Recent Comments

    அரசியல் படுகொலையும் படுகொலை அரசியலும்

    ஏடு இட்டோர் இயல்

    அமிர்தலிங்கம், பத்மநாபா, ராஜீவ் காந்தி, பிரேமதாசா என்று அரசியல் பின்னணி கொண்டவர்கள் முதல் ராஜினி திரணகம, கருணா அணியினர், பத்திரிகை விற்ற பையன் வரை என பல்வேறு பின்னணிகளில் இருந்து வந்தவர்கள் புலிகளால் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டு கொல்லப்பட்ட போது ஏற்பட்ட அதிர்வுகளும் 'இன்ப அதிர்ச்சிகளும்' ஆறிய கஞ்சியாக பழங்கதையானது போல, தற்போதைய கதிர்காமரின் படுகொலையும் சில வாரங்களிலேயே மறக்கப்பட்டு விட்டது.

    வழமை போல, புலிகளின் 'புலன்' பெயர்ந்த ஆதரவாளர்கள் 'துரோகி ஒழிந்தான், இலட்சியத்துக்கான தடை நீங்கி, தமிழீழம் இதோ மலர்ந்து விட்டது' என்ற 'இன்ப அதிர்ச்சியில்' இருந்து சுதாகரித்துக் கொண்டு 'சொன்ன வாய்க்கு இனிப்புக் கொடுத்து' புல்லரித்து முடிந்து, அடுத்த படுகொலைக்காய் ஆவலாய்க் காத்திருக்கிறார்கள். அது கருணா, அல்லது டக்ளஸ், முடியாவிட்டால் சங்கரியையாவது என்ற எதிர்பார்ப்புடன்.. 'காதில் தேனாய் வந்து பாயும்' இந்த 'இன்ப அதிர்ச்சி'யின் உச்சம் இவர்களின் 'மென்மையான இதயங்களை' அதிர வைத்து, மாரடைப்பு வந்து இவர்களின் உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ என்று நாங்கள் பயப்பட வேண்டியதாயிருக்கிறது!

    முப்பது வருடங்களுக்கு முன்னால் துரையப்பா கொலையுடன் (அல்லது அதற்கு முன்னான ஆரம்ப கால உறுப்பினரான மைக்கேல் கொலையோடு) ஆரம்பித்த அரசியல் படுகொலைகள்  இன்று வரை  தொடர்கின்றன. ஆனால் இந்த முப்பது வருடப் படுகொலைகள் தமிழ் மக்களின் விடுதலைக்கு எந்த விதத்தில் வழி வகுத்தது என்பதை கேள்விக்குள்ளாக்கும் பகுத்தறிவு இல்லாத படித்த யாழ்ப்பாணம், இந்திய சினிமாவின் நாயகர்கள் வில்லர்களைப் பந்தாடும் போது கைதட்டும் பாமர ரசிகர்கள் போல மெய் சிலிர்க்கிறது. இயலாமையால் மெளனமாக இருக்க வேண்டிய பார்வையாளர்கள் விசில் அடிக்கும் ரசிகர்களாகி, அண்ணனுக்கு ஜே! போடும் போது (அல்லது 'தம்பி'க்கு ஜே!) நாயகர்கள் புகுந்து விளையாடுவதில் என்ன தான் தப்பு?

    முப்பது வருட அரசியல் படுகொலைகள் மூலம் தமிழ் மக்களின் போராட்டம் சாதித்தது என்ன? 'ஏகே தூக்கினாயா? களத்துக்கு வந்தாயா?' என்று வெளிநாட்டிலிருந்து வருவோரிடம் பதிவிலக்கம் கொடுத்து 'கிஸ்தி, திரை, வரி, வட்டி' என கறக்கும் கேவலமான நிலைக்குத்தான் எமது போராட்டம் இறங்கி வந்திருக்கிறது.

    பிணந்தின்னிக் கழுகுகள் போல கொலைகளைக் கண்டு கூத்தாடுகின்ற கேவலமான நிலைக்கு தன்னை உட்படுத்திக் கொண்ட இனத்தைப் பற்றி, 'அடுத்த கொலை எப்போது நடக்கும்' என இரத்தவெறி கொண்டு நாக்கைத் தொங்கப் போட்டபடி அலையும் நரிகள் போலக் காத்திருக்கும் இனத்தைப் பற்றி நம்பிக்கை கொள்வதற்கு என்ன தான் இருக்கிறது?

    இந்தப் படுகொலைகளை ஏற்றுக் கொள்ளும் எங்கள் சமூகம் அன்றைக்கு இந்தக் கொலைகளைத் தட்டிக் கேட்டிருந்தால் புலிகள் இந்த நிலைக்கு எங்கள் சமூகத்தைக் கொண்டு சென்றிருக்க மாட்டார்கள்.

    யூதர்கள் யூதர்களைக் கொல்வது என்பது யூத சமூகத்தில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இன்று கூட, அது ஒரு மகா குற்றமாக, சாவான பாவமாகத் தான் அந்த சமூகத்தில் கருதப்படுகிறது. இஸ்ரேலியப் பிரதமர் ராபினை யூத தீவிரவாதி சுட்டுக் கொன்ற போது தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்த முன்னாள் பிரதமர் நெத்தனியாகூ, யூதர் யூதரைக் கொல்வது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று கூறியிருந்தார்.

    அரசியல் படுகொலைகள் அது நாட்டின் தலைவராக இருந்தால் என்ன, சாதாரண இயக்கத் தொண்டனாக இருந்தாலென்ன, கண்டிக்கப்பட வேண்டியது.

    ஆனால் எங்கள் சமூகத்தில், சமூகவிரோதிகள் ஒழிப்பு என்று மின்கம்பத் தண்டனைகள் வழங்கும் போது சமூகம் அதை கண்டும் காணாமல் விட்டது. பின்னர் சிங்கள அரசின் பிரதிநிதிகளைக் கொல்லும்போது மகிழ்ச்சி தெரிவித்தது. இப்படி ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்தபோதெல்லாம் காட்டிய மெளனமும் மகிழ்ச்சியும் தான் இன்று மனிதர்களைக் கடிப்பதற்கான துணிச்சலைப் புலிகளுக்கு கொடுத்திருந்தது.

    கொல்லப்படுவது தமிழர்கள், தமிழ் இனத்தில் அரசியல் உணர்வுள்ள தமிழர்களை இராணுவம் கொன்றதை விட புலிகள் கொன்றது அதிகம், ஒரு இனத்தில் மேன்மைக்கு பல்வேறு அரசியல் கருத்துக்கள் அவசியம் என்பதை எங்கள் இனம் மறந்தது தான் இன்று ஒரு ஆயுதக் குழுவுக்கு அடி பணிய வைத்திருக்கிறது. துரோகி என்ற புலிகளின் முத்திரை குத்தல் மட்டுமே ஒரு கொலையை நியாயப்படுத்துவதற்கான காரணமாக, அந்தக் குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளாமலேயே எங்கள் சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது.

    புலிகளையும் 'சும்மா குறை சொல்ல' முடியாது. ஒரு புறத்தில் 'கொலைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை' என்று வெளிநாடுகளுக்கும் அரசாங்கத்துக்கும் 'பாவ்லா' காட்டிக் கொண்டு, மறுபுறத்தில் தங்களுடைய புலம் பெயர்ந்த ரசிகப் பெருமக்களுக்கு கொலையை தாங்கள் நுணுக்கமாக திட்டமிட்டுச் செய்ததை பெருமையாகச் சொல்லி புல்லரிக்க வைப்பது ஒன்றும் சுலபமான விடயம் இல்லை. தமிழ்நெட் மூலமாக வெளிநாடுகளையும் 'சுத்தி', நிதர்சனம் மூலமாக தமிழர்களையும் 'சுத்துவது' சாதாரணமானதல்ல.

