Recent Comments

    கடவுளே! தமிழனுக்கு ஒரு கொடும்பாவி கொடு!

    thayagam featured-Effigyபேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி

    தமிழர் கலாசாரத்தில் கொடும்பாவி எரிப்பு பின்னிப் பிணைந்த விடயம். நீண்ட காலம் மழை பெய்யாவிட்டால், கொடும்பாவி எரித்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை பற்றி முன்னோர் பேசக் கேட்டதுண்டு. கொடும்பாவி பாடையில் படுத்தூரைச் சுற்ற, வான் பார்த்த விவசாயிகள் பைந்தமிழில் அழும் ஓசை கேட்டு வருண பகவானே விழிநீர் சுரந்திருக்கக் கூடும். அதன் உண்மை பொய் தெரியாது. அப்படிப் பெரிய வரட்சி ஊரில் வந்ததாயும் ஞாபகமில்லை. ஊரில் போதியளவு கிணற்று நீர் எப்போதும் இருந்தது... இப்போது கல்லெறி தூரத்துச் சுன்னாகக் கழிவெண்ணெய் ஊறும் வரைக்கும்! மழை தேவைப்படா விட்டாலும், கொழுத்தியே பழகிய தமிழனுக்குக் கொடும்பாவி வேண்டுமே! கண்டுபிடித்தான் கொடும்பாவிகளை, சிங்கள அரசியல்வாதிகளில்! இந்தக் கொடும்பாவிகளால் தான், தனது காட்டில் மழை பெய்யவில்லை என்ற எண்ணத்தில்! எனவே தமிழ்த் தேசியம் வீறு கொண்டெழுந்து, அரசுக்கு எதிரான பகிஷ்கரிப்புகளும் ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் 'அமர்க் களமாக' நடந்த போதெல்லாம் சிங்கள அரசியல்வாதிகளுக்கு கொடும்பாவி எரித்து விழா இனிதே நிறைவு பெறும். அப்போதெல்லாம் மழை பெய்ததாக ஞாபகமில்லை. Raining on Tamils' parade இனால் தனக்கு வரக் கூடிய ஆபத்துக்கள் பற்றி கடவுளுக்கும் தெரிந்திருக்கக் கூடும். கொடும்பாவி என்றதும் ஏதோ இந்த அரசியல்வாதிகளின் உருவச்சிலையை எரிப்பது என்ற நினைப்பு கியூறியஸ்க்கு இருந்தது. பின்னால் அறிந்தால், நம்ம கத்தரித் தோட்டங்களில் சிலுவை போலக் கட்டிய கிழுவந்தடிகளுக்கு வைக்கோல் அடைத்த பழைய சேட்டுகள், லோங்ஸ்கள் பொருத்தி, வீட்டில் உடைந்த மண் பானைகளில் சுண்ணாம்பில் முகம் கீறிய கத்தரி வெருளிகள் மாதிரி, வைக்கோல் அடைத்த வெறும் பைகள் தான் என்று தெரிய வந்தது. காயமே இது பொய்யடா, வெறும் வைக்கோல் அடைத்த பையடா! என்பதை இந்தப் பையல் உணர முடிந்தது. இந்தக் கத்தரி வெருளிகளுக்குப் பயந்து மிரண்டு, கத்தரிகளுக்குள் குனிந்து மறைந்து கியூறியஸ் கடந்து சென்ற காலமும் உண்டு. இப்படியாகத் தானே, ஜே.ஆருக்கு எதிராக நம்ம ஊரில் ஊர்வலம் நடத்தி வழமை போல, விழா முடிவில் கொடும்பாவி எரிக்கப்பட்டது. ஊர்வலத்தில் கொடும்பாவியைக் கொண்டு சென்று கோஷம் போட்ட போது, முன்னால் இருந்தவர் ஜே.ஆர் என்று கத்த, பின்னால் போனவர்கள் ஒழிக என்று கத்த... எல்லாமே நன்னாத்தான் போய்க்கிட்டிருந்தது. முன்னாலிருந்தவருக்கு ஏதோ அரிப்பு எடுத்து, தமிழீழம் என்று கத்த, பின்னால் இருந்தவர்களுக்கு அது கேட்காமலோ, அல்லது பழக்க தோசத்திலோ ஒழிக என்று கத்த... கொடும்பாவி எரிப்புடன் தமிழீழ ஒழிப்பும் இனிதே நடந்தேறியது. இந்தக் கொடும்பாவியின் பின்னால் உள்ள தத்துவம் தான் சிந்திக்க வைப்பது. மழை வராவிட்டால், யாரோ ஒரு கொடும்பாவி