Recent Comments

    கற்பனைச் செய்திகளை முந்தித் தருவது கற்பனாவே!

    கற்பனா கற்பனையில் முன்னணியில் நிற்கும் இணைய இதழ்

    ஏப்ரல் 1 தமிழுணர்வாளர் தின விசேட சிறப்பிதழ்

    Thayagamweb-featuredapril1

    இசைத்துறையிலிருந்து விலகுகிறேன் முகநூல் பாடகி கல்பனா அதிரடி அறிவிப்பு

    அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்! தீக்குளிப்புகளைத் தடுக்க ஐரோப்பிய அரசுகள் பகீரதப் பிரயத்தனம்

    kalpana1முகநூலில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட இசைமாமணி கல்பனா தான் இசைத்துறையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுன்னாகம் கழிவு எண்ணெய் விவகாரம், சாதி வேறுபாடு போன்ற சமூகப் பிரச்சனைகளுக்கு தன் பாடல்கள் மூலம் தீர்வு காண முயற்சிக்கும் இவர், திடீரென்று இசைத்துறையிலிருந்து விலகுவதாக அறிவித்ததையிட்டு, பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. தனக்கு கிடைத்த எதிர்பாராத வரவேற்பினால், ரசிகர்களின் அன்புத்தொல்லை தாங்காமல் இசைத்துறையை விட்டும் பகிரங்க வாழ்வை விட்டும் விலகுவதாக கூறப்பட்ட போதிலும், தமிழ்ச்சினிமாவில் நடிப்பதற்காகக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்துவதற்காகவே அவர் இசைத்துறையிலிருந்து விலகுவதாக ஹேஸ்யங்கள் வெளிவந்துள்ளன. இசைத்துறையிலிருந்து இவர் ஒதுங்குவது, கர்நாடக சங்கீதத்தின் வளர்ச்சிக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தும் தடைக்கல்லாக இருக்கப் போகிறது என்று அறிக்கை வெளியிட்டுள்ள சென்னை கர்நாடக சங்கீத சபா, இவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மன்றாட்டமாகக் கேட்டுள்ளது. இது குறித்து அம்மா ஜெயலலிதாவின் ஆசியுடனான வேண்டுகோள் ஒன்றை, முதல்வர் பன்னீர்ச்செல்வம் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகெங்கும் உள்ள இவரது ரசிகர்கள் தீக்குளிக்கக்கூடும் என்ற அச்சத்தில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் தலைநகர்களில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களை அந்த நாட்டு அரசுகள் கால வரையறையின்றி மூடியுள்ளன. இவரது திடீர் அறிவிப்பினால் கிளர்ந்தெழுந்த சோமாலியா ரசிகர் மன்றத்தினர் மொகாடிசுவின் வீதிகளில் திரண்டு, வன்முறைகளில் ஈடுபட்டதால், பயங் கொண்ட அல் சபா தீவிரவாதிகள் தங்கள் பாலைவன முகாம்கள் நோக்கி ஓட்டம் பிடித்தனர். வெறி கொண்ட ரசிகர்களை எதிர்கொள்ளப் பயந்த சோமாலிய இராணுவமும் முகாம்களுக்குள் முடங்கிக் கொண்டுள்ளது. மொகாடிசு முழுமையாக கல்பனா ரசிகர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தமையால், நிலைமை வழமைக்குத் திரும்பி, வீதியோரங்களில் சோமாலியர்கள் அமர்ந்து கத் எனப்படும் கஞ்சா ரக இலையைச் சப்பியபடியே சத்தமாக சர்வதேச அரசியல் ஆய்வில் ஈடுபட்டு, கதைத்துக் கொண்டே இருக்கிறார்கள் என கற்பனாவின் சோமாலிய செய்தியாளர் சோ.