    புலிகளின் அவதூறு இணையத்தளங்களினதும் சார்பு பத்திரிகைகளினதும் நகைச்சுவை உணர்வும் கற்பனைத் திறனும் (மோசமான எழுத்துப் பிழைகளுடன் என்றாலும்!) மாற்றான் வீட்டு மல்லிகையென பாராட்டப்பட வேண்டியன. ஒரு புறம் 'கொலம்பியா' வகைத் தாக்குதல் என்று எங்குமே கேள்விப்பட்டிராத பெயர் ஒன்றைச் சூட்டி திகைக்க வைத்து, கொலையில் அந்நிய உளவுச் சக்திகளின் சதி பற்றி புலனாய்வும் செய்து, கதிர்காமர் பற்றி மஞ்சள் பத்திரிகைக் கணக்கில் கிசுகிசுவும் எழுதி, மறுபுறத்தில் 'கதிர்காமரின் மகளை மாற்றாந்தாய் புறக்கணித்ததை'யிட்டு மனம் நொந்து கண்ணீர் விடும் இந்த 'நவரசத் திலகங்கள்' பற்றி எப்படிப் பாராட்டாமல் இருக்க முடியும்?

    போதாக்குறைக்கு நோர்வேயும் புலிகளின் ரசிகர்களாகி விட்டது. புலிகள் தாங்கள் செய்யும் படுகொலைகளுக்கு விடும் மறுப்பறிக்கைகளை, 'நாங்கள் சொல்வதெல்லாம் உண்மையைத் தவிர வேறு ஒன்றுமில்லை' என்று புலிகள் அரிச்சந்திர சத்தியப்பிரமாணம் செய்தது போல, வேதமாய் நம்பி மற்றவர்களுக்கு ஒலிபரப்பு செய்கின்ற புலி ரசிகர்கள் போல, நோர்வேயும் 'புலிகள் தாங்கள் செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்கள், விசாரணை முடியும் வரையில் கொலையாளிகளைத் தெரியாது' என்று ஐரோப்பிய சமூகத்திற்கு பிரசாரம் செய்து கொண்டிருக்கிறது. ஒருவேளை தராக்கி சிவராமின் இடத்தை தற்போது எரிக் சொல்கெய்ம் நிரப்பியிருக்கக் கூடும். அடுத்தது, எரிக் சொல்கெய்முக்கு மாமனிதர் பட்டமாகக் கூட இருக்கலாம்.

    குற்றச்செயல்கள் நடைபெறும் போது பொலிசார் 'வழமையான சந்தேகநபர்கள்' என்று முன்னாள் குற்றவாளிகளைச் சுற்றி வளைக்கும் வழமையான நிலை போல, அரசியல் படுகொலை என்றதும் புலிகள் மீது குற்றம் சுமத்தப்படுகின்றது என்றால், அதற்கான காரணம் புலிகளின் முன்னைய நடவடிக்கைகள் தான். அமிர்தலிங்கம், ராஜீவ் போன்றோரின் 'துன்பியல் சம்பவங்களின்' கைங்கரியம் அது. வழமையாக 'குற்றம் நிருபிக்கப்படும் வரையில் சுற்றவாளி' என்ற கருத்து புலிகளுக்கு பொருந்தாது, தாங்கள் குற்றவாளி அல்ல என்பதை நிருபிக்க வேண்டிய பொறுப்பு புலிகளிடம் இருக்கும் அளவுக்கு அவர்களின் கடந்த கால நடவடிக்கைகள் உள்ளன.

    தமிழ்ச்செல்வனின் முகத்தில் காரண காரியமில்லாமல் சதா தவழும் சிரிப்பு மூலமாக முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சி நடந்தாலும், புலிகளின் ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு 'கொலை செய்யப்பட்டவர்களைக் கொலை செய்ய வேண்டியதற்கான காரணங்களைப் பட்டியலிட்டு நியாயப்படுத்துவது' மறுபுறத்தில் 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பதை புட்டுக் காட்டிக் கொண்டே இருக்கும்.

    இன்னொரு புறத்தில் அரசியல் ஆய்வாளர்களும் வெளிநாட்டு ராஜதந்திரிகளும் புலிகள் படுகொலையை 'இந்த நேரம்' செய்ததற்கான காரணத்தை அறிவதற்காக மூளையை உலுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.. புலிகள் ஏதோ சுபநேரம் பார்த்து கொலை செய்கிறார்கள் என்ற நினைப்பில்.

    ராஜீவ் கொலைக்கான திட்டம் ஏற்கனவே போடப்பட்ட பின்னர், காசி ஆனந்தன், லண்டனில் இருந்து ஒருவர் என ராஜீவுடன் புலிகள் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தனர். பிரேமதாசவுக்கும் இதே நிலை தான். கதிர்காமருக்கும் தங்களுக்கு வேண்டிய வர்த்தகர் மூலமாக தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தனர். 'அவர்கள் என்னோடு தொடர்புகளைக் கொண்டிருக்க விரும்புகிறார்கள்' என்று கதிர்காமர் பேட்டியில் சொன்னதெல்லம் இதன் அடிப்படையில் தான்.

    இதெல்லாம், கொலைகள் திட்டமிடப்பட்டு கொலையாளிகள் அனுப்பப்பட்ட பின்னால், கொலை செய்யப்பட உள்ள இலக்குகளுக்கு பொய்யான நம்பிக்கை ஒன்றை ஏற்படுத்தி அவர்களின் அவதானத்தையும் கவனத்தையும் திசை திருப்புவதற்கான முயற்சி.. அதில் 'உங்களைக் கொலை செய்ய மாட்டோம்' என்ற உறுதி மொழிகளும் அடங்கியிருக்கும்.

    எப்போதோ திட்டமிடப்பட்டு எவ்வளவோ காலம் முயற்சி பண்ணி இப்போது நடந்த கொலைக்கு, ஏதோ நேற்று திட்டமிட்டு இன்று கொலை செய்த கணக்கில் இவர்கள் எல்லாம் 'புலிகள் கொலை செய்வதற்கு இந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்த காரணம் என்ன?' என்று வியாக்கியானம் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

    சுருக்கமான விடை.. எப்போதோ நடந்திருக்க வேண்டியது, இப்போது சாத்தியப்பட்டிருக்கிறது! அவ்வளவு தான்.

    சர்வதேச சமூகம் வழமை போல, 'சமாதான முயற்சி தொடர வேண்டும்' என்று சொல்லியிருக்கிறது. அது கதிர்காமரைக் கொன்றாலும் அதைத் தான் சொல்லும். சந்திரிகாவைக் கொன்றாலும் அதையே சொல்லும். இலங்கைப் பாராளுமன்றத்தை புலிகள் குண்டு வைத்துத் தகர்த்தாலும் அதைத் தான் சொல்லும். சர்வதேச சமூகத்திற்கு 'பயங்கரவாதம்' என்பது தன் வீட்டுப் படலையைத் தட்டும் போது தான் உறைக்கும். அதே பயங்கரவாதம் அடுத்த வீடுகளுக்கு கொள்ளி வைக்கும் போது அதற்கு அக்கறை கிடையாது.

    அரசாங்கமும் தன் கையாலாகத் தனத்தை அப்பட்டமாக வெளிக்காட்டியிருக்கிறது. புலிகளின் படுகொலை முயற்சியில் கண்ணை இழந்த பின்பும், தீர்வு காண்பதற்காக, தன்னைக் கொல்ல முயன்றவர்களுடன் சந்திரிகா பேச்சுவார்த்தை நடத்துவது பாராட்ட வேண்டிய ஒன்று தான். ஆனால், பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடக்கும் போதே வெளிநாட்டமைச்சரைக் கொன்ற பின்பும் பேச்சுவார்த்தை தொடரும் என்பது புலிகளுக்கு கொடுக்கும் செய்தி என்ன? எதைப் பற்றிய கவலையும் இல்லாமல் புலிகள் படுகொலைகளைத் தொடரலாம் என்பது தானே!

