்களை மெல்லிசைமன்னர்கள் தந்தனர்.

    01   பொன்னொன்று கண்டேன்     - படித்தால் மட்டும் போதுமா [1961] - TMS + பி.பி.ஸ்ரீனிவாஸ்   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    02   நல்லவன் எனக்கு நானே நல்லவன்     - படித்தால் மட்டும் போதுமா [1962] - TMS + பி.பி.ஸ்ரீனிவாஸ்   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    03   அத்திக்காய் காய்     - பலேபாண்டியா [1962] - TMS + பி.பி.ஸ்ரீனிவாஸ் + சுசீலா + ஜமுனாராணி   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    04   மழை கொடுக்கும்     - கர்ணன் [1964] - TMS + பி.பி.ஸ்ரீனிவாஸ் + சீர்காழி + லோகநாதன்   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    05   ஆறோடும் மண்ணில் எங்கும்     - பலேபாண்டியா [1963] - TMS + பி.பி.ஸ்ரீனிவாஸ் + சீர்காழி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

    ஓங்கிக்குரல் எடுத்துக் பாடும் மரபில் வந்தவரை மெல்லிசைக்கு எவ்விதம் பயன்படுத்தினார்களோ அதே போல பிற பாடகர்களை அவர்களின் குரல்களின் தன்மைகளுக்கு ஏற்ப மெல்லிசைமன்னர்கள் பயன்படுத்தினார்கள்.

    [ தொடரும் ]

    Postad



    You must be logged in to post a comment Login