Recent Comments

    கடன் பட்டார் நெஞ்சம் போல் கலக்குங்கள்!

    thayagam featured-mortgage1ஊரில் களம் பல கண்ட உங்களுக்கு, வேலிச் சண்டை இல்லாமல் தோள்கள் தினவெடுக்க... 'காணி நிலம் வேண்டும், பராசக்தி' என்று வீடு வாங்கும் கனவில், வீட்டு விற்பனை முகவரைப் பிடித்து, மார்க்கம், ஸ்ரூஃப்வில் எல்லாம் நிறைந்து வழிந்ததால், பிக்கறிங் பக்கமாய் வீடு பார்த்திருப்பீர்கள். இப்படியே போனால், ஒன்ராறியோ எல்லையில் கோர்ண்வால் கடந்து, ரொறன்ரோவை நிறைத்துள்ள நம் முன்னோர், கியூபெக்கில் வந்திறங்கிய மொன்றியலில் தான் போய் நிற்பீர்கள். வீடு வாங்கியதும் வீட்டுக் கடன் பெற வேண்டுமே? நேரடியாக வங்கியில் போய், வருமானத்தைக் காட்டிக் கடன் பெற முடியும் என்றாலும், அதற்கான ஆதாரங்கள் இல்லாமல், 'மசுக்கிடாமல் வேலையை முடிக்க', வேறு வழியின்றி தமிழ் மகன்களான வீட்டுக் கடன் முகவர்களிடம் போக வேண்டியிருக்கும். வீட்டு முகவரே தனக்குத் தெரிந்த கடன் முகவர்கள் அல்லது தனது நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் கடன் முகவர்களிடம் அனுப்பக் கூடும். சில நேரங்களில்  உங்கள் வீட்டு விற்பனை முகவரே, அனுமதி பெற்ற கடன் பெற்றுக் கொடுக்கும் முகவராகவும் செயற்படக் கூடும். தானே வீட்டுக் கடனையும் பெற்றுத் தருவதாகச் சொன்னால்,  அவர் ஒட்டுமொத்தமாக உங்களைச் சுத்த முயற்சிக்கிறார் என்ற சந்தேகமும் உங்களுக்கு வரக்கூடும். (பழக்க தோஷம்! உங்களைச் சொல்லிக் குற்றம் இல்லை. இனம் என்றே பாராமல் பரஸ்பரமாய் தலையில் மிளகாய் அரைத்துச் சுத்தும் சமூகம் இது!) ஒன்ராறியோ சட்டப்படி ஒருவரே இரண்டு பணிகளையும் செய்யலாம். இருந்தாலும், நீங்கள் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள சில விடயங்களை அறிந்திருப்பது நல்லது. வீடு விற்பனையில் தானே உங்கள் பிரதிநிதியாகச் செயற்படுவதாக விற்பனை முகவர் உங்களிடம் ஒப்பந்தம் செய்து கையொப்பம் வாங்கும்போது, தானே கடன் முகவராகவும் செயற்படுவதாக எழுத்து மூலமாக உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அத்துடன் கடனைப் பெற்றுத் தருவதில் தனக்குக் கிடைக்கும் கொடுப்பனவு பற்றியும் அவர் தெரிவிக்க வேண்டும். வீட்டு விற்பனை முகவர்களும், கடன் முகவர்களும் உங்களுக்கு சேவை வழங்கும்போது தங்களுக்கு மற்றவர்களிடம் இருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ கிடைக்கும் கொடுப்பனவு பற்றி உங்களுக்கு எழுத்து மூலமாகத் தெரியப்படுத்த வேண்டும். இது குறித்த சந்தேகங்கள் இருந்தால் முதலிலேயே அவரிடம் அதைக் கேட்டு தௌpவு பெறுங்கள். அல்லது வழமை போல, வீட்டு விற்பனை முகவர் தனக்குத் தெரிந்த அல்லது வர்த்தகத் தொடர்புகளைப் பேணுகின்ற கடன் முகவரிடம் உங்களை அனுப்பலாம். ஆனால் அவரிடம் தான் கடனைப் பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நீங்கள் விரும்பினால், நேரடியாகவே வங்கிகளிடம் சென்று கடன் பெறலாம். ஆனால், கடன் முகவர்கள் பல்வேறு நிதிநிறுவனங்களுடன் தொடர்பு கொண்டவர்கள் ஆதலால், உங்களுக்குப் பொருத்தமான கடன் வசதியை, சரியான வட்டி விகிதம், நிபந்தனைகளுடன், சரியான நிறுவனத்திடமிருந்து பெற்றுத் தர முடியும். ஆனால் கடன் முகவரிடம் அனுப்பும் போது, அந்தக் கடன் முகவரிடம் இருந்து தனது வீட்டு விற்பனை முகவர் நிறுவனத்திற்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதை விற்பனை முகவர் உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். ஏனெனில் விற்பனை முகவருக்கு அவரது விற்பனை முகவர் நிறுவனமே அந்தப் பணத்தைச் செலுத்த வேண்டும். விற்பனை முகவர் நேரடியாக அதை கடன் முகவரிடமிருந்து பெற முடியாது. இந்த விபரங்களை தெரிந்து, சரியான முறையில் விற்பனை முகவர்களுடனும் கடன் முகவர்களுடனும் சேர்ந்து செயற்பட்டால் 'ஐயோ, நாசமறுவான் உந்தப் பழைய வீட்டை எங்கடை தலையைச் சுத்தி, தலையில கட்டிப் போட்டான்' என்று திட்டித் திரியத் தேவையில்லை. (மொன்றியல் எல்லையில் இருந்து திரும்பவும் ஒன்ராறியோவுக்கு இடம் பெயரும் அனாவசிய செலவும் ஏற்படாது.) விசயம் தெரியாமல் கடனை வாங்கிக் கலங்காமல், இவ்வாறாக வீடு வாங்குதல் பற்றிய அறிவைப் பெருக்கி, கடன் பட்டார் நெஞ்சம் போல் கலக்குங்கள்! சுவடி மாசி 2015

    Postad



    You must be logged in to post a comment Login