    பலஸ்தீனியர்கள் எந்த விதமான தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாலும், உடனடியாக இஸ்ரேலியர்கள் செய்வது இரண்டு விடயங்கள். ஒன்று, குண்டு வைத்தவர்களின் வீடுகளை இடித்து தரை மட்டமாக்குவது, மற்றது கொலைகள் நிறுத்தப்படும்வரை பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்துவது.

    இதில் உள்ள அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் ஒருபுறம் இருக்க, விடுக்கப்படும் அழுத்தமான செய்தி முக்கியமானது. அரசாங்கம் உடனடியாகவே பேச்சுவார்த்தைகளை ரத்துச் செய்து 'கொலைகள் நிறுத்தப்படும் வரைக்கும் பேச்சுவார்த்தை இல்லை' என்றிருந்தால், கொலை நடந்த உடனான சர்வதேச எதிர்ப்புணர்வைச் சாதகமாக்கி ஆதரவைப் பெற்றிருக்கலாம் என்பதுடன் புலிகள் மீது அழுத்தத்தையும் பிரயோகித்திருக்கலாம்.

    நோர்வேயும் ஓடிப் போய் புலிகளின் காலில் விழுந்து மன்றாடி, எப்படியாவது பேச்சுவார்த்தைகளை மீளத் தொடங்க வசதியாக 'தற்காலிகமாகவேனும்' கொலைகளை நிறுத்துங்கள் என்று கெஞ்சியிருக்கும். பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறோம் என்று உலகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கும் புலிகளும் உடனடியாகவே எதையாவது செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியிருப்பார்கள்.

    புலிகள் 'ஆட்டைக் கடித்து மாட்டைக் கடிக்கும்போது'ம் பேச்சுவார்த்தை தொடரும் என்றால், புலி மனிதனைக் கடிக்காமல் என்ன செய்யும்?

    அரசாங்கத்தில் ஜனாதிபதியும் புதிய வெளிநாட்டமைச்சரும் நோர்வே பற்றி குறை சொல்லிக் கொண்டே, தொடர்ந்தும் நோர்வே மூலமாகத் தொடர்புகளை ஏற்படுத்துவது என்பது அரசாங்கத்தின் இந்த கையாலாகத் தனத்தையே காட்டுகிறது. இந்தக் கையாலாகத்தனத்தை சரியாகவே தெரிந்து கொண்ட புலிகள் தொடர்ந்தும் கொலைகளை எந்த வித கவலையுமில்லாமல் நடத்துவதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. போதாக்குறைக்கு வெளிநாடுகள் புலிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதுகாக்க இருக்கவே இருக்கிறது நோர்வே.

    இதில் நோர்வேயின் அப்பட்டமான புலி ஆதரவுப் போக்கு முக்கியமானது. புலிகளின் விருந்தோம்பலில் 'நக்கி நாவிழந்த நிலையில்' உள்ள நோர்வே, எப்பாடுபட்டாவது புலிகள் கையில் அதிகாரத்தை வாங்கிக் கொடுப்பதில் மிகவும் அக்கறையாகத் தான் உள்ளது. புலிகளின் இயல்பை அறிந்து கொள்ளாமல், புலிகள் ஜனநாயக வழிக்குத் திரும்புவார்கள் என்ற பகல் கனவுடன் செயற்படும் நோர்வேக்கு தனது முதுகில் புலி சவாரி செய்யும் உண்மையை உணர்ந்து கொள்ள நாள் பிடிக்கும்.

    இதில் கதிர்காமர் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டாரா? புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டாரா? என்ற முடிவில்லாத வாதப் பிரதிவாதங்களுக்குள் தலையை புகுத்துவதை விட இந்த படுகொலை அரசியல் எங்கள் சமூகத்தைப் பாதித்தது பற்றிய ஒரு ஆன்ம பரிசோதனை இன்றைக்கு அவசியமானது.

    அரசியல் படுகொலைகள் என்பதற்கான வரைவிலக்கணமே ஆளுக்காள் வேறுபடுகின்ற ஒன்று. புலிகளுக்கு கூட, கருணா அணியினரால் கொல்லப்படும் போராளிகள் 'வீரச்சாவு', ஆனால் கௌசல்யன் 'படுகொலை', அமிர் கொலை 'துரோகி ஒழிப்பு', ஆனால் ராஜீவின் கொலை 'துன்பியல் சம்பவம்'

    அரசியல் நோக்கங்களுக்காக நடந்த இந்தக் கொலைகள் கூட, வௌ;வேறு நாமகரணங்களைத் தாங்கி வருகின்றன. சம்பந்தப்பட்டவர்களின் நலன்களையும் மற்றவர்களின் ஆதரவு, எதிர்ப்புத் தன்மையையும் பொறுத்து ஒரே கொலை பல்வேறு பெயரீடுகளைப் பெறலாம்.

    பொதுவாக, அரசியல் காரணங்களுக்காக தலைவர்களையும் முக்கியஸ்தர்களையும் திட்டமிட்டுக் கொல்வது 'அரசியல் படுகொலை'யாக விவரிக்கப்படுகிறது. யூலியஸ் சீஸர் கொலை முதலாக அரசியல் கொலைகள் நஞ்சூட்டுவதிலிருந்து முதுகில் குத்துவது வரை காலகாலமாய் நடந்து தான் வந்திருக்கின்றன. முதலாவது உலக மகாயுத்தத்தின் ஆரம்பமே சேர்பிய தீவிரவாதி நடத்திய அவுஸ்திரிய முடிக்குரிய இளவரசரின் படுகொலை. அந்த யுத்தம் பல்வேறு சாம்ராஜ்யங்களுக்கு சாவு மணி அடித்தது.

    அரசியல் படுகொலை என்பது சட்டத்திற்கு அப்பாற்பட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு மட்டுமல்ல, ஜனநாயக அரசாங்கங்களுக்கும் பொதுவான நடவடிக்கை. அதிலும் முக்கியமாக உளவுப்பிரிவுகள் மேலோங்கி நிற்கும் எந்த அரசாங்கத்திலும் அரசியலில் இது இன்னொரு வழிமுறை.

    மூன்றாம் உலக நாடுகளில் அதிகாரத்தில் உள்ளவர்கள் எதிர்க்கட்சிகளின் தலைவர்களையும் சுயாதீன ஊடகவியலாளர்களையும் கொல்வது என்பது சாதாரண விடயம். ஆனால் மேற்கு நாடுகளில் ஜனநாயக நடைமுறைகளும் சுதந்திர ஊடகங்களும் இவ்வாறான அரசியல் கொலைகளை மிகவும் அபூர்வமாகவே வைத்திருக்கின்றன. ஆனாலும் இந்த மேற்கு நாடுகள், முக்கியமாக பலம் வாய்ந்த வல்லரசுகள், தங்கள் நாட்டில் நடத்த முடியாத அரசியல் கொலைகளை வளங்கள் நிறைந்ததும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததுமான இடங்களில் தங்கள் நலன்களுக்காகவும் தலையிடுவதற்காகவும் தங்கள் கையாட்கள் மூலமாக நடத்துவதில் பெயர் பெற்றவை.

    சிலியின் அலண்டே, கொங்கோவின் லுமும்பா, இந்தோனேசியாவின் சுகர்ணோ போன்ற ஜனநாயக வழியில் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் அமெரிக்க உதவியுடன் அந்தந்த நாடுகளின் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட வரலாறுகள் உண்டு. சமீபத்தில் அமெரிக்க மதப் பிரசாரகரான பற் றொபேட்சன் எண்ணெய் வளம் நிறைந்த வெனிசூலா ஜனாதிபதியை இவ்வாறாகக் கொல்ல வேண்டும் என்றது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.

    எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டுமன்றி, அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் பத்திரிகையாளர்களும் படுகொலை செய்யப்படுவது இன்றைய கிழக்கு ஐரோப்பிய அரசியலில் சாதாரணமானதொன்று. உக்ரேய்ன் ஜனாதிபதி வேட்பாளருக்கு நஞ்சு வைத்து அவர் முகத்தை அகோரமாக்கியதும் ரஷ்யாவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவதும் இந்த அரசியல் படுகொலைகளின் ஒரு அம்சம் தான்.

    சமீபத்தில் இவ்வாறாக நடத்தப்பட்ட கொலைகள் இரண்டு மிகவும் பெரிய அதிர்வுகளையும் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தியிருந்தது. லெபனானில் நிலை கொண்டிருந்த சிரியா அங்கு தன் நலன்களைப் பேண, சிரியாவை வெளியேற்ற வேண்டும் என்ற கருத்துக் கொண்டிருந்த லெபனானியப் பிரதமரைக் கார்க் குண்டு வெடிப்பு ஒன்றில் கொன்றிருந்தது. அத்துடன் சிரியாவின் வெளியேற்றம் பற்றிக் கடும் போக்கைக் கொண்டிருந்து அதை விமர்சித்து வந்த பிரபல பத்திரிகையாளர் ஒருவரும் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டிருந்தார். பிரதமருக்கு வெளிநாடுகளுடன் இருந்த நேரடித் தொடர்புகள் காரணமாகவும் லெபனானிய மக்களின் எழுச்சி காரணமாகவும் சிரியா சர்வதேச நிர்ப்பந்தங்களின் பின்னால் லெபனானிலிருந்து படைகளைக் குறைக்க வேண்டி ஏற்பட்டதுடன் தற்போது ஐ.நா விசாரணைகளில் லெபனானின் உளவுப் பிரிவின் அதிகாரிகள் விசாரணைக்குள்ளாகி இருக்கிறார்கள். சிரியா அமெரிக்கா, ஐநா, ஐரோப்பிய சமூகம் போன்றவற்றினால் கடுமையான எச்சரிக்கைகளுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாகியிருந்தது.

    அரசாங்கங்களின் அரசியலில் படுகொலைகள் ஒரு அம்சமாக இருந்தாலும், தீவிரவாத இயக்கங்களின் வளர்ச்சியில் அது முக்கியத்துவம் அடைந்தது. பலஸ்தீனிய விடுதலை இயக்கத்தின் ஆரம்ப காலங்களில் அரசியல் படுகொலைகள் சர்வதேச கவனத்தை ஈர்க்கவும், பெரும் எதிரியை நேரடியாக எதிர்கொள்ள முடியாத இயலாமையிலும் நடத்தப்பட்டன. பலஸ்தீன விடுதலை இயக்கங்களில் ஒன்றான 'கறுப்பு செப்டம்பர்' இயக்கம் மியுனிச் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களைக் கொன்றது இந்த வகையான படுகொலையே. இந்தப் படுகொலைகளும் எதிர்விளைவுகளையே பலஸ்தீனர்களுக்கு கொண்டு வந்து சேர்த்தது. பின்னர், சர்வதேச அரங்கில் பலஸ்தீனியர்களின் நிலை தெரியப்பட்டு பலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்த பின்னர் இந்தப் படுகொலைகள் ஓய்ந்திருந்தன. பின்னர் நடைபெற்ற கொலைகள் அதிதீவிர இஸ்லாமிய வாத இயக்கங்கள் நடத்தியவை தான். பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் பிந்திய படுகொலை சில வருடங்களுக்கு முன்னால் இஸ்ரேலிய அமைச்சர் ஒருவரைக் கொன்றது தான்.

    அல் அக்சா என்ற தீவிரவாத இயக்கத்தின் பெயரில் பயங்கரவாத நடவடிக்கைகள் நடைபெற்ற போதும், அரசியல் அழுத்தம் காரணமாக அவர்களையும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டிய கட்டாயம் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் அரசுக்கு உள்ளது.

    எனவே படுகொலை என்பது நவீன ஜனநாயக அரசியலில் வேண்டத்தகாத, ஆனால் தவிர்க்க முடியாத ஒரு பக்க விளைவு தான். இருந்தாலும் தனிமனிதர்களைக் கொல்வதன் மூலம் இலட்சியங்களை அடையலாம் என்ற கனவுடன் இருப்பவர்களுக்கு வரலாறுகள் தரும் பாடம், எதிர்பார்த்த விளைவுகள் எப்போதும் கிடைப்பதில்லை என்பது தான்.

    அலண்டேயைக் கொன்;ற பினோச்சே வீட்டுக்காவலில், லுமும்பாவைக் கொன்ற மொபுட்டு நாட்டை விட்டு தப்பியோடி இறந்தது, சுகர்ணோவைக் கொன்ற சுகார்ட்டோ பதவியை இழக்க நேரிட்டது என, இந்தக் கொலைகள் மூலமாக அதிகாரத்தில் அமர்ந்து அரசோச்சியவர்கள் கடைசியில் தவிர்க்க முடியாத மக்கள் எழுச்சிகளில் அடிபட்டுப் போனவர்கள் தான். அரபாத்தின் மரணத்தின் பின்னால், அப்பாஸ் 'பயங்கரவாதத்தினால் நாங்கள் எதையும் சாதிக்கவில்லை' என்று ஒத்துக் கொள்ளும் அளவில் தான் நிலைமை இருக்கிறது.

    ஆனால் புலிகளைப் பொறுத்தவரை அரசியல் படுகொலை என்பது புதிய பரிமாணம் ஒன்றைப் பெற்றது. புலிகளின் இயக்கத்தின் தோற்றமே அரசியல் படுகொலை நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒன்று தான். விடுதலையின் முதல் கட்டம் 'களை எடுப்பு' என்ற வகையில், தமிழ் மக்களிற்கு அநீதி விளைவித்த அரசுக்கு எதிரான போராட்டம் தொடங்க முன்பாகவே, தமிழ் மக்களிற்கு இடையில் உள்ள அரசாங்க ஆதரவாளர்களைப் படுகொலை செய்வதிலேயே புலிகள் அக்கறை காட்டினர். துரையப்பா கொலை முதல் பட்டியல் போட்டு பத்திரிகைக்கு அனுப்பி கொலை செய்த இயக்கம் அது. யாழ்ப்பாணத்தில் சிங்கள கட்சிகளின் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் முதல் அவர்களைக் கொல்ல வேண்டும் என்ற கருத்துக் கொண்டிருந்த கூட்டணித் தலைவர்கள் வரைக்கும், மாற்று இயக்கத் தலைவர்கள் முதல் மற்ற நாட்டுத் தலைவர்கள் வரைக்கும் என, புலிகள் அந்தந்த நேரங்களில் கொண்டிருந்த அரசியல் போக்குக்கு முரண்பட்டவர்கள் எல்லாம் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர். அத்துடன் அந்தக் கொலைகளுக்கான தீர்ப்பை வழங்கும் 'வழுவா வரத்தைப்' பெற்ற மனுநீதி கண்ட சோழனாக தங்கள் தலைவரைக் கருதிக் கொண்ட இயக்கம் அது.

    சமூகவிரோதிகள் என்ற பெயரில் கடத்தல், கப்பம், கொலை, கொள்ளை என பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்களை, சமூகத்தின் காவலர்களாகவும் நீதிபதிகளாகவும் உருவகித்துக் கொண்ட புலிகள், மின்கம்பத்தில் கட்டி 'மண்டையில் போடுவதை'க் கூட ஒரு அரசியல் நடவடிக்கையாகக் கருதித் தான் செய்தார்கள். ஆனால் இன்று அதே புலிகள் அதே குற்றச் செயல்களை விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் தாங்களே செய்கிறார்கள்.