மாறிமுத்து தெரிவிக்கிறார். சோமாலிய அரச இராணுவத்தால் கட்டுப்படுத்த முடியாமல் இருந்த இந்த தீவிரவாதிகளை கல்பனாவின் ரசிகர்கள் விரட்டியதால் அந்த நாட்டில் அமைதி நிலைமைக்கான சாத்தியக் கூறுகள் உள்ளதால், கல்பனா ரசிகர்களைக் கொண்ட அமைதிப்படை ஒன்றை உருவாக்குவது குறித்து கல்பனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவுஸ்திரேலியா விரைந்துள்ளார். பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் பட்சத்தில், மொகாடிசுவில் நிலை கொண்டுள்ள ஆபிரிக்க அமைதிப்படையினர் பாதுகாப்புப் பொறுப்புகளை கல்பனா ரசிகர்களிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாபதி பராக் ஒபாமா - கல்பனா பேச்சுவார்த்தையில், ஆபிரிக்க அமைதிப்படையின் உயிர்ப் பாதுகாப்புக்கான உத்தரவாதம் பற்றியும் பேசப்படலாம் என வெள்ளைமாளிகை அதிகாரிகள் கற்பனா செய்தியாளருக்குத் தெரிவித்தனர். மொகடிசுவின் பெருஞ்சாலைகளில் கல்பனாவின் கட்டவுட்டுகளை கட்டும் பணியில் கல்பனா நற்பணி மன்றத்தினர் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் காணக் கூடியதாக இருந்தது. கட்டவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் நடக்கலாம் என்ற வதந்தி பரவியதை அடுத்து நாலாதிசைகளிலிருந்தும் பாத்திரங்களுடன் சோமாலியர்கள் தலைநகரம் நோக்கி கூட்டம் கூட்டமாகப் படையெடுப்பதாகவும் சோ.மாறிமுத்து மேலும் தெரிவிக்கிறார். இது பற்றிக் கருத்துக் கேட்க, பல்வேறு கல்பனா ரசிகர் மன்றங்களுடன் தொடர்பு கொண்ட போது, கூச்சலிட்டுக் குளறி அழுத நிர்வாகிகள், 'அண்ணை, நீங்களெண்டாலும் அக்காவைத் தொடர்ந்து பாடச் சொல்லுங்கோ' என்று புலம்பினர். அவர்களுக்கு ஆறுதல் சொன்ன கற்பனா செய்தியாளர்களின் வற்புறுத்தலின் பேரில், கற்பனா ஆசிரியர் நோர்வே நாட்டில் உள்ள சர்வதேச கல்பனா ரசிகர் மன்றத் தலைமைச் செயலகத்துடன் தொடர்பு கொண்டார். தலைமைச்செயலக முக்கியஸ்தர்கள் கல்பனாவுடன் தொடர்பு கொண்டு உண்மையை வெளிக்கொணரப் போவதாகவும், கற்பனா போன்ற சமூகப் பொறுப்புணர்வுள்ள ஊடகம் இந்த விடயத்தில் கொண்டுள்ள அக்கறையைப் பாராட்டி, எந்தத் தகவலாக இருந்தாலும், அது கற்பனாவுக்கு மட்டும் என பிரத்தியேகமாகத் தரப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்கள். இந்த விடயம் பற்றி பிந்திக் கிடைக்கும் செய்தியை நீங்கள் இந்தச் சிறப்புப் பதிப்பின் இறுதியில் வாசிக்கலாம்.