காரணமாகத் தான் மழை பெய்யாமல், நாடு அழிகிறது என்று, அந்தக் கொடும்பாவியைச் சிதையில் ஏற்றினால், மழை பொழிந்து நாடு செழிக்கும் என்ற நம்பிக்கை. நல்ல காலம் நம்ம ஊரில் கன்னிப் பெண்களைப் பலி கொடுக்கும் பழக்கங்கள் வரவில்லை. (பிறகு சுதந்திரப் பறவைகளைப் பலி கொடுக்கும் பழக்கம் வந்தது வேறு கதை!) கொடும்பாவி எரித்து நம்ம ஊரில் மழை பெய்ததோ இல்லையோ, நம்ம காட்டு வைரவருக்கு கடா வெட்டும்போது எல்லாம் 'இரத்தம் கழுவும்' மழை மதியம் இரண்டு மணிக்குப் பெய்யும். வருண பகவானுக்கு இல்லாத இரக்கம் வைரவருக்கு இருந்தது. வெறும் வைக்கோல் கொடும்பாவியை எரித்துப் பலி கொடுக்கும்போது வருண பகவானுக்கு கடுப்பு ஏறாமல் என்ன செய்யும்? ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளின் இரத்தம் கிடைத்தால் வைரவர் தண்ணீர் மழை என்ன, செந்நீர் மழையும் பொழிவார். பிறகு தமிழரசுத் தலைமைப் பதவிப் போட்டியில் தோல்வியுற்று, ஜே.ஆர் அரசில் சேர்ந்து, இந்த யாழ்ப்பாணிகளுக்குப் பாடம் படிப்பிக்கவோ என்னவோ, இந்து கலாசார அமைச்சராக வந்த இராசதுரை வைரவ வேள்வியை, மிருகபலி என்று சொல்லி நிறுத்தி விட்டார். ஆட்டு இரத்தத்தில் குஷிப்பட்ட வைரவர் சும்மா இருப்பாரோ? 'பார் குடுக்கிறன் வேலையை' என்று, மனித இரத்தத்திற்கு வழி பண்ணி விட்டார். இராசதுரைக்குப் பழிக்குப் பழி வாங்க, தமிழ்த் தேசியம் வைரவருக்கான இரத்த சப்ளைக்கு முழு வினியோக உரிமையையும் வாங்கிக் கொண்டது. பிளேட்டால் வெட்டி இரத்தத் திலகம் இட்ட தமிழ்த் தேசியத்தின் கையில் துப்பாக்கி கிடைத்து நெத்தியில் பொட்டு வைக்கும் வசதி கிடைத்ததிலிருந்து கொடும்பாவி எரிப்புக்கு தேவையிருக்கவில்லை. கொடும்பாவிகள் எல்லாம் மின்கம்பங்களிலும் குண்டுவெடிப்புகளிலும் போய்ச் சேர்ந்த போது, யாருமே மழை பெய்வது பற்றியும் கவலைப்படவில்லை. ஈழம் கிடைத்தால், தேசியத் தலைவர் பெய்யெனச் சொன்னால் பெய்யும் மழை, பிறகென்ன என்ற நம்பிக்கையாக இருக்கக் கூடும். இவ்வாறாக, தேசியத்தலைவர் நல்லாட்சியில் தமிழர்களுக்கு அநீதி இழைத்ததாகக் கருதப்பட்ட மனிதக் கொடும்பாவிகள் எல்லாம் சிவபதவி அடைய, வைக்கோல் கொடும்பாவிகள் புண்ணியம் செய்து உயிர்தப்பிப் பிழைத்தன. தமிழர்களும் கொடும்பாவி எரிப்புக் கலாசாரத்தை மறந்தே போனார்கள். அல்லது கொடும்பாவிகளுக்கு மரணதண்டனை வழங்கும் தலைவரின் ஏகபோக அதிகாரத்திற்கு தாங்களும் உரிமை கோரினால் ஏற்படக் கூடிய அபாயங்கள் பற்றி அவர்களுக்கும் தெரிந்திருக்கக் கூடும். இப்படியாக, ஒரு முப்பது வருசம் ஜாலியாகத்தான் போய்க் கொண்டிருந்தது... துரோகிகள் அழிக்கப்பட்டதும் இனிப்புக் கொடுத்து மகிழும் இன்ப அதிர்ச்சியாகவும், மற்றத் துரோகிகள் எப்போது கொல்லப்படுவார்கள் என்ற ஆவலுடனான எதிர்பார்ப்புடனும்! பருவத்தே விதை விதைத்து, பயிருக்கு பசளையிட்டு, நீர் பாய்ச்சி அறுவடை செய்யும் எண்ணமில்லாமல் வெறுமனே 'தற்கொடையாளர்களை விதைத்து', 'களையெடுத்தால்' தமிழீழம் தானே மலரும் என்ற நினைப்பில்... இந்த