    படுகொலை செய்யப்பட்டவர்கள் மீது புலிகள் சுமத்திய அனைத்துக் குற்றங்களும் புலிகளால் இன்று செய்யப்பட்டு வருகின்றன. பேச்சுவார்த்தையில் நம்பிக்கை இல்லை என்று ஆயுதப் போராட்டத்தில் இறங்கிய காரணத்தினால், பேச்சுவார்த்தை நடத்த முயன்ற கூட்டணித் தலைவர்கள் புலிகளால் கொல்லப்பட்ட பின்னர், இன்று அதே புலிகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப் போவதாகக் கூறுகிறார்கள். இந்திய இராணுவத்தினரை எதிர்கொள்ள முடியாமல் பிரேமதாசவிடம் ஒதுங்கியதை 'ராஜதந்திர நகர்வு' என்று பிரசாரம் செய்த புலிகள் அதற்கு முன்னால் சிங்கள அரசுடன் சகவாசம் வைத்தவர்களை துரோகிகளாக்கி சுட்டதை மனதில் கொள்ளவில்லை. இதே போல, இந்திய அரசுடன் சேர்ந்து நின்றவர்களைக் கொன்ற புலிகள் இந்திய அரசின் அங்கீகாரத்திற்காக அவ்வப்போது குரல் கொடுப்பதையும் நிறுத்தவில்லை.

    புலிகளைக் பொறுத்தவரை அரசியல் படுகொலை என்பது அரசியலின் பக்க விளைவு அல்ல, மாறாக அவர்களுக்குத் தெரிந்த ஒரே ஒரு அரசியல் வழிமுறை அது.. 'ஆளைப் போடுவது' என்பது பிரச்சனையைத் தீர்ப்பதற்கான இலகுவான வழிமுறையாக புலிகளால் கைக் கொள்ளப்பட்டது.  பேச்சுவார்த்தை, கருத்துப் பரிமாற்றம், புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு போன்ற ஜனநாயக ரீதியிலான வழிகள் மூலமாக பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ளுவது என்பது எந்தக் காலத்திலும் புலிகளுக்கு அன்னியமானதொன்று. கருத்து முரண்பாடு என்பது கொலையினால், கருத்து முரண்பட்டவரை அழிப்பதனால் தீர்க்கப்படலாம் என்பதே புலிகளின் தாரக மந்திரம். அந்தக் கொலையினால் வரும் பின் விளைவுகள் பற்றி புலிகளுக்கு கவலையில்லை. அந்தப் பின்விளைவுகளையும் கொலைகள் மூலமாக தீர்க்கலாம் என்ற நம்பிக்கையில்!

    இன்று தமிழ் மக்கள் மீது புலிகள் கொண்டிருக்கும் இரும்புப் பிடி கூட அந்தப் படுகொலைப் பயமுறுத்தலை அடிப்படையாகக் கொண்டது தான். புலிகள் தங்களுக்கு இன்று இருப்பதாகப் பிரசாரம் செய்யும் ஆதரவு கூட, அந்தப் படுகொலைப் பயமுறுத்தலால் ஏற்பட்ட பயமே தவிர, மனம் நிறைந்த ஆதரவு அல்ல. இதே புலிகள் ஆயுதம் இல்லாமல் தமிழ் மக்கள் முன் வந்தால் எந்த வகையான மரியாதை கிடைக்கும் என்பது புலிகளுக்கும் நன்றாகவே தெரியும்.

    புலிகளுக்கு தற்போதைய எதிரிகள் தமிழர்களுக்கான எந்த வகையான தீர்வையும் எதிர்க்கும் கடும் தீவிரவாதப் போக்கைக் கொண்ட சிங்கள இனவாதக் கட்சிகளோ, அரசியல்வாதிகளோ இல்லை. புலிகளுக்கு தற்போது தமிழர்களே எதிரிகளாக இருக்கிறார்கள். தமிழினத்திற்கு எவருமே செய்யாத அழிவைச் செய்தவர்கள் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் சிறில் மத்தியூவும் தான். ஆனால் இவர்கள் இருவருமே புலிகளால் படுகொலை செய்யப்படவில்லை, ஆனால் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களுடன் புரிந்துணர்வை ஏற்படுத்தி செயற்பட்ட இராணுவத் தளபதிகளை தற்கொலைப் போராளிகள் மூலம் கொன்றிருக்கிறார்கள் என்பதிலிருந்தே புலிகளின் போராட்டத்தின் தன்மையைப் புரிந்து கொள்ளலாம்.

    ஆரம்ப காலத்தில், அரசியலில் கற்றுக்குட்டிகளாக இருந்த காலத்தில் நடத்தப்பட்ட கொலைகள் இன்று வரை தொடர்வதற்கான காரணங்களும் தேவைகளும் என்ன?

    தொடர்கொலை புரியும் மனநோயாளிகள் போன்ற ஒரு கொலை வெறிக்குள் இன்று புலிகள் உள்ளார்கள். போதைமருந்துக்கு அடிமையானவர்கள் போதையைப் பெற்றுக் கொள்ள எதையும் செய்வார்கள் என்பது போல, கொலைகளுக்கு உளரீதியாக அடிமையானவர்கள் போன்ற நிலையிலேயே உள்ளார்கள் என்பதை அவர்கள் கொலை செய்யும் முறைகளும் அதைச் செய்வதில் காட்டுகின்ற குரூரத்தனமும் காட்டி நிற்கின்றன. எந்த மனிதத்தன்மையுள்ள மனிதனால் வாளால் வெட்டி கண்ட துண்டமாக வெட்டிக் கொல்ல முடியும்? எந்த மனிதத்தன்மையுள்ள மனிதனால் குழந்தையோடு சேர்த்து தந்தையைக் கொல்ல முடியும்?

    ஒருபுறத்தில், சமாதான காலத்தில் குடும்ப வாழ்வில் ஈடுபட்டுள்ள இயக்க உறுப்பினர்கள் கொலைவெறியை மறந்து விடக் கூடாது என்பதற்காக, யுத்தம் நடைபெறாத இந்த இடைக்காலத்தில் பழைய கொலைப்பட்டியலை தூசி தட்டி எடுத்து கொலைகள் அடுத்தடுத்து நடைபெறுகின்றன. இரத்தவெறி பிடித்த மிருகங்களை அடைத்து வைக்கும்போது, அவற்றுக்கு பச்சை இறைச்சி கொடுத்து இரத்தவெறியைத் தணிப்பது போன்ற நிலை இன்றையது. யுத்த நிறுத்த காலத்தில் இயல்பு வாழ்வுக்குத் திரும்பி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் இயக்க உறுப்பினர்களுக்கு மனிதத்தன்மை வந்து விடக் கூடாது என்ற எண்ணம் தலைமைக்கு இருக்கிறதோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.

    மறுபுறத்தில், எந்தக் கொலைகளும் நடைபெறாதிருந்தால் மக்கள் மனதில் புலிகள் மீதான பயம் குறைந்து போவதற்கான சாத்தியங்கள் அதிகம். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கொலைகள் எல்லாம் எந்த வகையான எதிர்ப்பும் எதிர்காலத்தில் எழாதபடிக்கு நடத்தப்பட்ட அடக்குமுறைக் கொலைகள் தான். மக்களைத் தொடர்ந்தும் பீதியில் வைத்திருக்க நடத்தப்படும் கொலைகள் இவை.

    இதையும் விட, திரைப்பட நாயகர்களுக்கு அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுக்க வேண்டிய தேவை இருப்பது போல, யுத்த நிறுத்த காலத்தில் முகாம் தகர்த்து கொடி ஏற்றி புலம் பெயர்ந்த நாடுகளில் வெற்றி விழாக் கொண்டாடுவதற்கு வழியில்லாததால் புலம் பெயர்ந்த ரசிகர்களுக்கு இவ்வாறான 'இனிப்பான சேதிகளை' அவ்வப்போது கொடுக்க வேண்டிய கட்டாயமும் வேறு இருக்கிறது.