    கைகுலுக்க மறுத்த விக்கி! உலகெங்கும் அதிர்வலைகள்! அதிர்ச்சியில் உறைந்தது புதுடெல்லி!

    Ranil2 யாழ்ப்பாணத்திற்கு விஜயம் Vigneswaraமேற்கொண்ட பிரதமர் ரணிலுடன் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் கை குலுக்க மறுத்த சம்பவம் ராஜதந்திர வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தேசியத் தலைவரின் தற்கொலைத் தாக்குதல்கள் போல, அடுக்கடுக்காக சர்வதேசத்தை தன்னுடைய ராஜதந்திரத் தாக்குதல்களால் அதிர்ச்சிக்குள்ளாக்கி வரும் முதல்வர் விக்னேஸ்வரனின் அடுத்த நடவடிக்கை எப்படி இருக்குமோ என்று மனம் பதைத்தபடி ராஜதந்திரிகள் குழம்பிப் போயுள்ளனர். முதலில் இனஅழிப்புத் தீர்மானம் மூலம் சர்வதேசத்திற்கு நெத்தியடி கொடுத்த விக்னேஸ்வரன் இப்போது பிரதமர் ரணிலுடன் கை குலுக்க மறுத்தது பற்றி அரசியல் நோக்கர்கள் பல்வேறு ஊகங்களை வெளியிட்டுள்ளனர். சமீபத்தில் இந்தியப் பிரதமர் மோடி யாழ்ப்பாணம் விஜயம் செய்த பின்னால், இலங்கைப் பிரதமருக்கு கை குலுக்க மறுத்து தன்னுடைய சாணக்கியத்தை நிலை நாட்டிய விக்னேஸ்வரனின் அடுத்த நடவடிக்கை பற்றி ஆராய, தெற்கு கட்டடத் தொகுதியில் இந்திய ராஜதந்திரிகள் மந்திராலோசனை நிகழ்த்தி வருகின்றனர். இது குறித்து சமரசப் பேச்சுவார்த்தை நடத்த விக்னேஸ்வரனையும் ரணிலையும் புதுடெல்லி அழைக்கலாம் என்று இந்திய ராஜதந்திர வட்டாரங்கள் கற்பனாவுக்கு தெரிவித்தன. "India has no time to waste. Appeasing Mr.Vigneswaran should be the first and topmost priority for Indian government. Failing that, the repercussions will be disastrous. India can't afford another intervention." என்று பிரபல இந்திய இராணுவ ஆய்வாளர் ஒருவர் கற்பனாவுக்கு அளித்த மின்னோலைப் பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பற்றி India has a big role to play in Sri Lankan politics என்று பிரபல இந்திய ஆங்கில நாளிதழ் வெளியிட்ட ஆசிரியர் தலையங்கச் செய்தியை தமிழாக்கம் செய்த கனடாத் தமிழ்ப் பத்திரிகை ஒன்று 'இலங்கைப் பிரச்சனையில் விளையாடுவதற்கு இந்தியா ஒரு பெரிய உருளையை வைத்திருக்கிறது' என்று தலையங்கச் செய்தி வெளியிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இடியப்பம் வாங்கிய கையோடு, அந்தப் பத்திரிகையை எடுத்த கனடிய வாசகர் ஒருவர் தலையங்கத்தைப் பார்த்ததும் 'நாலாவது பெரிய இராணுவத்துக்கு வேலையைக் குடுத்த எங்களுக்கு உந்த உருளைக்கு விளையாட்டுக் காட்டுறது பெரிய விசயமோ?' என்று புன்சிரிப்புடன் கூறினார் என கற்பனாவின் நடமாடும் செய்தியாளர் பர.தேசிங்கன் தெரிவித்தார். சமீபத்திய இந்தியாவின் இலங்கை அரசு ஆதரவுப் போக்குக்கு எதிராக, விக்கியரின் தீர்க்கதரிசனத்துடன், வடமாகாண அரசு திருகோணமலையைத் துரும்புச் சீட்டாகப் பயன்படுத்தி, சீனாவுடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும், அதன் பின்விளைவுகள் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அமைதிக்கு ஆபத்தாக முடியும் என்ற கருத்தும் மேற்கு வல்லரசுகள் மத்தியில் எழுந்துள்ளன. திருகோணமலை வடக்கு மாகாண சபையின் கட்டுப்பாட்டில் இல்லையே என்று கற்பனா செய்தியாளர் சுட்டிக்காட்டியபோது, 'தமிழர்களின் எல்லை வேலி  அரக்கும் பாரம்பரியம் தங்களுக்குத் தெரியும்' என்றும் 