பொரிமாத் தோண்டிகளின் காலம் ஜாலியாகத் தான் போய்க் கொண்டிருந்தது. தமிழனின் கெட்ட காலம்! உண்மையாகவே ஒரு கொடும்பாவி வந்து சேர்ந்தான். எப்படி வந்தான், அவனை வந்து சேர விட்டது யார் என்ற 'யதார்த்தமெல்லாம்' இங்கு பேசி முடியாது. அவனுக்கும் தலைவர் வழி வைப்பார் என்று வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தார்கள். பார்த்த கண்ணும் பூத்திருக்க... அந்தக் கொடும்பாவி... ஐயகோ! எப்படிச் சொல்வேன் அந்தக் கொடுமையை என் வாயால்? 'தோல்வி நிலையென நினைத்தால்...' சரி, சரி... சீன் காட்டியது போதும்! சுப்பர் சிங்கரே! இப்போது கொடும்பாவியை அழிக்க தமிழனுக்கு ஆளில்லை. இந்த ஒரு கொடும்பாவி போதாதென்று, தலைவர் இல்லை என்ற துணிச்சலில் கொடும்பாவிகள் மூலைக்கு மூலை பல்கிப் பெருகி... இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய சமூகம், நோர்வே உட்பட்ட 37 நாடுகள், ஐநா, பான் கி மூன், புஷ், ஒபாமா, யசூசி அகாசி, எரிக் சொல்கெய்ம், சோனியா, சோ, றோ, கருணாநிதி, ஜெயலலிதா, கருணா, டக்ளஸ், ஆனந்தசங்கரி, கே.பி... சொல்லி மாளாது. லிஸ்டில் அசினும் அடக்கம்.  அருண்டவன் கண்ணுக்கு தெரிந்ததெல்லாம் துரோகிகள் தான். இப்படி லிஸ்ட் நீண்டதன் காரணம் தெரியுமா? இவ்வளவு நாளும் தலைவருக்கு எல்லாம் தெரியும், உலக நாடுகள் தங்கள் பாட்டைப் பார்க்க வேண்டியது தான், அவர் தமிழீழத்தை அடிச்சுப் பறிப்பார் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று சொன்ன கொடும்பாவிகளுக்கு எதிராகக் கோஷம் போடுமாறு வன்னியிலிருந்து கட்டளை வரும்போது கூட்டம் கூட்டிக் கோஷம் போடுவதைத் தவிர, 'மற்றெல்லாம் அவன் பாத்துப்பான்' தான். கடைசியில் கொடும்பாவி ஊருக்குள் நுழைந்த போதும், நல்லா உள்ளுக்க விட்டு அடிக்கப் போறார் என்றுதான் நம்பிக் கொண்டிருந்தார்கள். இப்படியாக, எல்லாரையும் பகைத்துக் கொண்டு ஒரே கூடைக்குள் எல்லா முட்டையையும் வைத்து, மந்தைக் கூட்டமாய் பின்னால் போன தன் முட்டாள்தனத்திற்கு யார் மீதாவது பழி போட வேண்டுமே?  தீர்க்கதரிசி எல்லாருக்கும் மணியாய் வேலையைக் கொடுத்து, ஈழம் எடுத்துத் தருவார் என்று காசை அள்ளிக் கொட்டி, ஆயிரக்கணக்கில் போராளிகளைப் பலி கொடுத்தும், தங்களைப் படுகுழியில் தள்ளி விட்ட மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய பொட்டுக் கேட்டை மறைக்க யார் தலையிலாவது பழியைப் போட வேண்டுமே? அது தான் 'இந்தத் துரோகிகள் சதி செய்யாவிட்டால், தலைவர் ஈழம் எடுத்திருப்பார்' என்ற கதை. அதன் விளைவு தான் இந்த முடிவேயில்லாத கொடும்பாவி லிஸ்ட். முன்பு அந்த லிஸ்ட்டில் நாங்களும் இருந்ததுண்டு. உவங்கள் உப்பிடி எழுதிறதால தான் தமிழீழம் கிடைக்கேலை என்று நம்மையும் கொடும்பாவி ஆக்கியவர்கள் உண்டு. அவர்கள் எல்லாம் இப்போது தேசியத்தின் பெயரால் சேர்க்கப்பட்ட கோடிக்கணக்கான பெரும் சொத்துப் பத்துக்களை, இலக்குமணன் பாதணிகளை வைத்து ஆட்சி செய்தது போல, தலைவர் வரும் வரைக்கும், பரிபாலிக்கிறார்கள். யுத்தம் முடிந்து