Recent Comments

    கற்பனா: புலன் பெயர்ந்தோரைப் புல்லரிக்க வைக்கும் புனிதத்தமிழ் ஏடு

    கற்பனா

    புலன் பெயர்ந்தோரைப் புல்லரிக்க வைக்கும் புனிதத்தமிழ் ஏடு

    தமிழுணர்வாளர் தினச் சிறப்பிதழ்

    துயர் பகிர்கிறோம்

    திரு.பேரவை

    தேசியத் தலைவரின் நல்லாட்சியில் தேனும் பாலும் ஓட இருந்த தமிழீழத்தின் தலைநகராம், சைவமும் தமிழும் சாதியுஞ் செருக்கும் தழைத்தோங்கும் யாழ்ப்பாணத் திருநகரிலே, சைவ வேளாண் உயர்மரபில் வந்துதித்த உயர்திரு பேரவை அவர்கள் இயற்கையெய்தினார். அன்னார் சிவப்பழம் விக்னேஸ்வரானந்தா சுவாமிகளின் திருச் சீடரும் திருமதி சைக்கிளின் அன்புக் கணவரும் தீர்வுப் பொதியின் அன்புத் தந்தையும் ஆவர்.

    அன்னாரின் ஈமக்கிரியைகள் செவ்வனே நிறைவு பெற்று, அவரின் அஸ்தி நந்திக் கடலில் கரைக்கப்பட்டது. சிங்காலறியில் பிரசுரிக்கப்படாத இந்த அறிவித்தலை, அடுத்த தேர்தல் வரைக்கும் கண்ணீரும் கம்பலையுமாக அழுது புலம்பும் அவரது புலன்பெயர்ந்த உற்றார், உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் சங்கு ஊதயன் பத்திரிகையில் இது பற்றி வெளிவந்த செய்தி...

    காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த திரு.பேரவை அவர்களின் உடல் அநாதவரவான நிலையில் கண்டெடுக்கப்பட்டது. பிறந்த நாள் முதல் திசை தெரியாமல் சைக்கிள் ஒன்றோடு அலைந்து கொண்டிருந்த இவர், தனது குருவான விக்னேஸ்வரானந்தா சுவாமிகள் சிங்கக் கொடியேற்றிய செய்தி கேட்டு அதிர்ச்சியுற்று மாரடைப்பினால் இறந்ததாக கூறப்படுகிறது. இறப்பதற்கு முன்னால் தனது மகன் தீர்வுப் பொதியை கூட்டமைப்பிடம் தத்துக் கொடுத்து விட்டதாகவும் இதனால் இவரது மனைவி சைக்கிளுக்கும் இவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாகவும், அதனால் வீட்டை விட்டு வெளியேறி இவர் அலைந்ததாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இவரது சடலத்திற்கு யாரும் உரிமை கோராததால், அரச செலவில் இவரது பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

    விபசாரம் செய்யும் நடிகைகள் யார் என்ற செய்தியின் கீழ் தமிழ் இணையத் தளம் ஒன்றில் கிடந்த செய்தி...

    பேரவை உயிரோடு இருக்கிறார்.

    பேரவை காலமாகி விட்டார் என்ற செய்தியை அறிந்து துள்ளிக் குதித்த கூட்டமைப்புக்காரரின் வயிற்றில் புளியைக் கரைக்க, பேரவை உயிரோடு உள்ளார் என்ற செய்தியை சிங்களப் புலனாய்வுத் துறை ஊர்ஜிதம் செய்து, அவரைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு இண்டர்போலின் உதவியை நாடியுள்ளது. மனைவியுடன் தகராறு என்று வெளியில் காட்டிக் கொண்டே, கொழும்புவில் உள்ள தொடர்மாடி வீடு ஒன்றில் அவர் காத்திருப்பதாகவும், தேர்தல் வரும் போது சரியான நேரத்தில் வெளியில் வருவதாகவும் எங்கள் செய்தியாளருக்கு நக்கீரன் செய்தியாளர் தெரிவித்திருக்கிறார்.

    பேரவையின் மரண அத்தாட்சிப் பத்திரத்தை, தலைவரான டாக்டர் இன்னமும் வழங்க மறுத்து வருவதால் இந்த சந்தேகங்கள் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. மரண அத்தாட்சிப் பத்திரம் இல்லாமல் நாங்கள் மரணச் செய்தியை பிரசுரிப்பதில்லை, ஒருவருடைய மரணத்தையும் நம்புவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. உடலுறவின் போது ஆண் எங்கே அழுத்த வேண்டும் என்று பெண் விரும்புகிறாள் என்பதை அறிய இந்த இணைப்பை அழுத்தவும்.