    தன்னம்பிக்கையீனம் காரணமான பயம் இன்று 'அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பசாசு' என்ற நிலையில் எல்லோரையும் கொலை செய்வதற்கு தூண்டுகிறது. 'ஞானதந்தையின்' கட்டுப்பாட்டில் உள்ள மாபியாக் கும்பல் போல, தனது பாதையில் குறுக்கிடும் எல்லோரையும் கொலை செய்வது தான் சரியான தீர்வு என்ற கருத்து புலிகளிடம் வேரூன்றியிருக்கிறது. அந்தப் பயம் மற்ற இயக்கங்களில் ஏதோ ஒரு காலத்தில் இருந்து விலகியிருந்தவர்களை மட்டுமன்றி, இயக்கத்திற்குள்ளேயே சந்தேகத்திற்கு உள்ளானவர்களைக் கூட கொல்வதற்கு தூண்டுகிறது.

    கருணாவின் பிரிவின் பின்னால் சரணடைந்த தளபதிகள் முதல் சந்தேகத்திற்குள்ளான போராளிகள் வரைக்கும் இன்று படுகொலை செய்வது பயம் காரணமாக என்பதுடன், தற்போதைய உறுப்பினர்களுக்கு 'முள்ளந்தண்டை சிலிர்க்க' வைக்கும் முயற்சியும் கூட. இயக்க விசுவாசத்தைக் கூட, படுகொலைப் பயத்தினால் நிலை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் புலிகள் இன்று உள்ளார்கள்.

    தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தாங்களே என்ற காட்டுக்கூச்சலை யாரும் ஏற்றுக்கொள்ளாத நிலையில், மற்ற அரசியல் தலைவர்கள் உயிரோடு இருப்பதால் தானே இந்தப் பிரச்சனை என்ற கருத்தில், எச்ச சொச்சமாய் மிஞ்சிப் போய் இருப்பவர்களைக் கொலை செய்வது தான் இன்று வரை நடைபெறுகிறது. தமிழ் மக்களுக்கு இன்னொரு அரசியல் தலைமை என்பது புலிகளால் ஜீரணிக்க முடியாத கருத்து. அந்தக் கருத்தை அரசியல் ரீதியாக வெற்றி கொள்வதை விடுத்து, அந்தத் தலைவர்களையும் எதிர்காலத்தில் அரசியல் ரீதியாக அச்சுறுத்தல் தரக்கூடியவர்கள் என்று கருதுபவர்களையும் கொல்வது தான் இன்று புலிகள் நடத்தும் கொலைகளின் பின்னணி. அதில் எஞ்சிப் போயிருப்பவர்களை எப்போது கொல்வார்கள் என்று புகலிடத்து ஊடகங்களும் தமிழர்களும் வாயில் நீர் ஊற்ற நாக்கை நீட்டிக் காத்திருக்கின்றன(ர்).

    தமிழ் மக்களுக்கு தங்களை விட இன்னொரு தலைமை இருக்கக் கூடாது என்பதற்காக திட்டமிட்டு இயக்கத் தலைவர்கள் முதல் கட்சித் தலைவர்கள் வரைக்கும், இன்னொரு இராணுவ நுழைவு ஏற்பட்டால், அதற்கு உதவி செய்து, எதிர்காலத்தில் அச்சுறுத்தல் இருக்கக் கூடாது என்பதற்காக மாற்று இயக்க உறுப்பினர்கள் வரைக்கும் புலிகள் கொன்று ஒழித்திருக்கிறார்கள்.

    புலிகளின் தலைமையின் இந்த தலைமை வெறிக்கு இவர்கள் மட்டுமன்றி, புலி இயக்கத்தின் முக்கியஸ்தர்களும் பலியாகியிருக்கிறார்கள்.

    ஒருபுறம் தமிழர்களைக் கொல்வதனால் சர்வதேச ரீதியில் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்ற துணிச்சல் புலிகளுக்கு உண்டு. புலிகள் நடத்தும் கொலைகளை கண்டும் காணாமல் 'நாங்கள் இங்கே பொலிஸ் வேலை செய்வதற்காக வரவில்லை' என்று சொல்லும் கண்காணிப்புக் குழு, புலிகள் கொலை செய்யப்படும்போது மட்டும் விசாரணைக்கு முண்டியடித்துக் கொண்டு வருவது புலிகளுக்கு சாதகமான விடயம்.

    இவ்வாறு மாற்றுத் தலைமைகளை அழிப்பதன் மூலம் இலங்கை அரசும் சர்வதேச சமூகமும் ஏன் தமிழ் மக்களும் வேறு வழியின்றி தங்கள் தலைமையை ஏற்றுக் கொண்டு ஆகத்தானே வேண்டும் என்ற எண்ணம் தான் இந்தக் கொலைகளுக்கு எல்லாம் ஆதிமூலம்.

    ஆனால் இந்தப் படுகொலைகள் புலிகளுக்கு எதிர்பார்த்த வெற்றியைக் கொடுத்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

    தமிழினத்தில் தனக்கு எதிராக எந்த அரசியல் தலைமையும் இருக்கக் கூடாது என்ற புலியின் தலைமையின் எதிர்பார்ப்பு இன்று வரை கைகூடவில்லை.  எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், அந்த மாற்றுத் தலைமைகளின் செயற்பாடுகள் பகிரங்கமாகத் தான் இருக்கின்றன. அதற்கான பாதுகாப்பை சிங்கள அரசாங்கத்திடம் பெற்றுக் கொண்டும், இந்தியாவின் ஆசியை வேண்டியும் அரசியல் நடத்த வேண்டிய துயர நிலை இருந்தாலும், அதைத் துரோகம் என்று முத்திரை குத்தும் தகுதி புலிகளுக்கு இல்லை. இந்திய இராணுவ காலத்தில் இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பை எதிர்பார்த்தது முதல் இன்று கருணா அணியினரை அழிப்பதற்கும், ஏன் கிழக்கில் நடமாடுவதற்கும் இலங்கை இராணுவத்தினரின் உதவியைப் புலிகள் நாடி நிற்கிறார்கள். இதே உதவிகளை மற்ற இயக்கத்தினர் பெறுவது புலிகளுக்கு துரோகமாகப் படுகிறது. பலியாடுகள் போல அவர்கள் தங்களிடம் வந்து தலையை நீட்டிக் கொண்டு நிற்க வேண்டும் என்று புலிகள் எப்படி எதிர்பார்க்க முடியும்? அவர்களும் புலிகளைப் போல தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள 'ராஜதந்திர நகர்வு' மேற்கொண்டதாக இருக்கட்டுமே? எதிரியின் காலில் விழும் ராஜதந்திர நகர்வுக்கான உரிமை புலிகளுக்கு மட்டும் சொந்தமானதல்லவே?

    வெட்ட வெட்டத் தளைக்கும் அசுரர்கள் போல, புலிகளால் துரோகிகள் என்று பலர் கொல்லப்பட்டாலும் இன்னும் பலர் இப்போதும் யாழ்ப்பாணத்திலும் கிழக்கிலும் துணிச்சலாகப் புலிகளுக்கு எதிரான அமைப்புகளின் உறுப்பினர்களாக இருப்பதுடன் பகிரங்கமாகச் செயற்பட்டும் வருகிறார்கள். இயக்கங்களின் தலைவர்களைப் புலிகள் கொன்ற பின்னாலும், இன்றைக்கு தினசரி மாற்று இயக்கங்களின் உறுப்பினர்களைக் கொன்று வரும் நிலையிலும், உயிருக்கு பயந்து தப்பி ஓடாமல், இன்னமும் அந்தந்த இயக்கங்களின் அலுவலகங்களை வைத்துக் கொண்டு பகிரங்கமாகச் செயற்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

    மறுபுறத்தில் இயக்கத்தின் உள்ளேயும் கூட, மாத்தயாவைக் கொன்றதால் கருணாவின் பிரிவு தடுக்கப்படவில்லை. மாத்தயா கொலையை விட மோசமான விளைவுகளைக் கொண்டு வந்திருக்கிறது. மாத்தயா கொலையில் கற்ற பாடம் தான் கருணாவைக் காப்பாற்றியிருக்கிறது. விசாரணைக்கு அழைத்த நிலையில் மாத்தயாவின் நிலை நடக்கும் என்ற அச்சத்தில் எடுத்த கருணாவின் நடவடிக்கை தான் இன்று அவரை உயிர் பிழைக்க வைத்தது. இல்லாவிடில், முதலில் வதந்திகள், பின்னர் தகவலைக் கசிய விடுதல், பின்னர் 'ஆளைப் போட்டிட்டம்' என்று மனைவியிடம் உடுப்பு, மணிக்கூடு கொடுத்தனுப்புதல் என்ற வழமையான நடைமுறை தானே அமுலாகியிருக்கும்.