ஐந்து வருடங்களுக்கு மேலும் ஆனாலும், தமிழனின் அரசியல் இப்படி இன்னொரு விதத்தில் ஜாலியாகப் போய்க் கொண்டிருந்தது. இன அழிப்பு, யுத்தக் குற்றம், சர்வதேச விசாரணைக் கோஷங்களுக்கு அவ்வப்போது ஏதாவது எதிரான கருத்துக் கொண்டவர்கள் எல்லாம் கொடும்பாவிகளாக... தங்கள் நிலைமைக்கு தங்களைத் தவிர உலகில் உள்ள மற்றவர்கள் தான் காரணம் என்று காலம் போய்க் கொண்டிருந்தது. இருந்தாலும் கொடும்பாவி எரிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகவில்லை. பின்பு தான் தமிழனுக்கு உண்மையான சனியன் பிடித்தது... ஒரு சாத்திரியார் ரூபத்தில்! மகிந்தவை இரண்டு வருடங்களுக்கு முன் தேர்தலை நடத்தினால் வெல்லலாம் என்ற ஆலோசனையுடன்! ஒரு சில மாதங்களுக்குள் எல்லாமே தலைகீழாகி... தமிழன் திகைத்துப் போனான்! இதென்னடா, ஆதரவளித்த சிறிசேன ஜனாதிபதியாகிறார். அடுத்தது மகிந்த கழுவிலேற்றம் தான். இனிமேல் தங்களுக்கு எதிராக எழுதும் எவரையும் 'சிறிசேனவிட்ட காசு வாங்கினவன்' என்று துரோகியாக்க முடியாது. இதுவரையும் திட்டித் தீர்த்த துரோகிகளான டக்ளசும், கருணாவும் பதவியிலிருந்து கவிழ்ந்து தேடுவாரற்றுப் போகிறார்கள். இனிமேல் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் களவுகளுக்கும் கொள்ளைகளுக்கும் யார் மீதும் பழி போட முடியாது. போதாக்குறைக்கு வட மாகாணம் கூட்டமைப்பின் கையில். அதுவும் போதாமல், கட்டப்பஞ்சாயத்துச் செய்ய திருமதி மண்ணெண்ணெயார்! மறுபுறத்தில் இந்தியாவில் ஆறுமுகநாவலர் வளர்த்த சைவத்தின் வாரிசாய் மோடி! அதுவும் யாழ்ப்பாணம் வரப் போகிறாராம். தமிழ்நாட்டின் ஜெயலலிதாவின் பாதணிகளுடன் பன்னீர்ச்செல்வம்! அமெரிக்காவின் தூதுவரான இந்தியப் பெண் வேறு வந்து... தமிழர்களுக்கு உரிமை கிடைக்கும் வரைக்கும் அமெரிக்கா ஓயாது என்கிறார். ஐ.நா அறிக்கையை வெளியிடப் பிந்தினாலும், இன்னும் சாட்சிகளைக் கொண்டு வாருங்கள் என்கிறது. போப்பாண்டவர் வேறு தமிழீழத்தின் மண்ணில் கால் வைத்து ஆசீர்வதித்து விட்டார். திடீரென்று தமிழன் கொடும்பாவிகள் யாருமில்லாமல் திகைத்துப் போனான். யாரையாவது பிடித்துத் திட்டி, தன்னுடைய தவறுகளுக்குப் பழி போட்டே பழகி, துரோகியாக்கி, கொடும்பாவியாக்கிய தமிழன் வரலாற்றில் முதல் தடவையாக எதிரிகள் இல்லாமல் விறைத்துப் போனான். தினவெடுத்த தோள்கள் சும்மா இருக்குமா? கொடும்பாவிகளை மண்டையில் போட்ட கைகள் செயலற்றுக் கிடக்கலாமா? கொலை வெறி கொண்ட தமிழனுக்கு உடனடியாக ஒரு கொடும்பாவி தேவை! அமெரிக்காவுக்கும் ஐநாவுக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் செய்தாலும், பிரச்சனையைத் தீர்க்க அவர்களிடம் தான் போக வேண்டும். வசமாக மாட்டுப் பட்டார்கள், சுதந்திர தினத்திற்குப் போன சம்பந்தனும் சுமந்திரனும்! சரி, இனி மீதியைக் கடவுளோடு பேசுவோம்! கடவுளே, எங்களுக்கு இடையில் உள்ள சில கொடுக்கல் வாங்கல் பிரச்சனையால் நான் உமது வீட்டு வாசற்படியை கொஞ்ச நாளாய் மிதிப்பதில்லை என்பது உமக்குத் தெரியும். நமக்கு