'சும்மா கனக்கத் தெரிஞ்ச மாதிரிக் கதைக்காதை' என்றும் மேற்குலக ராஜதந்திரிகள் தெரிவித்தனர். இது குறித்து கற்பனா செய்தியாளர்கள் வெள்ளை மாளிகையுடன் தொடர்பு கொண்ட போது, இது அதிமுக்கிய பாதுகாப்பு விவகாரம், பகிரங்கமாகக் கருத்துக் கூற முடியாது என்று வெள்ளை மாளிகைப் பேச்சாளர் குறிப்பிட்டார். இருப்பினும் கற்பனாவுக்கு வெள்ளை மாளிகையில் உள்ள இரகசிய தொடர்பு வட்டாரங்கள் மூலமாகப் பெற்ற தகவல்களின்படி, விக்கியரின் இந்த நடவடிக்கைகளை தாங்கள் உற்றுநோக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே முழுநேரமாக ஈழப்பிரச்சனையை உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் ராஜதந்திரிகளா இதற்கும் பொறுப்பாக இருப்பார்கள் என்று கற்பனா வினவிய போது, 'இல்லை, தற்போது விக்கியரின் நடவடிக்கைகளுக்கென பென்டகன், சி.ஐ.ஏ, என்.எஸ்.ஏ உட்பட்ட அமைப்புகளின் மிக முக்கியமான அதிகாரிகள் முழுநேரமாக ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்' என்றும் அவர்களின் கண்ணுக்குள் விடுவதற்கு உடனடியாக எண்ணெய்க்கான டென்டர்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இது பற்றி மேலதிக தகவல்களைத் தருவது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எனவும் அந்த வட்டாரம் தெரிவித்தது. இதற்குள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கப் பிரதமர் 'விக்னேஸ்வரனுடன் இணைந்து செயற்படத் தயார்' என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இருப்பினும் விக்கியர் அமெரிக்காவுடன் நேரடியாகவே பேச விரும்புவதாகக் கூறப்படுகிறது. 'உவர் லோயர் எண்டா நான் ஜட்ஜ்' என்றும் விக்கியர் உறுமியதாகவும் கூறப்படுகிறது. விக்னேஸ்வரனின் அதிரடி நடவடிக்கைகளால் மெய்சிலிர்த்த தமிழுணர்வாளர்கள் வெடி கொழுத்தியும் இனிப்பு வழங்கியும் புலன் பெயர்ந்த நாடுகளின் தலைநகர்களில் வீதி மறிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் விக்னேஸ்வரனே, எங்கள் தலைவர்! எங்கள் தலைவரை அங்கீகரி! என்று கனடா, அமெரிக்கா, ஐ.நா சபை போன்றவற்றை நோக்கிய கோஷங்கள் முழங்கப்பட்டதுடன், விக்கியரின் படம் போட்ட பதாகைகளை ஏந்திய குழந்தைகளும் காணப்பட்டனர். அங்கு காணப்பட்ட தமிழுணர்வாளினி ஒருவரை கனடிய தமிழ் ஊடகம் ஒன்று பேட்டி கண்ட போது, 'எப்பிடியும் அடுத்த பொங்கலுக்கு ஈழம் தான்' என்று மகிழ்ச்சி பொங்கக் குறிப்பிட்டார். விக்கியரின் நடவடிக்கை குறித்து தமிழீழம் வாழ் மக்களின் கருத்தை அறியும் பொருட்டு கற்பனா ஊடகவியலாளர் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்திருக்கக் கூடியவர் என்ற வகையில் சின்னக்கடையில் மீன் விற்கும் அன்னை திரேசம்மாவிடம் கருத்துக் கேட்ட போது, 'ஏற்கனவே ஒரு நாசமறுவான் வந்து எல்லாத்தையும் நாசமாக்கிப் போட்டான். இப்ப என்ன .......க்கு உவன் கொழுவலுக்குப் போறான்?' என்று கருத்துக் கூறினார். சந்தைச் சத்தத்திற்குள்ளும் எல்லோருக்கும் கேட்கும் வகையில் சத்தமாகக் கூறிய இவரது கருத்தைக் கேட்ட தாயக தமிழுணர்வாளர்கள் முறுகிய போதிலும், அம்மணியின் கையில் இருந்த திருக்கை வெட்டும் கத்தியைக் கண்டு மெதுவாக வெற்றிகரமாகப் பின்வாங்கி நழுவியதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகிறார்.

