Recent Comments

    தமிழர்களின் மூளை வளர்ச்சி பெற பஞ்ச பண்டங்கள்

    ஆட்டிறைச்சியையும் இடியப்பத்தையும் விட்டால் வேறு உணவே இல்லாத தமிழ்ப் பண்பாட்டில் இதயத்திற்கும் மூளைக்கும் நலம் தரும் ஆரோக்கியமான உணவுகள் சிலவற்றை தமிழர்கள் நலன் கருதித் தருகிறோம். ஒலிவ் எண்ணெய் மத்தியதரைக் கடலை அண்டிய அரபு, ஆபிரிக்க, ஐரோப்பிய, நாடுகளில் வளரும் ஒலிவ மரங்களில் பெறப்படுவது. இந்த எண்ணெய் கொழுப்பாக இருந்தாலும், இது உங்கள் இரத்தத்தில் கொலஸ்ட்ரோலின் அளவைக் குறைப்பதால், இதயத்தின் நலத்துக்கு உகந்தது. அத்துடன், சுரக்கும் இன்சுலினின் அளவை அதிகரித்து, இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. எனவே, நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஒலிவ் எண்ணெய் பயன்படுத்துவது உடலுக்கு நல்லது. சமையலுக்கு மட்டுமன்றி, உங்கள் மரக்கறி சலாட்டுக்கு மேல் ஒலிவ் எண்ணெயையும் வினாகிரியையும் ஊற்றி உண்பது நல்லது. பருப்புகளும் கடலைகளும் உடலுக்கு மிகவும் உகந்தவை. Walnuts, Almonds, Hazelnuts போன்ற பாதாம் பருப்பு உட்பட்ட பருப்புகளில் நார்ப் பொருட்கள் அதிகம் இருப்பதால் உங்கள் வயிறு நிறைந்திருக்கும் உணர்வு ஏற்படும், உடலின் கொலஸ்ட்ரோல் அளவும் குறையும். இந்தப் பருப்புகளில் விட்டமின் E, ஒமேகா 3 எனப்படும் ஆரோக்கியமான கொழுப்பமிலம் இருப்பதால், இதய நலத்துக்கும், வயது போகும்போது மூளையின் நலத்துக்கும் உகந்தவை. இந்தப் பருப்புகளை வறுத்தோ, வறுக்காமலோ, சமைத்தோ உண்ணலாம். உப்புடன் உண்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். புளூபெரிப் பழங்களில் விட்டமின் சி, நார்ப் பொருட்கள் என்பவற்றுடன் antioxidants எனப்படும் உடலுக்கு நலம் தரும் பொருட்கள் உள்ளன. இந்த antioxidants புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளைத் தடுக்கக் கூடியன. சிறுநீர்வழியில் ஏற்படும் தொற்று, முரசு கரைதல் போன்றவற்றைத் தடுக்கக் கூடியது. இவற்றைத் தனியாகவோ, தயிரில் கலந்தோ, ஜுஸ்களுடன் கலந்தோ பயன்படுத்துங்கள். மீன்களில் salmon, lake trout, herring, sardines and tuna போன்ற மீன்கள் ஒமேகா 3 கொழுப்பமிலத்தைக் கொண்டிருந்து, கொலஸ்ட்ரோலைக் குறைப்பதால் உங்கள் இதயத்திற்கும் மூளைக்கும் உகந்தவையாகும். வாரம் இரு தடவை இவற்றை உண்பது இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இருதய நோய் வருவதைத் தடுக்கும். உடற்கலங்கள் வீங்கி, இரத்தக் குழாய்கள் பழுதடைவதையும் இவை தடுக்கும். கறியாகவோ, டின் மீன் வகையறாக்களை சம்பல் செய்து பாணுடனோ சாப்பிடுங்கள். கோவா வகையைச் சேர்ந்த கேல் இலையில் நிறைய உயிர்ச்சத்துக்கள் உள்ளன. இதில் கல்சியம், விட்டமின் சி, ஏ, கே, செம்பு, பொட்டாசியம், இரும்பு, பொஸ்பரஸ், மங்கனீஸ் என எக்கச்சக்கமான சத்துக்கள் உள்ளன. கண்பார்வை, எலும்புகள், தோல், கண் போன்றவற்றின் நலனுக்கு மட்டுமன்றி, இவற்றில் புற்றுநோயை எதிர்க்கும் சத்துக்களும், நார்ப் பொருட்களும் உள்ளன. அத்துடன் இதில் உள்ள கலோரிகள் மிகவும் குறைவானவை. பச்சையாகவோ, வறுத்தோ, நீராவியில் அவித்தோ இவற்றை உண்ணலாம். ஒலிவ் எண்ணெய் தடவி, அடுப்பில் 350 பாகையில் வாட்டி, அப்பளம் போலவும் உண்ணலாம். சும்மா வெறுமனே ஆட்டிறைச்சி, சோற்றினால் மந்தம் அடைந்து கிடக்காமல், ஆரோக்கியமான இந்த உணவுகளையும் உண்ணுங்கள். மூளை வளர்ச்சிக்கும் உகந்தவை என்பதால், தமிழர்கள் இவற்றை உண்டால் தமிழினம் வளர்ச்சி பெற வழி பிறக்கலாம். 'ஏன் எங்களுக்கு என்ன குறைச்சல்?' என்று வீரம் காட்டப் போய், வம்பில் மாட்டி வாங்கிக் கட்டிக் கொள்ளாமல், விவேகம் பெறவாவது உதவுமே!

    Postad



    You must be logged in to post a comment Login