இடையில் சமரசம் செய்து வைக்க, உமக்கு தினசரி பூசை செய்கின்ற எனது அண்ணன் முயற்சி செய்தும் நான் இறங்கி வராதது பற்றி அவன் உமக்கு கொம்பிளெய்ன் பண்ணியிருக்கக் கூடும். இப்போதும் நான் தமிழன்கள் மாதிரி, எனக்கு ஏதோ தேவைப்பட்டுத் தான் வந்து மயிந்திறன் என்று நீர் நினைக்கக் கூடாது. நான் ரோஷக்காரன். மதியாதார் தலைவாசல் மிதித்ததில்லை. இது முழுக்க முழுக்க உம்முடைய பிழை. மற்றவர்களுக்கு அழிவு நடந்தால் எரியிற வீட்டில பிடுங்கக் கூடாது, அநீதி நடந்தால் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்று நீர் தான் நம்மைப் படைத்து படிப்பித்தீர். ஆனபடியால் இந்தத் தமிழனைப் பார்த்து மனம் தாங்க முடியாமல் தான் இன்றைக்கு உம்மிடம் வந்திருக்கிறேன். உமக்கு இந்தத் தமிழனை நல்லாகத் தெரிந்திருக்கும். ராமநாதனுக்குப் பின்னால் போய், பிறகு ராமநாதனை பொன்னம்பலம் துரோகி என்று சொல்லி, பிறகு பொன்னரை தந்தையும் தளபதியும் துரோகி என்று சொல்லி, பிறகு தளபதியைத் பிரதித் தலைவர் துரோகி என்று மண்டையில் போட்டு, பிறகு பிரதித் தலைவரைக் கேணல் மண்டையில் போட்டு, பிறகு கேணலை தலைவர் மண்டையில் போடத் திரிந்தது எல்லாம் உமக்குத் தெரியும். இப்படி ஒருவனுக்குப் பின்னால் செம்மறி போலப் போவதும், பின்னால் அவன் செய்தவற்றுக்கு ஒரு துளி நன்றியும் இல்லாமலும், இவ்வளவு நாளாக அவனைத் தூக்கிப் பிடித்தேனே என்ற வெட்கமும் இல்லாமல் அவனைத் துரோகி என்று திட்டியதுமாகத் தான் தமிழ் அரசியல் வரலாறே இருக்கிறது. தலைவர் வரைக்கும் எல்லாமே நன்னாத் தான் போய்க்கிட்டிருந்தது. தலைவர் தனக்குப் பிறகே ஆளே இல்லாமல் எல்லாத் தலைவர்களையும் போட்டுத் தள்ளிய பின்னால், தலைவரைத் துரோகி என்று விட்டுப் பின்னால் போக இந்தத் தமிழனுக்கு யாருமே இருக்கவில்லை. மிஞ்சி இருப்பதெல்லாம் காய் அடித்த எருமை மாடுகள் தான். பின்னால் போவதற்கு இவர்களுக்கு தலைவர்கள் இல்லாவிட்டாலும், அள்ளுகொள்ளையாகக் கொடும்பாவிகள் கிடைத்தார்கள். பழியை அவர்கள் மேல் போட்டு விட்டு, ஜாலியாக எருமைச் சவாரி செய்து கொண்டிருந்தார்கள். இப்போது எல்லாம் போச்சு! இப்ப இந்தத் தமிழன் ஆளில்லாமல், பழக்க தோசத்தில 'துரோகம் இழைத்து விட்டார்கள்' என்று தொடங்கி இருக்கிறான், கொடும்பாவி எரிக்க! அதுவும் வெளி எதிரிகளை இல்லை. தானே தெரிந்தெடுத்த தலைவர்களை! கடவுளே, இதைப் பார்க்க, நமக்கு இதெல்லாம் நல்லதுக்கு இல்லை என்றே படுகிறது. நீர் சொல்லக் கூடும். பிரேமதாசாவோட கதைக்கேக்கை ராஜதந்திர நகர்வு என்று சொல்லக் கேட்டுக் கொண்டிருந்தவங்கள் தானே, இப்ப சம்பந்தன் இணக்க அரசியல் எண்டவுடன ஏண்டா துள்ளிக் குதிக்கிறாங்கள் என்று. கடவுளே, குருக்கள் எது செய்தாலும் குற்றமில்லை என்று உமக்குத் தெரியும். உந்தக் கூட்டத்திற்கு இணக்க அரசியல் என்றால் என்ன, இராஜதந்திர நகர்வு என்றால் என்ன என்ற விளக்கம் இருந்தால், ஏன் இவ்வளவு தொல்லையும்? அட, அவன் விமானப்படை, ஈரூடகப்படை வைச்சிருந்தவனாலேயே ஈழம் எடுக்கேலாமல் போச்சு, உவங்கள் உந்தச் சம்பந்தனாலை