    ஐயப்பன் கோவில் நிலக்கீழ் அதிர்ச்சி! கூட்டமைப்புத் தலைமை குலை நடுக்கம்!

    sampanthan2சமீபத்தில் கனடா ஐயப்பன் கோயில் நிலக்கீழ் மண்டபத்தில் ஈழ அரசியலில் கூட்டமைப்புத் தலைமையின் நடவடிக்கைகளைக் கண்டித்து கூட்டம் ஒன்று நடைபெற்றது தெரிந்ததே. புலன் பெயர்ந்தவர்களின் கருத்துப்படியே கூட்டமைப்புச் செயற்பட வேண்டும் என்றும் தாங்கள் நினைத்தால் கூட்டமைப்புத் தலைமையை மாற்றுவோம் என்றும் கலந்து கொண்ட பலர் சூளுரைத்ததைத் தொடர்ந்து, கூட்டமைப்புத் தலைமை குலை நடுங்கிப் போயுள்ளது. சம்பந்தர், சுமந்திரனின் தலைமை குறித்து அதிருப்தியடைந்த கனடா றிமோட் கொண்ட்ரோல் அரசியல் அமைப்பினர் கஜேந்திரகுமார் போன்றவர்களை உள்வாங்கி ஈழத்தை வென்றெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தனர். புலன் பெயர்ந்தவர்களுக்காகவே போராட்டம் நடத்திய தேசியத் தலைவர் போன்று, சம்பந்தரும் புலன் பெயர்ந்தவர்களை எதிர்த்துsampanthan3 அரசியல் செய்ய முடியாத தன் கையறு நிலை பற்றி நெருக்கமானவர்களுடன் மனம் புழுங்கியதாகவும், தனது தலைமையைத் தக்க வைக்க இவர்களுடன் சமரசத்திற்கு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சமரசத்திற்குப் போகாவிட்டால், முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி, தனது பதவிக்கு அள்ளி வைக்கக் கூடும் என சம்பந்தர் பயப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதன் எதிரொலியே சமீபத்திய சுமந்திரனின் கனடா விஜயம் என்று கூறப்படுகிறது. இந்த கனடாவின் உத்தியோகப்பற்றற்ற தமிழ்ப்பிரதிநிதிகளுடன் உத்தியோகபூர்வ சமரசப் பேச்சுவார்த்தை நடத்த வந்ததன் காரணமாகவே, சுமந்திரனுக்கு கொடும்பாவி எரிப்பு நடைபெறாமல் இருந்தது என நம்பப்படுகிறது.

    கனடா தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இடையில் பிளவு அமெரிக்கச் சதி என அரசியல் நோக்கர்கள் கருத்து!

    TNA sumanthiranகூட்டமைப்பு முக்கியஸ்தர் சுமந்திரன் கனடா வருகை தந்த போது, நடத்தப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில், தெரிவு செய்யப்பட்ட பத்திரிகையாளர்களுக்கே அழைப்பு விடுக்கப்பட்டதால், கலந்து கொண்டவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படாதவர்களுக்கும் இடையில் பெரும் பிளவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அழைப்புக் கிடைத்தவர்கள் தங்களையே கூட்டமைப்பு உண்மையான ஊடகவியலாளர்கள் என அங்கீகரித்திருப்பதாகவும், தாங்களே உண்மையான தமிழ்த் தேசிய ஊடகவியலாளர்கள் எனவும் பீற்றித் திரிந்ததால் கடுப்பாகிய மற்ற ஊடகவியலாளர்கள் முறுகிக் கொண்டுள்ளதாக கற்பனா ஊடகவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். கனடிய தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் கற்பனா ஊடகவியலாளர்களுக்கு அங்கத்துவம் மறுக்கப்பட்டிருந்தது வாசகர்களுக்குத் தெரிந்ததே. கற்பனைச் செய்திகளை உண்மை என்று கூறி தாங்கள் செய்தி வெளியிட்டு வந்த ஏகபோக உரிமைக்கு குந்தகமாக உத்தியோகபூர்வமாகவே தங்கள் செய்திகளைக் கற்பனை என்று கூறி வெளியிடும் கற்பனாவுக்கு