    கல்பனா அக்காவின் பெயரில் போலி முகப்புத்தகப் பக்கம் திறந்த

    அ(ப)க்கா விரோதியைத் தேடி வலை வீச்சு

    கல்பனா அக்காவின் பெயரில் யாரோ முகப்புத்தகம் திறந்ததாகவும், தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தன் லவ்ஸ்க்கு அக்கா அறிவித்தல் விடுத்திருந்தது தெரிந்ததே. அக்காவின் பெயருக்கு இழுக்கு ஏற்பட்டதைக் கண்டு துடித்தெழுந்த அக்காவின் ரசிகர் மன்றம் - சோமாலியக் கிளையின் கொமாண்டோ அணி ஒன்று இந்த விரோதியை கழுவில் ஏற்றும் நோக்குடன் காடுகளில் தேடுதலில் ஈடுபட்டது. அப்போது எல்லை தெரியாமல் சோமாலிய எல்லையில் உள்ள எரித்திரியக் காட்டுக்குள் நுழைந்த இந்த கமாண்டோ அணியைக் கண்டு எரித்திரிய இராணுவத்தினர் துப்பாக்கிகளைப் போட்டு விட்டு வெள்ளைக் கொடியோடு தப்பியோடியுள்ளனர்.

    தொடர்ந்தும் தேடுதலில் ஈடுபட்ட இந்த கமாண்டோ அணியினர் அந்தக் காட்டுக்குள் கரந்துறையும் தேசியத் தலைவரையும் பொட்டம்மானையும் கண்டு குசலம் விசாரித்துள்ளனர். தலைவரின் கீழ் பயிற்சி பெறும் இருபதாயிரம் விடுதலைப் புலிகளும் அக்காவின் கமாண்டோ படையினரிடம் சில மணி நேரங்கள் சிறப்புப் பயிற்சியும் பெற்றனர். தங்கள் படையணியினருக்கு வீரம் வர வைப்பதற்காக 24 மணி நேரமும் அக்காவின் பாடல்களையே காட்டு முகாம்களில் ஒலிபரப்புவதாக பொட்டம்மான் தெரிவித்தார். போராட்டத்திற்கு சேர்த்த பணத்தை நீங்கள் திரும்பி வரும் போது, திருப்பிக் கொடுப்பதாகக் கூறிக் கொண்டிருக்கும் தமிழுணர்வாளர்கள் துரோகிகளின் அவதூறுக்கும் பழிச் சொல்லுக்கும் ஆளாகிக் கொண்டிருப்பதால், விரைவில் வந்து தரிசனம் தந்தால் அவர்கள் அந்தப் பணத்தையும் சொத்துக்களையும் உங்கள் காலடியில் ஒப்படைப்பார்கள் என்று கல்பனா அக்கா ரசிகர் மன்ற கமாண்டோ அணியினர் தேசியத் தலைவரிடம் எடுத்துரைத்தனர். அதற்குப் பதில் அளித்த தேசியத் தலைவர் 'மாவீரர் தினத்தில் விற்கப்படும் கொத்துரொட்டி, மட்டன் றோல் போன்றவற்றை வாங்கி தங்களுக்கு அனுப்ப முடியுமா?' என்று கமாண்டோ வீரர்களிடம் வினாவினர். இவ்வாறாக அவரது போராட்டத்திற்கு தங்களது பங்களிப்பு வேண்டுமாயின், அக்காவிடம் விடயத்தை தெரிவித்தால், அக்காவின் ஆணைப்படி தாங்களும் போராட்டத்தில் கலந்து கொள்ளலாம், அக்காவிற்கு விசுவாசமாகச் சத்தியப்பிரமாணம் எடுத்ததால், அவரது உத்தரவை மீறி எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் உள்ளதாகவும்  அவர்கள் தேசியத் தலைவருக்கு எடுத்துக் கூறினர். இதற்குள் தனது இராணுவம் ஆயுதங்களை எறிந்து விட்டு, வெள்ளைக்கொடியோடு பின்வாங்கியதை அறிந்த எரித்திரிய ஜனாதிபதி, கல்பனா அக்காவின் ரசிகர் மன்றக் கமாண்டோ அணியை அஸ்மாராவுக்கு வரும்படியும், அவர்களுக்கு இரண்டு மனைவிமாரைத் திருமணம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் அனுப்பியுள்ளார். அக்காவின் பெயரில் போலி முகப்புத்தக பக்கம் திறந்த விரோதியைத் தேடி தேடுதல் வேட்டை தொடர்கிறது.

    காணவில்லை

    இரண்டு அரசியல் பிரமுகர்களைக் காணவில்லை.

    சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகிய இரண்டு பேரையும் ஈழத்திலும் முகப்புத்தகத்திலும் காணவில்லை என அவர்களின் ஆதரவாளர்களும் எதிரிகளும் பெருந்துயரில் உள்ளனர்.