என்ன செய்யேலும் எண்டு நினைக்கிறாங்கள் என்று நீர் கேட்கக் கூடும். கடவுளே, உந்த கேள்வி, விளக்கங்களை நீரே அவர்களுக்குச் சொல்லிக் கொள்ளும். உந்தக் கூட்டத்திற்கு பகுத்தறிவு இருக்கு என்று நீர் நம்புறதே பெரிய விசயம். கடவுளே, சம்பந்தனையும், சுமந்திரனையும் துரத்தினால் கட்சியில் சேரத் தயார் என்று சொல்கிற, கஜ, துரக் கூட்டத்தை உள்ளே எடுத்தாலும், ஏற்கனவே அது மக்களால் கைவிடப்பட்ட கூட்டம். வோட் கிடைக்காது. மாவையும் சுரேசும் 'அண்ணை எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும்?' என்று தவமிருந்தாலும், சுமந்திரன் பட்டத்து இளவரசன். மாவையோ, சுரேசோ வந்தாலும் இந்தக் கதை தொடரத் தான் போகிறது. ஏன் தெரியுமோ? தேசியத் தலைவர் போகேக்கை சொல்லிப் போட்டுப் போனாரே, இனிமேல் போராட்டம் புலன் பெயர்ந்தவர்கள் கையில் தான் என்று. அதை வேதவாக்காக நம்பிய இந்த புலன் பெயர்ந்த கூட்டம், முகப்புத்தகத்தில் பின்னூட்டம் விடுவதைப் போராட்டமாக நம்பிக் கொண்டிருக்கும் பரதேசிகள் முதல், இயக்கத்திற்குப் பணம் சேர்த்து இளநீர் குடித்தவர்கள் கோடிக் கணக்கில் சுருட்டிக் கொண்டு மாற, மிஞ்சியிருக்கிற கோம்பை சூப்பிய பேய்வெட்டிகள் வரையும், ஈழத்தமிழரின் தலைவிதி தன் கையில் என்ற நினைப்பில், தான் நினைக்கிறதைச் செய்யிறதுக்கு ஆள் தேடிக் கொண்டிருக்குது. வேலை வெட்டி இல்லாத கூட்டம். போராட்டத்தினால பயன் அடைஞ்சு வெளிநாட்டு சிட்டிசன்ஷிப், பாஸ்போட்டுகளோடு இரட்டைக் குடியுரிமைக்கும் காசு குடுக்கப் பஞ்சிப்பட்டுக் கொண்டு, தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் உரிமை தனக்குத் தான் இருக்கிறது என்று விலாசம் காட்டுது. தேசியத் தலைவர் தான் நினைச்சதைச் சொல்ல தனக்கு மது உரைஞரை வைச்சிருந்த மாதிரி... தாங்கள் நினைக்கிறதை அங்க செய்ய! இது என்னத்தை நினைக்குது என்று இதுக்கே தெரியாது. இந்தக் கூட்டம் நாடு கடந்த அரசா, தேசிய அவையா, குளோபல் போறமா, முப்பாட்டனின் கொள்ளுப்பேரனா, நெடியவனையா, கூட்டமைப்பா, சுரேசையா, மாவையையா, அனந்தியா, குதிரையா, இப்போ பத்தாக்குறைக்கு வித்தியாதரனையா, யாரை ஆதரிப்பது என்று குழம்பிப் போயிருக்குது. இவ்வளவு நாளும் போர்க் கொடி தூக்கின கூட்டம் சிலது, இங்கே இணக்க அரசியல் பேசி, சிறிசேனவுக்கு வாழ்த்துச் சொல்லுது. அவ்வளவுக்கு புலன் பெயர்ந்த அரசியல் நாறிப் போய்க் கிடக்கு. மாவை வந்தால் என்ன? குதிரை வந்தால் என்ன? அனந்தி வந்தால் என்ன? யார் வந்தால் என்ன? இந்தக் கூட்டத்தை குஷிப்படுத்த அறிக்கை விடலாம். அங்கே இருந்து இங்கே ஸ்கைப் பேட்டி கொடுத்து உசுப்பேத்தலாம். ஆனால் அரசியலில் பொறுப்பு வந்தவுடன், உந்தப் புலுடாக் காட்ட முடியாது. அதுவும் மற்றப் பக்கத்தில் எதிர்ப்பதற்கு ஆளில்லாவிட்டால், என்ன நிலாவைப் பார்த்தா குரைக்க முடியும்? விக்கினேஸ்வரன் மாதிரி இன அழிப்பு வீராவேசம் காட்டினாலும், அடுத்தநாள் ஓடிப் போய் காலில் விழத் தான் வேண்டும். இந்த