அங்கத்துவம் வழங்கப்படக் கூடாது என்று கனடா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் ஏகமனதாகத் தீர்மானித்திருந்தது. இதனால் எந்த விதத்திலும் கோபமோ, மனமுடைவோ ஏற்படாத கற்பனா செய்தியாளர்கள் வழமை போல, கற்பனைச் செய்திகளை முந்தித் தந்தவண்ணம் உள்ளார்கள். தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படாதது குறித்தும் அவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை. 'கற்பனையில் எழுதப் போகும் பேட்டிக்கு மினக்கெட்டு அங்க போக வேணுமோ?' என்று கற்பனா செய்தியாளர்கள் ஏகோபித்த கருத்தில் இருந்தார்கள். அழைப்பு விடுக்கப்பட்டவர்களில் ஊடக நிறுவனங்களுக்குக் கிடைத்த அழைப்பைப் பயன்படுத்தி தங்களையும் ஊடகவியலாளர்கள் என்று சிலர் ஆஜராகியது குறித்து முகப்புத்தகத்தில் பரவலான வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் அவ்வப்போது வந்தாலும் தங்கள் வெளியீடுகளும் ஊடகங்களே என்று அழைப்புக் கிடைக்காத பலர் கொதித்துப் போயுள்ளனர். ஊடகவியலாளர்கள் என்று கனடாவில் கோயில் திருவிழாக் கூட்டக் கணக்கில் எண்ணற்றோர் இருப்பதாகவும், முகப்புத்தகத்தில் பின்னூட்டம் எழுதுபவர்களும், நிகழ்ச்சிகளில் போட்டோ எடுப்பவர்களும் தங்களை ஊடகவியலாளர்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பதால் எல்லாரையும் கூப்பிட முடியாது என்றும், அவர்களை எல்லாம் கூப்பிடுவதாக இருந்தால் ரொறன்ரோ ஸ்கை டோமில் தான் மாநாடு நடத்த வேண்டி வரும் என்றும், அதில் யாராவது கொடும்பாவி எரிக்கும் நோக்கில் உள்நுழையலாம் என்றும் பாதுகாப்புக் காரணம் கருதியே பலர் அழைக்கப்படவில்லை என்றும் அமைப்பாளர்கள் கூறியதாக உள்ளேயிருந்து கசியும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'எங்களிட்ட ஊடகவியலாளர் என்று அடையாள அட்டை இல்லாவிட்டாலும், நிகழ்ச்சிகளில் ஊடகவியலாளர்கள் என்று சொல்லித் தந்த விருதுகளைக் காட்டியும் எங்களை அனுமதிக்கவில்லை' என்று பலர் அங்கலாய்த்துக் கொண்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. ஏன் எங்களைப் போல, கற்பனையாக வழமை போல ஏதாவதை அவிழ்த்து விட வேண்டியது தானே என கற்பனா செய்தியாளர்கள் ஆலோசனை வழங்கிய போது, 'நாங்கள் என்ன அண்ணை, உங்களைப் போல சரக்குள்ள ஆக்களே? கொஞ்சம் சரக்கைத் தந்தால் தானே தாளிக்க முடியும்' என்று ஒரு ஐந்தாறு விருதுகளைக் கையில் வைத்திருந்த ஒரு ஊடகவியலாளர் மனம் பொரிந்தார். இதன் பின்னணியில் சி.ஐ.ஏ இருப்பதாகவும், தமிழர் தலைமையை உடைப்பதற்கு அமெரிக்கா செய்து வரும் சதியின் தொடர்ச்சியாகவே இதைக் கருத வேண்டியுள்ளது என்றும் ஊடகவியலாளர்களைப் பிளவுபடுத்துவதன் மூலம் தமிழர் போராட்டத்தை செயலிழக்கச் செய்யும் அமெரிக்கத் தந்திரோபாயம் குறித்து கூட்டமைப்புக் கனடாக் கிளையினர் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அடுத்த முறை தனக்கு அழைப்புக் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையை இன்னமும் வைத்திருக்கும் முகப்புத்தக வலைப்பதிவாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