    சுமந்திரன் முகப்புத்தகத்தில் காணாமல் போனதற்கு, தமிழரின் துன்பங்களுக்கு எல்லாம் அவரைக் காரணமாக திட்டித் திரிந்தவர்கள், தமிழினியின் புத்தகத்திற்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் திரிவது காரணமாக இருக்கலாம் என்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுரேஷ் பிரேமச்சந்திரன் காணாமல் போனதற்கு, பேரவையின் மரணம் காரணமாயிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்ட கதையாக விக்னேஸ்வரை நம்பி நாசமாய் போய் விட்டதாக அவரது ஆதரவாளர்கள் விசனப்பட்டுள்ளனர். விக்னேஸ்வரன் சிங்கக் கொடி ஏற்றியதே இதன் பின்னணி என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 'விக்னேஸ்வரன் கொழும்புத் தமிழர், சிங்கள வீட்டில் சம்பந்தம் வைத்தவர், அவருக்கு யாழ்ப்பாண மக்களின் பிரச்சனை தெரியாது, சுமந்திரனும், சம்பந்தனும் போலவே விக்கியரும் சுத்த யாழ்ப்பாண இரத்தம் இல்லாதவர்கள்' என சுரேஷ் விரைவில் அறிக்கை விடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வட மாகாண  முதல்வராக சீமான்?

    விக்னேஸ்வரன் சிங்கக் கொடி ஏற்றியதைத் தொடர்ந்து பேரவை மரணம் அடைந்ததால், மனம் நொந்து போயிருந்த புலன் பெயர் தமிழர்கள் மந்திராலோசனைகளில் ஈடுபட்டுள்ளனர். சீமானுக்கு புலன் பெயர்ந்த தமிழர்களின் உள்ள செல்வாக்கும் அவருக்கு ஆதரவாக முகப்புத்தகத்தில் லைக் போடும் புலன் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையையும் பார்த்து, இம்முறை சீமான் தமிழ்நாட்டின் முதல்வராக வராவிட்டால், எப்படியாவது அவரை யாழ்ப்பாணம் வரவைத்து மாகாண சபைத் தேர்தலில் நிறுத்த இந்த மந்திராலோசனையில் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

    இவ்வளவு நாளும் நாங்கள் காசு கட்டின குதிரையள் எங்களை ஏமாத்திப் போட்டுது, அதால நாங்கள் பட்ட அவமானம் கொஞ்ச நஞ்சமில்லை, சீமான் யாழ்ப்பாணத்தில் எலக்சனிலை நிண்டால், எங்கட கனவு நனவாகும், பிறகு ஈழம் தான், நாங்கள் காசை அனுப்பிக் கொண்டே எப்பிடி ஆட்சி நடத்திறது எண்டு சீமானுக்கு சொல்ல வேண்டியது தான் என பலரும் புல்லரித்ததாக கூறப்படுகிறது. 'எரித்திரியா மாதிரி நாங்களும் இரண்டு கலியாணம் செய்யலாம் எண்டு இருந்தா, சீமானுக்கும் ஒரு யாழ்ப்பாணப் பெட்டையைக் கட்டிக் குடுத்து, வீட்டோடை மாப்பிள்ளையாக்கலாம்' என சிலர் அங்கலாய்த்ததாகவும் செய்திகள் கசிந்துள்ளன. இதற்குள் 'இப்ப சனத்துக்க இருக்கிற ஆதரவில காசைச் சேத்தம் எண்டா, நிறையச் சேர்க்கலாம்' என பல தமிழுணர்வாளர்கள் வாய் ஊறியதாகவும் கூறப்படுகிறது.

    யாழ்ப்பாணத்தில் தற்கொலை அங்கி கண்டுபிடிப்பு!

    புலன் பெயர்ந்த தமிழுணர்வாளர் புல்லரிப்பு!

    யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள பகுதி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கியால் போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது குறித்து புலன் பெயர்ந்த நாடுகளில் உள்ள உள்ள தமிழுணர்வாளர்கள் வெடி கொழுத்தி இனிப்பு வழங்கி ஆரவாரம் செய்தனர்.

    இதற்குள் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரின் இரண்டாவது மனைவியே அவரைக் காட்டிக் கொடுத்திருக்கிறார் என்ற செய்தியும் வெளிவந்திருக்கிறது. இதை ஆதாரம் காட்டி, எரித்திரியாவில் பயிற்சி பெற்ற இந்த முன்னாள் புலி வீரரை தேசியத் தலைவரே அனுப்பி வைத்ததாகவும், எரித்திரியாவில் இரண்டு திருமணம் செய்யலாம் என்ற சட்டப்படியே இந்த விடுதலைப் புலி வீரர் அங்கு திருமணம் செய்திருந்தார் என்றும் அவர் தன்  இரண்டு மனைவிமாருடன் வந்த போதும், மனைவிமார்களுக்கு இடையில் ஏற்பட்ட தவறான புரிந்துணர்தல் காரணமாகவே காட்டிக் கொடுக்கப்பட்டதாகவும் ஊடகவியல் ஆய்வாளர் ஒருவர் தமது பத்தியில் தெரிவித்திருக்கிறார். (முட்டாள்கள் தினத்தில் தமிழுணர்வாளர்கள் தினம் இருப்பதற்கு கற்பனா எந்த விதத்திலும் பொறுப்பல்ல!)

    Postad



    You must be logged in to post a comment Login