லூசுக் கூட்டத்திற்கு, தானே ஆதரித்தவர்களை 'துரோகம் இழைத்து விட்டார்கள்' என்று முத்திரை குத்தி கொடும்பாவி எரிக்க நேரம் கன எடுக்காது. அங்கே கூட்டமைப்புக்கு யார் தலைவராக வந்தாலும் எண்ணி நூறு நாள் போதும், 'துரோகம் இழைத்து விட்டார்' பல்லவி தொடங்க! இவர்களுக்குத் தெரிந்த அரசியலே செம்மறி போலப் பின்னால் போவதும், கோரஸாக 'துரோகம் இழைத்து விட்டார்' என்று திட்டுவதும் தான். அரசியல் என்பது அடித்துப் பறிப்பதல்ல, சமரசங்களுடன் கூடியது என்பது இதுக்கு சொல்லியும் விளங்காது. கடவுளே, உமக்கே தெரியும், முள்ளிவாய்க்காலில் அழியும் போதும் இந்தத் தமிழன் கடவுளே காப்பாத்து என்று கத்தவில்லை. அமெரிக்கா காப்பாத்தும் என்று தான் நம்பிக் கொண்டிருந்தான். அது உமக்குக் கோபமாயிருக்கும் என்பது எனக்கும் தெரியும். இருந்தாலும், ஏற்கனவே மந்தைக் கூட்டம் மாதிரி, ஒருவனுக்குப் பின்னால் போய் பாழுங் கிணற்றுக்குள் விழுந்து விட்டோமே என்ற எண்ணம் இல்லாமல், அதற்குள்ளால் வெளியில் வருவதற்கு கூட முயற்சிக்காமல், தங்களுக்குள்ளே குத்துப்பட்டு இந்தத் தமிழன் வீணாய் அழிந்து நாசமாகப் போகிறான். நீர் ஒன்றும் எனக்குக் கனக்கச் செய்யத் தேவையில்லை. நான் என்ன தமிழனுக்கு புத்தியைக் கொடு, பகுத்தறிவைக் கொடு என்றா கேட்கிறேன்? உமக்கே தெரியும், உம்மால் முடியாத எதையும் நான் இதுவரையும் கேட்டதில்லை. நான் கேட்பதெல்லாம்... குலைக்கிற நாய்க்கு எலும்புத் துண்டை எறிந்தால், அது அதைக் கடித்து விளையாடிக் கொண்டிருப்பது போல... இவன் தனக்குள்ளே குத்துப்பட்டு அழிந்து போகாமல், ஒற்றுமையாக நின்று தன்னுடைய முட்டாள்தனத்திற்கு பழி போட்டே காலத்தைக் கழிக்க... இந்தத் தமிழனுக்கு ஒரு கொடும்பாவியைக் கொடு என்பது தான்.

    பின்குறிப்பு...

    கடவுளே... சில நேரம் உமக்கும் இந்தத் தமிழர்கள் மாதிரி குறுக்குப் புத்தி வந்து, நம் மீதான கோபத்திற்கு வழி பண்ண, நம்மைப் பிடித்து மாட்டி விடும் எண்ணம் உமக்கு வரக் கூடும். இந்தத் தமிழன்களுக்கு எல்லாம் ஏக கொடும்பாவியாக இருப்பதில் நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் அதன் பின்னால் உம்மைக் காப்பாற்றவே ஆளில்லாமல் திண்டாட வேண்டி வரும். உமக்கு இந்தத் தமிழன் பற்றித் தெரியாது. கொஞ்ச நாளாய் செல்வநாயகம் வேறு எதற்கோ சொன்னதையும், பின்னர் தேசியத் தலைவர் இறக்கும்போது அவரது மரணப் படுக்கைக்கு அருகில் நின்ற யாரோ கேட்டுச் சொன்னதையும் இந்தத் தமிழன் இப்போது மந்திரம் போல உச்சரித்துக் கொண்டிருக்கிறான். ஒருதரும் தேவையில்லை, தலைவர் காப்பாற்றுவார் என்ற கூட்டம் இப்ப புது மெட்டு எடுத்திருக்குது. 