    பிந்திக்கிடைத்த செய்தி!

    கல்பனா ரசிகர்களுக்கு இனிப்பான சேதி! லண்டன் சுந்தராம்பாளுக்கு கசப்பான சேதி!

    kalpanaகல்பனா இசைத்துறையை விட்டு விலகுவதாக வெளிவந்த செய்தியில் உண்மை இல்லை என்று கல்பனா ரசிகர் மன்றங்களின் நோர்வே சர்வதேசச் செயலக முக்கியஸ்தர்கள் உத்தியோகபூர்வ தகவலை கற்பனாவுக்கு என விசேடமாகத் தந்துள்ளார்கள். கல்பனா தமிழ் இசையுலகில் உச்சங்களைத் தொட்டுவிட்டதால், இனிமேல் தொடுவதற்கு உச்சம் இல்லை என்றும், அடுத்த இலக்கு கிராமி விருது என்பதால், ஆங்கிலப் பாடல்களைப் பாடப் போவதாகவும், தமிழிசை போன்றே மேலைத்தேய இசையையும் முறைப்படி பயில வேண்டி இருப்பதால் அதில் முழுக்கவனத்தையும் செலுத்துவதற்காகவே தமிழிசைப் பாடல்களைக் குறைக்கப் போவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சுலபமாக வசனம் போலப் பாடக் கூடிய ராப் இசை வசனங்களைப் பேசி விட்டு, பாடல் என்று சிலர் புகழ் பெற்றாலும், தான் இசையுடன் கூடிய பாடல்களைப் பாடிவருவது ரசிகர்களுக்குத் தெரியும் என்றும் குறிப்பிட்டிருந்தார். சினிமா வாய்ப்புகள் வந்த போதிலும், இசைத்துறையிலேயே தனது முழுக்கவனமும் இருப்பதாகவும், சினிமா என்ற பேச்சுக்கு இப்போது இடமில்லை என்றும் கிராமி விருது பெற்ற பின்னால் ஹொலிவூட் சந்தர்ப்பங்கள் கிடைத்தால் அது பற்றிப் பரிசீலிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது முடிவு பற்றி அவர் நாட்டு மக்களுக்கு முகப்புத்தகத்தில் உரையாற்றுவார் என்று கூறப்பட்ட போதும், அவரது உரைக்கும் பாடலுக்கும் வித்தியாசம் இல்லாததால், அவரது ரசிகர்கள் அதைப் பாட்டு என்றே நம்புவார்கள் என்று கற்பனா செய்தியாளர் கூறியுள்ளார். இதற்குள் தனக்குப் போட்டியாக கல்பனா வரவுள்ளதால் லண்டன் சுந்தராம்பாள் கொதித்துப் போயுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிலும் ராப் இசையை கல்பனா கிண்டல் செய்ததில் சுந்தராம்பாள் கடுப்பில் உள்ளதாகவும் தெரிகிறது. கல்பனாவுக்கும் கிராமி விருது, சிறந்த பாடலுக்கான ஒஸ்கார் விருதுகள் கிடைத்தால் தன் கருத்துக்களை யாரும் கேட்க மாட்டார்கள் என்ற அச்சத்தில் தமிழுணர்வாளர்களின் அபிமானம் பெற்ற சுந்தராம்பாள் இந்தச் செய்தியைக் கேட்டுக் கூறிய கருத்துக்களை, குடும்ப இதழான கற்பனாவில் பிரசுரிக்க முடியாமைக்கு வருந்துகிறோம். (சின்னக்கடைப் பெண் வியாபாரி அன்னை திரேசம்மாவின் கருத்து ஒப்பீட்டளவில் நாகரீகமாக இருந்ததாலேயே பிரசுரிக்கப்பட்டது என்பது சிந்திக்கத் தெரிந்த கற்பனா வாசகர்களுக்கு சொல்லிப் புரிய வைக்க வேண்டியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.) ஏற்கனவே ஒப்ரா வின்பிறியோடு கடுப்பில் இருக்கும் சுந்தராம்பாளுக்கு கல்பனாவால் மன உழைச்சல் ஏற்படுவதற்கு தாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று ரசிகர் மன்றத்தினர் கூறியுள்ளனர். 'அண்ணை, காய்ச்ச மரத்துக்குத் தானே கல்லெறி விழும், எங்கட சூரியனைப் பார்த்து ஆர் குலைச்சால் எங்களுக்கு என்ன?' என்று கல்பனாவின் கட்டவுட்டுக்கு பாலாபிஷேக வழிபாடுகளில் பங்கேற்றுக் கொண்டிருந்த தீவிர கல்பனா ரசிகர் ஒருவர் மொகாடிசுவில் தெரிவித்தார். பால் எடுக்க வந்த சோமாலியர்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நிலை கொண்டுள்ள அமெரிக்க விமானந் தாங்கிக் கப்பலில் இருந்து விமானத் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது. அமெரிக்க இசையுலகின் உச்சங்களைத் தொட்ட பின்னால், சோமாலிய அமைதிப்படையினருக்காக சோமாலிய மொழியிலும் அவர் பாட வேண்டும் என்று சோமாலிய ரசிகர் மன்றம் சார்பில் இசைமேதை கல்பனா அவர்களை பணிவுவினயத்துடன் கற்பனா வேண்டுகிறது. (முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1ம் திகதியை தமிழுணர்வாளர்கள் தினமாக்கியதற்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என கற்பனா நிர்வாகம் கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறது) சரி, சரி! இவ்வளவு தூரம் வாசிச்சிட்டீங்கள்ல! இது மட்டுமில்லாமல், சுவாரஷ்யமான, சிந்திக்க வைக்கக் கூடிய பல ஆக்கங்கள் தாயகத்தில் உண்டு. ஐயோ, அறிவு வந்திடுமே! என்று பயப்படாம வாசியுங்க. கீழுள்ள பட்டன்களை அழுத்தி மற்றவர்களுடனும் இந்த இன்பத்தைப் பகிருங்க!

    Postad



    You must be logged in to post a comment Login