    ராஜீவ் காந்தியைக் கொலை செய்ததால் இந்தியா புலிகள் மீது கொண்டிருந்த காழ்ப்பு அதிகரித்ததே தவிர, புலிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்த உதவவில்லை. அரசுகள் மாறி, புலிகளின் மேடையில் பேசிய ஜோர்ஜ் பெர்Zண்டஸ் பாதுகாப்பு அமைச்சராகியும் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. இன்றைக்கும் இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்ற வை.கோவின் துண்டிலும் நெடுமாறனின் வேட்டியிலும்  தொங்கிக் கொள்ள வேண்டிய நிலை.

    ஒருவேளை பிரேமதாசா, காமினி, லலித் போன்றவர்களுக்கு நடந்த கதியை நினைத்து ரணில் இன்று புலிகள் நினைத்த மாதிரி ஆடக் கூடும். ஆனால், இறுதித்தீர்வு என்று வரும் போது ரணில் கூட இந்தியாவின் அனுசரணையை நாட வேண்டிய நிர்ப்பந்தத்தில் தான் உள்ளார். தற்போது கதிர்காமரிற்கு நடந்தது போல, ரணிலின் அலுவலகத்தை வீடியோப் படம் பிடித்தவர்கள் கைது என்ற தகவலே, ரணிலின் 'முள்ளந்தண்டைக் சிலிர்க்கப்' பண்ணியிருக்கக் கூடும்.

    சிங்களத் தலைவர்களைக் கொல்வதன் மூலம் சிங்களத் தலைமையைப் பலமிழக்கச் செய்து காரியத்தைச் சாதிக்கலாம் என்ற புலிகளின் எதிர்பார்ப்பு இன்று வரை கைகூடவில்லை. ரணிலைக் கைக்குள் போட்டு, ஆள ஊடுருவும் அணியினரைக் கொல்ல முடிந்தாலும், அதையே காரணம் காட்டி ரணிலின் ஆட்சி கலைக்கப்பட்டது.

    புலிகள் எதிர்பார்த்த ஏகபிரதிநிதித்துவ சர்வதேச அங்கீகாரம் இன்று வரைக்கும் கைக்கெட்டாமல் இருப்பதற்கான காரணம் இந்தப் படுகொலைகள் தான். ஐ.நா சபை முதல் ஐரோப்பிய யூனியன் வரை, சர்வதேச மன்னிப்புச்சபை முதல் உதவி வழங்கும் நாடுகள் வரைக்கும் புலிகளின் இந்தப் படுகொலைகளால் தான் பலஸ்தீன விடுதலை இயக்கம், கிழக்கு தீமோர் விடுதலை இயக்கம் போன்றவற்றுக்கு வழங்கிய அங்கீகாரத்தை கொடுக்க மறுக்கின்றன. இன்னும் ஐரோப்பிய, அமெரிக்க, அவுஸ்திரேலிய அரசுகள் புலிகளைப் பயங்கரவாத இயக்கம் எனத் தடை செய்திருப்பதும் இந்தப் படுகொலைகளால் தான்.

    சர்வதேச சமூகம் புலிகளைத் தடை செய்வதற்கு கதிர்காமர் செயற்பட்டார் என்று பழி தீர்க்க கதிர்காமரைக் கொன்றார்கள் புலிகள். ஆனால் அது சர்வதேசத் தடையை நீக்க உதவுமா? இன்றும் உதவி வழங்கும் நாடுகள் புலிகளின் கொலைகளைக் கண்டித்திருக்கின்றன. ராஜீவ் காந்தி கொலைக்குப் பின்னால் புலிகளுக்கு மீள முடியாத பாதிப்பை கதிர்காமரின் கொலை நிச்சயமாகக் கொடுக்கும். காரணம், கதிர்காமருக்கு அந்தந்த நாடுகளில் இருந்த மதிப்பும், நட்பும். இவையெல்லாம் பாலசிங்கத்தினாலேயோ, தமிழ்ச்செல்வனாலேயோ சரிக்கட்ட முடியாத பாதிப்புகள்.

    கதிர்காமரின் கொலையின் அதிர்வினால் ஏற்பட்ட அரசியல் பேரலை, புலிகள் அரசியல் லாபம் தேட முயன்ற கௌசல்யன், தராக்கி கொலைகளைக் கூட அள்ளிச் சென்று விட்டது.

    இழுத்த ஆப்பில் வாலை மாட்டிக் கொண்டு தவிக்கும் இவர்களுக்கு இந்தப் பாதிப்புகள் போதாது என்று, இதுவரையும் கேட்டுக் கேள்வியில்லாமல் வேட்டையாடி வந்த புலி மீது கருணாவின் வேட்டை ஆரம்பித்திருக்கிறது. முள்ளை முள்ளால் எடுக்கும் கருணாவின் முயற்சியால் இன்று படுகொலைகளுக்கு பயந்து 'அரசியல் நடவடிக்கை'க்கு சென்றவர்கள் பின்வாங்க வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறார்கள். தற்போது, புலிகளே யாழ்ப்பாணத்தில் புலனாய்வுப் பிரிவினர் சிறு குழுக்களை புலிகளுக்கு எதிராகத் தயார் செய்வதாக முறையிடுகிறார்கள். விரைவில் இந்த வேட்டை யாழ்ப்பாணத்திலும் தொடங்கினால் நிலைமை மேலும் சிக்கலாகி விடும்.

    'ஆளைப் போட்டால்' பிரச்சனை தீரும் என்று அன்று முதல் இன்று வரை போட்டும் புலிகளின் கொலைப்பட்டியல் முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகிறது.  நேற்று மாத்தயா, இன்று கருணா என்று தொடரும் கொலைப்பட்டியலில் நாளை தமிழ்ச்செல்வனும் கடைசித் துரோகியாக பொட்டம்மானும் இருக்கக் கூடும். அதையும் இந்தச் சமூகம் கண் மூடிக் கொண்டு ஏற்கத் தான் செய்யும்.

    காற்றுப் புகாத இடத்திற்குள் கூட தங்களால் நுழைந்து கொலை செய்ய முடியும் என்று மார்தட்டிக் கொள்ளும் புலிகள் ஒன்றை வசதி கருதி மறந்து விடுகிறார்கள். இதே போல ஈ, காக்கை கூட நுழைய முடியாத தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிக்குள் கூட, புலிகளின் தலைவரும் முக்கியஸ்தர்களும் இதே படுகொலைகளுக்குப் பயந்து சுதந்திரமாக நடமாட முடியாத நிலையில் உள்ளனர்.