'தமிழரை இனிமேல் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்'. இது உமக்கு நல்லதுக்கு மாதிரி என்று எனக்குப் படவில்லை. இந்தியா காப்பாற்று, வந்திறங்கு என்று ஒட்டாவாவில ஊர்வலம் போட்டு, பிறகு என்ன நடந்தது என்று உமக்குத் தெரியும். இப்படி தன்னைக் காப்பாற்றுவார்கள் என்று நம்பி, மந்தைக் கூட்டம் மாதிரி பின்னால் வால் பிடித்த எல்லாரையும் இந்தத் தமிழன் என்ன செய்தான் என்பது உமக்கே தெரியும். தளபதி என்று இரத்தத் திலகம் வைத்த அமிர்தலிங்கத்தை, துரோகி என்று மண்டையில் போட்ட போது விசில் அடித்த கூட்டம் இது. கேணல் என்று தூக்கித் தலையில் வைத்துக் கொண்டாடிய பின்னால், 'ஐயோ, இந்தத் துரோகிக்கு தலைவர் மண்டையில் போடாமல் விட்டதால் தான் ஈழம் கிடைக்கேலை' எனப்படுகின்ற துரோகிகள் முதல், தானே தேர்தலில் வோட்டுப் போட்டு வெல்ல வைத்த பின்னால் இப்போது கொடும்பாவியாக எரிக்கிற துரோகிகள் வரை இங்கே உண்டு. இந்தக் கூட்டம் என்ன மாதிரியான விளப்பமான கூட்டம் என்று உமக்கு விளங்காது. இருபது வருடங்களுக்கு முன்னால், தாங்கள் நடத்திய ஊர்வலத்தில், வீடியோ எடுத்த தங்கள் ஆளையே 'அடேய், தாயகம்காரன்களடா' என்று அடித்து, கமெராவை உடைத்தது இந்தக் கூட்டம். தங்களுக்கு வரி கட்டிய தமிழ்க் கடைகளுக்குள் நுழைந்து அங்கிருந்த துக்ளக்கையும், தினமுரசையும், இலங்கை விற்பனைத் திணைக்கள ஜாமையும், யானை மார்க் சோடாவையும் எடுத்து நடு றோட்டில் போட்டு எரித்து, உடைத்த கூட்டம் இது. பிறகு 'கடவுள் துரோகம் இழைத்து விட்டார்' என்று கோயில்களுக்குள் நுழைந்து உமது சிலைகளை நடுறோட்டில் உடைக்கத் தொடங்கினால், உம்மைக் காப்பாற்றவே ஆள் கிடைக்காது. ஏதோ உமது நன்மைக்குச் சொல்லியிருக்கிறேன். என்ன செய்யிறீரோ ஏது செய்யிறீரோ, முடிந்தவரையில் உம்மால் இயலக்கூடியதைச் செய்து, ஒரு கொடும்பாவியை அவசரமாய்க் கண்டுபிடித்துக் கொடுத்து, உம்மைக் காப்பாற்றிக் கொள்ளும். (பின்குறிப்புக்கும் ஒரு பின்குறிப்பு... நான் கஷ்டப்படுவதைப் பார்த்துக் கொண்டு நீர் சும்மா இருந்தாலும், நீர் கஷ்டப்படுறதைப் பார்த்து நான் சும்மா இருக்கக் கூடியவன் இல்லை. உமக்கு ஒரு இரகசியம் சொல்லப் போகிறேன். உம்மைக் காப்பாற்ற உமக்கு மேலும் ஒருவர் இருக்கிறார். உமக்குப் போட்டியாக இருந்த அந்த சூரியதேவன் கொஞ்ச நாளைக்கு முன்னால் முள்ளிவாய்க்காலில் இறந்து போனார் என்று நீர் நினைத்துக் கொண்டிருக்கிறீர். இந்தத் தமிழனை விட, உமக்கென்ன கனக்கத் தெரியுமோ? அவர் எங்க இருக்கிறார் என்ற ரகசியம் இந்த மாவீரர் தினக் கொண்டாட்டம் நடத்திற தமிழர்களுக்குத் தெரியும். அடுத்த பிறந்த நாளுக்கு சட்டலைட்டுக்குள்ளால வாறார் என்று அவர்கள் சொல்லி, மாவீரர் தினத்திற்கு போவதற்கும் மற்றத் தமிழர்கள் ரெடியாய் இருக்கிறார்கள். நம்பத் தகுந்த வட்டாரங்களுக்குள்ளால கசிஞ்ச செய்தி... அவர் எரித்திரியாவில் இருக்கிறார். இந்த விசயத்தை வெளியில் விடாமல் உம்மோடயே வைச்சுக் கொள்ளும். இது உண்மையான தமிழுணர்வாளர்களுக்கும் உமக்கும் எனக்கும் மட்டும் தான் தெரிந்த இரகசியம்.  அவரோடு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, உம்மை 'யதார்த்தவாதி' என்று சொல்லுவித்து உமது சகல பிரச்சனைகளுக்கும், ஏன் உலகின் சகல பிரச்சனைகளுக்கும், தீர்வு தேடலாம்.)

    Postad



    You must be logged in to post a comment Login