    புலிகள் ஜனநாயக வழிக்குத் திரும்புவார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர்களைப் பேச்சுவார்த்தைப் பொறிக்குள் சிக்க வைக்கும் முயற்சியில் அவர்களின் கொலைகளைக் கண்டும் காணாமல் விட்டு அவர்களைத் தாஜா பண்ணும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சர்வதேச சமூகம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    புலிகளுக்கு உண்மையாகவே பேச்சுவார்த்தை மூலமான ஜனநாயக அடிப்படையிலான தீர்வில் நம்பிக்கை இருந்தால், அவர்கள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே கொலைகளுக்குத் திட்டமிட மாட்டார்கள். அதிலும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மற்றத் தரப்பைக் கொலை செய்ய மாட்டார்கள். கொலைகளைக் கண்டித்து, புலிகளைப் புறக்கணிக்காமல், 'கொலைகளை நிறுத்துங்கள், பேச்சுவார்த்தை மேசைக்கு செல்லுங்கள்' என்றவுடன் மேசையில் ஏறி உட்கார இது என்ன சேர்க்கஸ் புலியா?

    படுகொலைகள் மூலம் ஏகபிரதிநிதித்துவ அங்கீகாரத்தையும் வடக்குக் கிழக்குக்கான முழு அதிகாரத்தையும் பெறத் துடிக்கும் புலிகள் ஒன்றை உணர வேண்டும்.

    அரசியல் படுகொலைகள் மூலம் தமிழ் மக்களின் உரிமையையோ, இனப்பிரச்சனைக்கான தீர்வையோ, விடுதலையையோ அடைய முடியாது. அவ்வாறு அடைய முடியும் என்றால் உலகில் பல பிரச்சனைகள் படுகொலைகளுடன் தீர்ந்திருக்கும். யாழ்ப்பாண மேயராக இருந்த துரையப்பாவைச் சுட்டு கால் நூற்றாண்டின் பின்னரும் யாழ்ப்பாண மேயராக இருந்த சரோஜினியைச் சுட வேண்டும் என்றால் எங்கோ தப்பு நடந்திருக்கிறது என்பது தானே அர்த்தம்?

    பிலிப்பைன்ஸ் நாட்டின் சர்வாதிகாரியாக இருந்த மார்க்கோஸ், எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான அக்குயினோவைக் கொன்றதன் மூலம் தன் ஆட்சியை நீடிக்க வைக்க முடியவில்லை. கடைசியில் ஒரு கோழை போல, அமெரிக்க உதவியுடன் தப்பியோடத் தான் நேரிட்டது.

    புலிகளின்  கொலைகள் எதுவும் தமிழ் மக்களின் நலன்களுக்காக செய்யப்படவில்லை. தங்கள் இருப்பை உறுதி செய்து கொள்ள, முன்பு அச்சுறுத்தலாக இருந்தவர்களை பழி வாங்கவும், எதிர்காலத்தில் இருக்கக் கூடியவர்களை கொன்றொழிப்பதற்காகவும் நடத்தப்பட்டவையே. புலிகளின் எந்தக் கொலையும் தமிழ் மக்களின் விடுதலைக்கோ, உரிமைப் போராட்டத்தில் ஒரு படி கூட முன்னேற உதவியதாக சரித்திரம் இல்லை.

    இந்தக் கொலைகள் இன்று வரைக்கும் சிங்கள இனவாதிகளும் மிதவாதிகளும் தமிழர்களுக்கான நியாயமான உரிமையை மறுப்பதற்கான சாட்டுப் போக்குக் காரணமாகவே பயன்படுகின்றன. புலிகளின் ஜனநாயக மறுப்பையும் பயங்கரவாதக் கொலைகளையும் சர்வதேச சமூகத்தின் முன் காரணம் காட்டியே சிங்களத்தலைமைகள் தமிழ் மக்களின் உரிமையைக் கொடுக்காமல் இழுத்தடிக்கின்றன. அந்தக் குற்றச்சாட்டை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்வற்கும் புலிகளின் இந்த ஜனநாயக மீறல்கள் தானே காரணம்.

    தன்னைத் தேசியத் தலைவராக அழைக்கப்படுவதில் பெருமிதம் கொள்ளும் புலிகளின் தலைவரும் சில உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    பலஸ்தீன இயக்கத்தின் அரபாத், ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் மண்டேலா, கிழக்குத் திமோரின் குஸ்மா போன்றவர்கள், ஏன் இஸ்ரேலின் முன்னைய பிரதமர்கள் பலர் எல்லாம் ஒவ்வொரு கால கட்டத்தில் அந்தந்த அரசுகளால் பயங்கரவாதிகள் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான். அவர்கள் அந்த முத்திரை குத்தலில் இருந்து தப்பி சர்வதேச அங்கீகாரம் பெற்றது அவர்கள் ஜனநாயக வழிக்குத் திரும்பிய பின்னர் தான். பலஸ்தீன விடுதலை இயக்கம், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், கிழக்குத் திமோர் விடுதலை இயக்கம் எல்லாம் பல்வேறு விடுதலை அமைப்புகளின் கூட்டமைப்புக்களே, அவர்கள் எல்லாம் 'களை எடுப்பில்' மட்டும் கவனத்தைச் செலுத்தியிருந்தால் இறுதியில் எல்லோராலும் தூக்கி எறியப்பட்டிருப்பார்கள்.  எல்லோரையும் அரவணைத்த தலைவர்களாக இவர்கள் மிளிர்ந்ததனால் தான் மக்களாலும் எதிரி அரசுகளாலும் சர்வதேச நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

    அங்கோலாவின் சாவிம்பி, மேற்குலகின் செல்லப்பிள்ளையாக இருந்தும், கடைசியில் கைவிடப்பட்டு ஒதுக்கப்பட்டு, 'கோழிக்கள்ளனைப் போல' சுடப்பட்டது இந்த ஜனநாயக மறுப்பினால் தான்.

    புலிகளும் தங்களை ஜனநாயக ரீதியில் வளர்த்துக் கொள்ளாமல், மாபியாக் கும்பல் போல, விளைவுகளைப் பற்றிய கவலை இன்றி, தொடர்ந்தும் கொலைகளை நடத்திக் கொண்டிருந்தால், தற்போது நோர்வேயின் அனுசரணையுடன் பெற்றுக் கொண்ட கொஞ்ச நஞ்ச சர்வதேச அனுதாபமும் இல்லாது போய், ஜ.நாவின் தடை வரைக்கும் விடயம் செல்லக் கூடும்.

    தமிழ் மக்களும் யுத்தத்திற்கு தயார் இல்லை. 'தமிழீழத்தையும் அடித்துப் பறிக்க' முடியாது என்பதும் தற்போதைய சர்வதேச, இந்திய நிலைப்பாடுகளில் இருந்தும் கிழக்கின் நிலையிலிருந்தும் தெளிவாகியிருக்கும். மிஞ்சியிருப்பது ஜனநாயகப் பாதை மட்டும் தான்.

    தமிழர்களுடைய நலனுக்காக இல்லாவிடினும், தங்கள் சுயநலத்திற்காகவாவது புலிகள் ஜனநாயக வழிகளைக் கைக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இன்றைக்கு உண்டு.

    இல்லாமல், கொலைகளைத் தொடர்ந்து கொண்டிருந்தால்.. போகிற போக்கில் புலிகளின் தலைவர்களும் இவ்வாறான படுகொலைகளுக்கு இலக்காக வேண்டிய நிலையும் ஏற்படக் கூடும். அவ்வாறான நிலை ஏற்படாது என்று பாதுகாப்பைப் பலப்படுத்தினாலும், வாழ்நாள் பூராவும் அதிகாரம் நிறைந்த, ஆனால் சுதந்திரமில்லாத, பொன் கூட்டில் உள்ள புலிகள் போல, தாங்கள் மட்டுமன்றி, தங்கள் குடும்பத்தினரும், மரண பயத்துடன், வாழ வேண்டி வரும்.

    இறுதியில், புலிகளின் தொடரும் 'படுகொலை அரசியல்' இறுதியில் ஒரு ஒட்டுமொத்தமான 'அரசியல் தற்கொலை'யாகத் தான் முடியும்!

    Postad



    You must be logged in to post a comment Login